------
ராஜேந்திரன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நாட்டைக்காக்க எல்லையில் நின்று உயிரையும் பொருட்டாய் எண்ணாமல் போராடிய பல வீரர்களில் ஒருவர்.
ஊர் வந்தவருக்கு , மக்களில் பலர் பாரதநாட்டின் அருமை பெருமையை அறியாமல் ,சுயநலமாகவும் ,சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் தியாகத்தையும் அறியாமல்
தொலைக்காட்சித்தொடர்களில் மூழ்கிகிடப்பதும் வருத்தமானது.
விழுதுகளில் பழுது வராமல் காக்கவேண்டிய வேரே நிலத்தை வெடித்துக்கொண்டு வெளியே வர முயற்சிப்பது கண்டு திகைத்தார்.வேர்கள் வெளியே தெரிந்தால் மரங்கள் சாய்ந்துவிடாதோ?
இளையதலைமுறையை வழிகாட்டிச்செல்லவேண்டிய பெரியவர்களில் பலர் மேல்நாட்டு நாகரீகமோகத்தில் திளைத்திருப்பது கண்டு வேதனையும் பட்டார். இளையதலைமுறைகளும் சினிமா கேளிக்கை என்று அலைவதாகவே பட்டது அவருக்கு.
இளைய தலைமுறைக்கு தேசிய உணர்வை ஏற்படுதத்வேண்டும் அவர்களை நாட்டுப்பற்று கொண்டவர்களாய் நடத்திச்செல்லவேண்டும் என்ற சிந்தனையிலேயே இருந்தார்.
அன்று ஆகஸ்ட் 15 சுதந்திரத்திருநாள்.
ராஜேந்திரனை அவர் குடியிருந்த பகுதியில் இருந்த பள்ளிக்கூடம் ஒன்று, சுதந்திரதினக்கொண்டாட்டத்திற்கு தலைமை ஏற்க அழைத்திருந்தது. மேடையில் நாற்காலியில் நடுநாயகமாய் அமர்ந்தவரை பள்ளி நிறுவனம் பாராட்டி அறிமுகப்படுத்தியது.
கலைநிகழ்ச்சிகள் நடந்துமுடிந்தன. திரைப்பாடல்கள் பலவற்றிர்க்கு குழந்தைகள் நடனமாடின. பாரதியார் பாடல்களும் பாடப்பட்டன.
ராஜேந்திரனை சிறப்புவிருந்தினராக கௌரவித்து மலர்க்கொத்தினைக்கொடுத்த பள்ளித்தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு சிலவார்த்தைகள் பேச அழைத்தார்.
ராஜேந்திரன் புன்னகையுடன் எழுந்தார். பேச ஆரம்பித்தார். நிகழ்ச்சிகளைப்பாராட்டியவர் இறுதியில்,”மாணவர்களே! மேலைநாட்டு திரைப்பாடலும் நம் நாட்டு திரைப்பாடலும் அட்சரம் பிசகாமல் பாடுகிறீர்கள் சிலர் பாரதி பாடலையும் அப்படிப்பாடியதில் மகிழ்ச்சி. ஆனால் உங்களுக்கெல்லாம் நம் நாட்டு தேசியகீதம் நன்கு தெரிந்திருந்தால் அதுதான் பெருமை..எங்கே இந்தக்கூட்டத்தில் தேசியகிதத்தை பிழையின்றி பாடக்கூடிஅயவர் யார் கைதூக்குங்கள்?” என்றார்.
நாலைந்துமானவர்கள் கைகளைத்தூக்கினர் ராஜேந்திரன் அவர்களை மேடைக்கு அழைத்தார்.”தேசியகீதத்தை பிழை இல்லாமல் முழுவதும் சரியாகப்பாடுபவர்களுக்கு பாடிமுடித்ததும் என் அன்பளிப்பாக ஆயிரம் நூபாய் தரப்போகிறேன்” என்று அறிவிவித்தார்.
மூன்றுபேர் முக்கால்வாசி பாடும்போது திணறிபோய் மேடையைவிட்டு கீழே இறங்கிவிட்டனர்.
கடைசியாக வந்த மாணவன் பிழையே இல்லாமல் மிகச்சரியாக பாடிமுடிக்கவும் கூட்டம் கைத்தட்டியது
ராஜேந்திரன் அவனை ஆறத்தழுவிக்கொண்டார்,”உன் பேர் என்னப்பா?” என்றார்.
“குமரன். கொடிகாத்த குமரன் நினைவாய் என் தந்தையார் வைத்த பெயர்” என்றான்.
“ஆஹா! அதனால்தான் ரத்தத்திலேயே தேசிய உணர்வு வந்துள்ளது உனக்கு. உணர்வு பூர்வமாய் வார்த்தைகளை முழுங்காமல் அப்படியே பாடினாய் குமரா! இந்தா உனக்கு என் பரிசு ஆயிரம் ரூபாய்” என்று அவன் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டினைக்கொடுத்தார். பெற்றுக்கொண்ட குமரன்,”நன்றி ஐயா” என்று கைகுவித்துவிட்டுக்கீழே இறங்கினான்.
பள்ளிக்கூடமிருந்து வீடுவந்த ராஜேந்திரன் சில நிமிடங்களில் வீட்டுக்கதவை யாரோ தட்டவும் வாசலுக்கு வந்தார் கதவைத்திறந்தார்
.
வாசலில் நின்றிருந்தவனைப்பார்த்ததும் திகைப்புடன்,”குமரா நீயா? வாப்பா” என்றார் மகிழ்ச்சியாக.
“வணக்கம் ஐயா.. அதிகம் பேச நேரமில்லை பரிட்சைக்குப்படிக்கணும்.. இந்தாங்க ஆயிரம் ரூபாய் வாங்கிக்குங்க” என்றான் மென்மையான குரலில்.
ராஜேந்திரன் வியப்புடன்,”அது உனக்கு நான் கொடுத்ததுப்பா.தேசியகீதத்தை நீ பிழையின்றி பாடினதுக்கு பரிசாக நான் கொடுத்தது.” என்றார்.
“தெரியும் ஐயா..உங்கள் அன்புக்கு நன்றி . ஆனால் தேசியகீதத்தை தெரிந்துகொண்டிருக்கவேண்டியது ஒவ்வொரு இந்தியப்ரஜையின் கடமை.நான் கடமையைத்தான் செய்தேன் அதுக்கு ஊதியம் வாங்கலாமா? மேடையில் மறுத்திருந்தால் அங்கே உங்களை நான் அவமதித்ததுபோலாகுமேன்னுதான் இங்க தனியா உங்களைப்பார்த்து கொடுக்கவந்தேன்” என்றான் குமரன்.
ராஜேந்திரனுக்கு எல்லையில் தன் சாகசங்களுக்குப்பெற்ற எத்தனையோ பரிசுகளைவிட குமரன் திரும்பக்கொடுத்த ஆயிரம் ரூபாய் நெஞ்சை இன்னமும் நிமிரவைத்தது.
********************************************************************************************
(இன்று குழந்தைகள் தினம்...கதை(நிஜமாய் நடந்த நிகழ்வு) இரண்டு ஆண்டுகள்முன்பு சுட்டிவிகடனில் பிரசுரமானது மீள்பதிவாக)
“
சின்னஞ்சிறு குருவி போலே
நீ திரிந்து பறந்து வா பாப்பா
வண்ண பறவைகளைக்கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.