நகக்கண்ணில் விசமேறி
உடம்பெல்லாம் கிழிக்கிறதே
அரக்கர்களின் பாழ்கிணற்றுள்
பிஞ்சுமுகம் விழுகிறதே..
கைக்குள்ளே படுத்துறங்கும் பச்சைவாசம்
நுகரலையோ?
பச்சைமண்ணில் இச்சையுற எம்மாண்பும்
தடுக்கலையோ ?
பாதகத்தாள் பெற்றெடுத்த பேய் நெஞ்சே
பேய் நெஞ்சே..
குருதி குடித்து காமம் வெடிக்க
பாவம் மகள் சிக்கினாளோ..
காமங்கோண்டு நாய்களெல்லாம்
நாயைச் சுற்றும் கதையாச்சே,
கேவி கேவி பிஞ்சழுத
கதறல்சத்தம் சாபமாச்சே..
ஓட்டு விற்றோம்
லஞ்சத்தில் திளைத்தோம்
மதத்திற்கு மனிதர்களைக் கொன்றோம்
இன்று -
பச்சையுடல் குதறிநிற்கும்
பாதகத்தை என்சொல்வேன்..?
அசிங்கம் கேட்டால் காதுபொத்தி
அபத்தம் கண்டால் கண்கள் பொத்தி
வெய்யில் பட்டால்கூட
உள்ளே சுடுமோ யென -
உயிர்பொத்தி வளர்த்த அப்பனுக்கு
நெஞ்சு வேகுமா?
அவளைப் பெற்ற வயிறு
கரிந்துப் போக தீயுண்டா..?
அண்டவெளி பொருக்குமோ
புரியலையே..
பிஞ்சுப் பாதமன்று
மார்மீதும் மீசையிலும்
உதைத்த வலியெனக்கு
இன்று வலிக்கிறதே..
எம்மண்ணில் மறைத்திடுவேன்
பிள்ளாய் – யுனை
பெண்ணாய் பெற்றெடுத்தேனே..
பெண்ணாய் பெற்றெடுத்தேனே..
---------------------------------------
வித்யாசாகர்
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com