அழகுதழுவிய மூணாறு - உடுமலை அருகே மரையூர் உள்ளது. அங்கே மிகப்பழைய ஓவியங்கள் பாறைகளில் உள்ளன. அவற்றில் மான்கள் (deer), மரைகள் (antelopes) கொண்ட ஓவியங்கள் பல இன்றும் பார்க்கலாம். அதேபோல மரையூர் நாகை மாவட்டத்திலும் உண்டு. அறிவியலுக்குப் பொருத்தமாக, திருமரைக்காடு என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படல்வேண்டும் எனப் பல பேராசிரியன்மார் எழுதியுள்ளனர். உ-ம்: 2008-ல் பேரா. தி. நெடுஞ்செழியன் (திருச்சி) மின்தமிழ் மடல். கொங்குப்புலவர் துடிசைக்கிழார் 1943-லிலேயே இதனை எழுதியுள்ளார் (கழகத் தமிழ் வினாவிடை). கழகம், இங்கே சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். வேதாரணியத்து மக்கள் பலரும், தமிழ்ப் புலவர்களும் திருமரைக்காடு என்றே பயன்படுத்துகின்றனர். தமிழ்மக்கள் அனைவரும் திருமரைக்காடு என்று பயன்படுத்தும்வகையில் மரைகள் சூழ்ந்த இவ்வூருக்கு பெயரை அறிவிக்க தமிழக அரசு ஆவன செய்தல்வேண்டும். மரைக்காடு *antelope forest* (Vedaranyam is known for its black bucks). வெண்கடம்பு - கடற்கரையில் வளரும் மரம். அதாவது, மரவம். மரவக்காடு மரைக்காடு அருகே உள்ளது. மரவக்காடு ஓர் தேவாரஸ்தலம். மரவக்காட்டில் உள்ள திருக்கோயில் அகத்தியான்பள்ளி. மரவக்காட்டுக் கடற்கரையில் தான் 1930-ல் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றது - ராஜாஜி தலைமையில். திருமரைக்காட்டின் சர்தார் வேதரத்தினம் கலந்துகொண்டு பலவகையில் உதவினார்.
மரவம் என்ற சொல் தமிழ்நிலங்களிலே வரும்போது கடம்ப மரங்களின் வகைகளைக் குறிப்பதாகும். தேவாரத்திலே ஏராளமான பாடல்களில் மரவம் குறிப்பிடப்படுகிறது. அங்கெல்லாம், மரவம் = கடம்பு என்று பொருள்கொள்வது பொருத்தமுடைத்து. சிலர் லெக்ஸிகானில் குங்கும மரம் எனப் பார்த்து, குங்குமம் என சில தேவாரப் பாடல்களில் அண்மைக் கால உரைகள் செய்துள்ளனர். சுமார் 50 ஆண்டு முன்னர். ஆனால், அவ்வுரை பொருந்தாது என்பது என் கருத்து ஆகும். ஏனெனில், குங்கும மரம் (Saffron) தென்னிந்தியாவில் இல்லாதது. ‘மரவமுந் துருக்கமுங் குங்கும மரமே’ பிங்கலம், சூளாமணி நிகண்டு. துருக்கம் - கஷ்மீர மலையில் வளரும் குங்கும தாவரம் என்பது பொருள். இதனை அகராதியில் பார்த்து தேவாரப் பாடலுக்கு பொருள் சொன்னால் பொருளில்லை. மரவம் = கடம்பு வகைகள்.
(கடம்பு, வெண்கடம்பு, செங்கடம்பு, மஞ்சட்கடம்பு, நீர்க்கடம்பு, வெள்ளைக்கடம்பு, ... Indian oak trees)
வேதாரண்யம் பகுதி மரைகளுக்குச் சிறப்பான பகுதி - தமிழ்நாட்டிலேயே.
ர/ற மாற்றத்தை உணராமல் மறைக்காடு என்று கொண்டு வேதாரண்யம் என ஆயிற்று.
பெண்ணைத் தென்பால் வெண்ணைநல்லூர் - தேவாரம். இதன் பழைய பெயர்
பெண்ணைநல்லூர் என்பது தெளிவு. எழுத்துச் சான்று வெண்ணெய்நல்லூர்,
எனவே, வெண்ணெய் புராணங்களை அப்படியே எடுத்துக்கொள்வதா??
பெண்ணைநல்லூர் (> வெண்ணைநல்லூர்) பழம்பெயர் என்பதுபோல, மரைக்காடு (> மறைக்காடு) பழம்பெயர்.
வேதாரண்ய புராணம் மறைக்காடு என்ற பெயரை வைத்து உருவானது.
கதவு மறைத்திருந்ததாம். பாடல் பாடத் திறந்தது என்கிறது பெரியபுராணம்.
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் வணங்கச் சென்றபோது, திருக்கோயிலின் கதவு அடைக்கப்பட்டிருந்த தென்றும்,
கண்ணினால் உமைக்காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே”
என்று திருநாவுக்கரசர் பாடிய நிலையில் கதவு திறந்தமையால், இருவரும்மறைக்காட்டு இறைவனைக் கண்டு பாமாலை பாடிப் போற்றினர் என்றும், மீண்டும் திருக்காப்புச் செய்வதற்குத் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார் என்றும் திருத்தொண்டர் புராணம் கூறும்.
