1
உனக்கென்ன
வனம் கேள் வானம் கேள்
கடல் கேள் காதல் கேள்
மண் கேள்
மலையும் ஒரு காட்டையும் கூட கேளேன்..
எதுவாயினும் உனக்காகக்
கொண்டுவருவேன்;
நீ உனது சின்ன சிரிப்பை தா போதும்!!
-----------------------------------------------------
2
அதென்ன மல்லிகை முற்றமும்
அதன் அருகே நிலாவும்
கூட நீயும்.. ?
எனக்கு நீ
உனதருகில் மல்லிகை முற்றம்
நம்மோடு நிலா
ஏன்னா
மீதி எல்லாம் வரும் போகும்
போகும் வரும்,
நீ வருவாய்
வருவாய்
போகமாட்டாய்..
-----------------------------------------------------
3
உனக்குதான்
பேச்சிலென்ன தேன் குழைந்திருக்கோ ?
உனக்கு தான்
காற்றில் சிறகுகள் வீசி பறக்கத்
தெரிகிறதோ?
உனக்கு தான்
தேவதையின் சிரிப்பழகும்
மலர்களின் மெல்லழகும்
கூடுதலோ..
காணுமிடமெலாம்
என் கண்களுக்கு நீயே தெரியுமந்த
வித்தை கூட
உனக்கே தெரிந்திருக்கிறது..
உண்மைதானே
இப்போதெல்லாம் எனக்கு சிரிப்பும்
அழையும் கூட ஒன்றாகவே தெரிகிறது
இரண்டிலும் நீயே இருப்பதால்..
-----------------------------------------------------
4
பள்ளிக்கூடம்
போகையிலும் சரி
கல்லூரி காலமும் சரி
அலுவல் சென்றாலும் சரி
எங்கே எதன் பொருட்டு நான்
உயிர்த்திருந்தாலும் சரி
உனை நினைத்திருக்கிறேன்
என்பதே உண்மை..
-----------------------------------------------------
5
எது உனக்கு பிடிக்குமோ
அதை உனக்கு தர விரும்புகிறேன்,
எதில் நீ
நிறைவாயோ
அதையே தர விரும்புகிறேன்,
எதில் உனக்கு மகிழ்வோ
அதையே தரத் தான்
தவிக்கிறேன்
அது பிரிவாயினும் சரி
அது உயிராயினும் சரி
உனை மறப்பதாயினும் கூட..
-----------------------------------------------------
வித்யாசாகர்