தூ!
=======================================ருத்ரா.
தூ!
மானங்கெட்ட பிழைப்பு இது.
எதைச்சொல்வது?
எதை விடுவது?
எதை எழுதுவது?
எதை எழுதும்போது
பேனா கழுத்தை நெறிப்பது?
தெரியவில்லை.
இணையதள குப்பைக்கிடங்கு வந்தபிறகு
இன்னும் மோசம்.
தூர எறிந்த மயிர்க்குப்பைகளும்
வெட்டிய நக மிச்சங்களும்
அஞ்சு ஸ்டார் வாங்கிக்கொண்டு
கண் பிதுக்கும்.
முக நூல்கள் பட்டாளங்கள் சேர்த்துக்கொண்டு
அஜித் நகம் கடித்தார்
அபர்ணா முகம் கழுவினார்
என்று
இலக்கியம் படைக்கின்றன.
நாட்டு நடப்புகளைக்கண்டு
கோபம் கொப்பளிக்கிறது.
தராசு கோல்
ஆயிரம் ஆண்டுகளாய்
நட்டமாய்த்தான் நிற்கும் என்று
கட் அவுட் வைத்து விட்டார்கள்.
கோல் இருந்தால் முள் இல்லை.
முள் இருந்தால் தட்டு இல்லை.
இருப்பினும்
"கிலோக்கணக்கில்" வியாபாரம் ஆகிறது.
அரிஸ்டாட்டில் சொன்ன அரசியலும்
ப்ளேட்டோ சொன்ன ஜனநாகமும்
வள்ளுவர் சொன்ன மனித அறமும்
கேவலம்
நவீன கட்டணகழிப்பிட கட்டிடங்களுக்கு
நடக்கும் குத்தகை டெண்டர் கணக்காய்
நாறுகிறது.
சட்டைகிழிகிறது.
எங்கும் ரத்த விளாறுகள்.
ஆற்று மணலில்
மலைக் குவாரிகளில்
பசுமை நிழல்களில்
கொள்ளை லாபம் எனும் பசிமிகுந்த கண்கள்
தீயை பாய்ச்சுகின்றன.
வாக்குகள் மூலம் தான்
அதோ அந்த ஆகாசத்துக்கு
படி கட்டுகிறோம் என்று
சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
அது
கோணா மாணாவென்று எங்கோ செல்கிறது.
கல்லறைக்குள்ளிருந்து
மீண்டும் மீண்டும்
கல்லறைகளுக்கா
அந்த படிக்கட்டுக்கள்.
போதும்
தேசத்தாய் என்று பூஜைசெய்து
ஒரே சமயத்தில்
தேசத்தையும்
தாயையும்
கொச்சைப்படுத்தாதீர்கள்.
எங்களால் முடிந்தது
விலா எலும்பு முறிய
குரல் கொடுப்பது மட்டுமே!
"ஜெய்ஹிந்த்"
________________________________________________________________________