எல்லோரும் வாழவேண்டும்.
==============================================ருத்ரா
யார் எறிந்தார்கள்
வானத்திலிருந்து இந்த கருத்தை?
யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும்!
நன்றாக இருக்கிறது.
மிகவும் நன்றாக இருக்கிறது.
இது துருப்பிடிக்காது.
இது எரியாது.
இது நனையாது.
இது படுகொலை செய்யப்படமுடியாது.
இது பசுமையின் நிழல்.
இது நியூட்ரினோ.
இது எல்லாம்.
இது வெறுக்கப்பட முடியாது.
இது நத்தைக்கூடுகள்.
இது மண் புழுக்கள்.
இது எல்லாம் மதங்களும்.
இது எல்லா வேதப்புத்தங்களும்.
இது எல்லா மதமற்ற மதங்களும்.
இது எல்லா வேதமற்ற வேதங்களும்.
இது ஓஷோ
இது தாஸ் கேபிடல்
இது சல்மான் ருஷ்டி.
அல்லது
இது
எல்லா புத்தகங்களும் எரிந்த
சாம்பல்.
இது
போதி மர எலும்புக்கூடுகள்
மிச்சமாகிப்போன
ஈழம்.
இது சுடுகாட்டுக்குள் கிடக்கும்
தொல் தமிழ்.
இது மனிதப்பசை
சுரண்டித்தின்னப்பட்ட எழுத்துக்கள் தான்.
இது துப்பாக்கிகள் தான்.
இது மனிதவெடிகுண்டுகள் தான்.
இது மாடப்புறாக்கள்.
இது கொலைபாதகங்கள் தான்.
இது இங்கேயே பிரபஞ்சத்தை
சூரணம் பண்ணிவிடும்
விஞ்ஞான சூத்திரம் தான்.
அதோ
ஒரு பெரிய விண்கல் மோதி
இந்த உலகம் தூள் தூள் தான்.
இருப்பினும்
அதோ பாருங்கள்.
உடல் உருகி கரைந்து காணாமல் போய்விட்டது.
அப்போதும்
அது இது தான்.
என்னால் வாசிக்கமுடிகின்றது.
நொறுங்கிய என் கபாலங்கள் கூட
அதை காண முடிகிறது.
"எல்லோரும் வாழ வேண்டும்"
ஆம்
"எல்லோரும் வாழ வேண்டும்"
==========================================================