சிலம்பின் உரைகாரர்கள் மரவம் = வெண்கடம்பு என்று கூறியுள்ளனர்:
வேட்டுவ வரி
மரவம் பாதிரி புன்னை மணங்கமழ்
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செயும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே ;
உரை
"மரவம் ...... முன்றிலே" மரவம் பாதிரி புன்னை மணம் கமழ் குரவம் கோங்கம் மலர்ந்தன - வெண்கடம்பும் பாதிரியும் புன்னையும் மணம் வீசும் குராவும் கோங்கமும் ஆய இவை பூத்தன; கொம்பர்மேல் அரவ வண்டு இனம் ஆர்த்து உடன்யாழ் செயும் - அவற்றின் கொம்புகளில் ஒலியினையுடைய வண்டுக் கூட்டம் முழங்கி வீணைபோலப் பாடும்; திருவ மாற்கு இளையாள் திருமுன்றிலே-திருமாலுக்கு இளையாளுடைய முன்றிலின் கண்;
யாழ்செயும் - யாழின் இசைபோலப் பாடும். திருவ என்பதன் கண் - அசை. இவை முன்றிலின் சிறப்பு.
வெண்கடம்பு - Barrintonia Calyptrata
செங்கடம்பு - Barringtonia Acutangula
வெண்கடம்பு:
இதனைச் சிந்தாமணியில் திருத்தக்க தேவரும், பின்னாளில் குமரகுருபர சுவாமிகளும் அழகான ஓர் உவமை கொண்டு விளக்கியுள்ளனர்.
இரங்கு மேகலை யல்கு கடிமல ரவிழ்ந்தன காயா
வுலக மன்னவன் றிருநா ளொளிமுடி யணியந்துநின் றவர்போற்
பலவும் பூத்தன கோங்கம் பைந்துகின் முடியணிந் தவர்பின்
னுலவு காஞ்சுகி யவர்போற் பூத்தன மரவமங் கொருங்கே. சீவக சிந்தாமணி 1558
கோங்கங்கள் பலவும் மாநிலத்தரசனுக்கு முடிசூட்டு நாளிலே, முடி சூடிச் சேவிக்கும் மன்னரென மலர்ந்தன; மரவம் அங்கு ஒருங்கே பைந்துகில் முடி அணிந்து அவர்பின் உலவு காஞ்சுகியவர்போல் பூத்தன - மரவங்கள் அக்காட்டில் ஒன்று சேர, மயிர்க்கட்டுக் கட்டி அவ்வரசர் பின்னே திரியும் மெய்ப்பை புக்க மிலேச்சரைப் போலப் பூத்தன.
மிலேச்சர்களின் மெய்ப்பைகளில் தொங்கும் tassels - மரவ மலர் போன்ற உருவம்.
குமரகுருபரர், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்:
மாடகக் கடைதிருத் தின்னரம் பார்த்துகிர்
வடிம்புதை வருமந்நலார்
மகரயாழ், மழலைக்கு மரவங்க ணுண்டுகில்
வழங்கக் கொழுங்கோங்குதூங்
இங்கே, ”மரவங்கள் நுண்துகில்” என்பதற்கு உவேசா எழுதுகிறார்:
மரவம் - வெண்கடம்பு; அதன் மலர் துகில் போல்வது (சீவக. 1558.)
நா. கணேசன்
மரவக்காடு - தஞ்சாவூர் கடற்கரை அருகே இருக்கும் ஊர். இங்கே அகத்தியான்பள்ளி என்ற தேவார தலமும் இருக்கிறது.
மரவம் = வெண்கடம்பு மரம். மரவத்துக்கு நீபம் என்பது வடமொழிப்பெயர்.
மரவம் maravam , n. perh. மரு¹. 1. Saffron; குங்குமமரம். (சூடா.) 2. Seaside Indian oak; வெண்கடம்பு. மரவம் பூப்ப (ஐங்குறு. 357). 3. Common cadamba. See கடம்பு². 4. Small Indian oak. See செங்கடம்பு.
வெண்கடம்பு - Barrintonia Calyptrata
செங்கடம்பு - Barringtonia Acutangula
மதுரை மீனாட்சி கோவில் முன், கடம்பு:
அடம்பும், கடம்பும்: தமிழ்ப் பொழில், 1929-1930.
எது கடம்ப மரம்? - ஆய்வுகள்:
கடலோரம் உள்ள வெண்கடம்பு, செங்கடம்பு மரங்களால் மரவக்காடு என்ற பெயர் பெற்றது சாலும்.
கவிக்கோ ஞானச்செல்வன் எழுதுகிறார்:
”தஞ்சை மாவட்டத்தில் மறவர்க்காடு என்ற ஊர் உள்ளது. இதனை இந்நாளில் மரவக்காடு என்று பிழையாகச் சொல்கிறார்கள். வீர மறவர்கள் வாழ்ந்த (ஊர்) வெறும் மரங்களின் காடாக மாறிவிட்டதா?”
இது கவிக்கோ சொல்லும் திருத்தம். ஆனால், காடு என்ற பெயரில் அதன் அருகே பல ஊர்கள் உள்ளன. எனவே, மரவக்காடு என்பது சரியான, பழைய தமிழ்ப் பெயர்தான்.
மரைக்காடு *antelope forest* (known for black bucks) மறைக்காடு ஆனது என்பார் ரா. பி. சேதுப்பிள்ளையவர்கள் (ஊரும் பேரும்).
நா. கணேசன்