தலைப்பு: ஒலி வடிவிலான தமிழ் ஆவணங்களைத் தமிழம்.வலை திரட்டவும் பாதுகாக்கவும் விரும்புகிறது.
ஒலி வடிவிலான தமிழ் ஆவணங்களைத் தமிழம்.வலை திரட்டவும் பாதுகாக்கவும் விரும்புகிறது. இணையவழியில் இயங்குகிற பண்பலை (
thamizham.fm ) தொடங்கியுள்ளேன். தமிழம்.வலையில் கேட்கலாம்.
வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் தமிழ் பற்றிப் பேசியவை இன்று இல்லை. சங்க இலக்கியம் பற்றியும், இலக்கணம் பற்றியும் அவர்களது ஒலிவடிவப் பதிவுகள் வரலாறு காட்டுபவையாக இருக்கும்,
வாழும் தமிழ் அறிஞர்களின் வழியாகவும் இலக்கிய இலக்கணம் பற்றிய செறிவான கருத்துகளை நாம் பதிவு செய்ய வேண்டும். திருமுருகனார் பாடிய தொல்காப்பியம் முற்றோதல் வணங்குதற்குரியது. இதுபோல பழைய இலக்கியங்களை இசை வடிவில் பாடிப் பதிவு செய்ய உணர்வாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.
திரு.செம்பியன் எழுதி இசையமைத்துப் பாடித் தொகுத்த பாடல்கள் தமிழ் உணர்வூட்டுபவை. திரை இசையில் வடிவமைத்து அருமையான ஒலியில் பதிவு செய்து, நுட்பம் காட்டுபவை.
தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு இசைக்கருவிகளின் பதிவுகள், நாட்டுப்புறப்பாடல்களின் பதிவுகள், பறை இசை, தப்பாட்டம், சிக்காட்டம், ஒப்பாரி, கும்மி, கோலாட்டம், தேவராட்டம், கரகம், காவடி என நடப்பிலுள்ள பதிவுகள் என நம் தமிழின் இசைவடிவங்களை நாம் தொகுத்துப் பாதுகாக்க வேண்டும்.
கைபேசியில் ஒலிவாங்கியை இணைத்துப் பதிவு செய்தாலே அது துல்லியமாக இருக்கும். உங்கள் பகுதியில் உள்ள அரிய இசைப்பதிவுகளைப் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அவற்றை பாதுகாப்பதோடு, தரமானவற்றை தமிழம்.பண்பலையில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளேன்.
10 நிமிடங்களுக்கு மிகாமல் பதிவு செய்து அனுப்பவும். இதற்காகவே தமிழம்.பண்பலை என்ற இணையவழியிலான பகிர்தலைத் தொடங்கியுள்ளேன்.
தமிழம்.பண்பலையைத் தமிழம்.வலையில் கேட்கலாம். ஆன்டிராய்டு தொலைபேசி வைத்து இருப்பவர்கள் மேலுள்ள இலவச இணைப்பை இறக்கி உங்கள் தொலைபேசியில் பதிவு செய்து கொண்டால் தொடர்ந்து 24 மணிநேரமும் நீங்கள் இந்தப் பதிவினைக் கேட்கலாம்.
வாருங்கள், உங்களின் தரமான பதிவுகளால் தமிழின் பல்வேறு ஒலி வடிவங்களைத் திரட்டி நாம் பாதுகாப்போம்.