அர்த்தம் நிறைந்த வாழ்க்கை
மனிதவாழ்வின் நோக்கம் என்ன என புத்தர் முதல் காந்திவரை பல மகான்கள் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால் யாருடைய விடையும் இன்னொரு தரப்புக்கு ஏற்புடையதாக இருந்ததில்லை.
மேலைநாடுகளில் மனித வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியாக இருத்தல்...மது, சிகரெட், கஞ்சா, செக்ஸ் என அடுத்தவரை பாதிக்காமல் உன்னளவுக்கு உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் எதையும் செய்யலாம் என்ற அளவுக்கு சமூகத்தில் சுதந்திரம் உள்ளது. இந்த இன்பங்களை அனுபவிக்க பணம் தேவை. அதனால் சமூகம் பொருளை தேடி அலைந்து, பணக்காரர்களை கொண்டாடி, ஹீரோவாக ஆக்கி மகிழ்கிறது. இதன் பின்விளைவுகள் சிதறும் குடும்பங்கள், குன்றும் உடல்நலம் என சமுதாயத்தின் அடிப்படையே அசைகிறது.
ஆக வெறும் மகிழ்ச்சி என்பது மட்டுமே குறிக்கோளாக இருக்க இயலாது. மனிதவாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு குறிக்கோளை நோக்கி நகர்வதன் மூலமே மனிதன் வாழ்வில் அர்த்தத்தை காண்கிறான்.
கல்யாணம் ஆகாத வரை நம் இளைஞர்கள் பஸ்ஸ்டாண்டுகளில், மால்களில் துணையை தேடுதலே குறிக்கோளாக கடுந்தவம் மேற்கொள்கிறார்கள். அதன்பின் வேலை, இண்டர்வியூ, வீடு என இன்னொரு குறிக்கோளை நோக்கி வாழ்க்கை நகர்கிறது. நல்ல வேலை, குடும்பம் என செட்டில் ஆனபின் மனதில் ஒரு வெறுமை தோன்றுகிறது. அடுத்தது என்ன என்ற உணர்வு.
சமூகசேவை, ஆன்மிகம், பக்தி, பேஸ்புக், புத்தகம் எழுதுதல், அரசியல் என பலரும் நல்ல, கெட்ட குறிக்கோள்களை நோக்கி நகர்தல் இக்காலகட்டத்தில்தான்.
அதனால் தான் ஆன்மிகவாதிகளின் பர்சனல் வாழ்க்கை அத்தனை பொருள் நிரம்பியதாக உள்ளது. அவர்கள் துயரம், வாழ்வதற்கான நோக்கம் அனைத்தையும் ஆன்மிகம் வழங்குகிறது. மரணமிலா பெருவாழ்வு வாழ ஆன்மிகம் உதவும் என நம்புகிறார்கள்.
மதநம்பிக்கையற்றவர்கள் சமூக நலன், பகுத்தறிவு, சுற்றுபுற சூழலியல் போன்ற குறிக்கோள்களை முன்வைத்து இயங்குகிறார்கள். அவர்கள் வாழ்வின் நோக்கமும் இதேபோன்ற குறிக்கோள்களால் நிறைவுறுகிறது. அவர்கள் வாழ்வும் பொருள் நிரம்பியதாக மாறுகிறது.
சிலரால் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை தான்டியே முன்னேறக்கூடிய சூழல் அமைவது இல்லை. ஆனால் அவர்களும் கடைசிக்கு ஒரு சினிமா நடிகரின் ரசிகராக மாறியாவது தம் வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள் அல்லது பொருளை தேடிகொள்கிறார்கள்.
அர்த்தம் நிரம்பிய வாழ்க்கை நம்மை பல கெட்ட விசயங்களில் செல்வதில் இருந்து தடுக்கிறது. நம் ஆற்றலை ஒரு இலக்கை நோக்கி செலுத்துகிறது. வெறும் மகிழ்ச்சி என்பதை தேடி அலைவதை விட வாழ்க்கை இவ்விதத்தில் இனிமையானதாக மாறுகிறது. மகிழ்ச்சியை விட மனநிறைவு மேலானதுதானே?