விநாடிக்கவிதைகள் (5)
=================================================ருத்ரா
யார் வேண்டுமானாலும் வரட்டுமே
சந்தோஷம் தான்.
இவ்வளவு வேடிக்கைகள்
யார் காட்டுவார்?
மயிலிறகு தீர்ப்பு எழுத
பொறியில் குமிழ் அமுக்க
துப்பாக்கியின் ராணுவப்படை
ஏழாயிரம் பேராமே!
234 தொகுதியையும்
கை வேறு கால் வேறு பிய்த்து
ஒரு தொகுதியை
உண்டாக்குகிறார்களாமே!
கிராமத்தில் ஒடக்காய்
அடிக்கிற சிறுவர்களை பார்த்திருக்கிறோம்.
எவ்வளவு குஷி.
பாவம் ஆர்.கே நகர் எனும் ஒடக்காய்.
கௌரவர்களும் ஒதுங்கி விட்டார்கள்
பாண்டவர்களும் வரவில்லை
அப்புறமும்
ஆயிரத்தெட்டு வியூகங்களா?
ஊழல் வேண்டாம்..அது இது என்றெல்லாம்
வேஷம் போடும் பூமி இது.
அப்படியென்றால் ட்ராஃபிக் ராமசாமியே
அன்னப்போஸ்டாக வந்திருக்கலாமே!
இந்த கொசுக்களையும் எலிக்களையும்
ஜெயித்து
சிங்கம் கர்ஜித்தாலும் அது
அசிங்கமே.
வெறும் காற்றை நோக்கியா
கராத்தே வீரங்கள்?
அரசாங்க பீரங்கிகள் கொண்டா
ஜனநாயக அணில்குஞ்சு மீது தாக்குதல்.
அபினி கொடுத்து ஒரு நாட்டையே
தூங்கப்பண்ணினார்கள்.
அபினியின் இடத்தில் கரன்சிகள்.
"கதிமோட்சம் இல்லை" இனி இங்கே!
ஒரு பானை சோத்துக்கு
ஒரு சோறு.
அதுவும் கடைசி சோறு.