இன்று காலை வங்கிக்கு போனேன். கருப்பின பெண் ஒருவர் கவுண்டரில் இருந்தார். பணம் டெபாசிட் செய்து, செக்கில் எண்டோர்ஸ்மெண்ட் கையெழுத்து இல்லாததால் அதுக்கு தனியா சீல் வைத்து என உதவினார்.
அதன்பின் "இந்த ஊர் பிடிச்சிருக்கா?" என கேட்டார்.
இது என்ன கேள்வி என வியப்புடன் "ஆமாம். இங்க எட்டு வருசமா இருக்கேன். பிடிச்சிருக்கு" என்றேன்.
"நான் வந்து மூணு வருசம் ஆகுது. குளிர் தாங்கமுடியல" என வருத்தத்துடன் சொன்னார்.
"அப்படியா? எந்த ஊர்லருந்து வந்தீங்க/"
"மலேசியா. கணவர் அங்க சுற்றுலா வந்தபோது லவ் மேரேஜ். அவர் சொந்த ஊர் இதுதான். நானும் கூட வந்துட்டேன். இந்த குளிர தாங்கவே முடியல"
அவரை பார்த்தால் மலேசியர் என என்னால் சொல்லவே முடியவில்லை..முகவெட்டு, ஹேர்ஸ்டைல், உடை, நிறம் எல்லாமே அமெரிக்க கருப்பரை ஒத்திருந்தது. அதனால் பலமுறை அவரை வங்கியில் பார்த்திருந்தும் அதிகமா பேசியதில்லை.
"இந்த ஊர்ல மலேசியரே கிடையாதே? நீங்க தான் எனக்கு தெரிஞ்சு ஒரே மலேசியர்"
"ரொம்ப கஷ்டமா இருக்கு..இந்த ஊர் இந்திய ரெஸ்டரான்ட் கூட நல்லா இல்லை"
"ஆமாம்..பக்கத்து ஊர் இந்திய உனவகம் நல்லா இருக்கும்"
"ஆனா எனக்கு மலேசிய உணவகம் தான் பிடிக்கும்"
"சிகாகோல இருக்கு" என சொல்லி பெயர் விவரம் சொன்னேன்.,.."ரொட்டி கனாய்" கிடைக்கும் என்றதும் அவர் முகம் மலர்ந்தது (அது நம்ம ஊர் வீச்சு பரோட்டா)
"மலேயாவில் எந்த இடம்" என வியப்பை மறைத்தபடி கேட்டேன்.
"கோலாலம்பூர். ஆனால் தாத்தா, பாட்டி எல்லாம் சிலோன்லருந்து வந்தாங்க."
"தமிழா?"
"இல்லை. சிங்களம். ஆனால் சிலோன் மொழி சுத்தமா தெரியாது. மலேசிய தமிழ்ல்ல ஒரு சில வார்த்தைகள் தெரியும். ஆனால் பேச வராது"
"அதுவே போதும். உங்களை இன்று முதல் எங்க ஊர் தமிழ் சங்கத்துல சேர்த்துக்கறோம். பொங்கல் விழா ஜனவரில நடக்குது. வந்துடுங்க" என சொல்லி அதன் விவரம் எல்லாம் கொடுத்தேன். அவருக்கு ஒரே மகிழ்ச்சி.
வெளியே வருகையில் தான் அவரை என்னிடம் மனம்விட்டு பேசவைத்தது எது என யோசித்தேன். மொழியா, நாடா, மதமா...எதுவுமே இருவருக்கும் பொதுவில்லை. ஆனால் அவருக்கு பண்பாட்டு அளவில் நெருக்கம் என்பதால் மட்டுமே ஒரு அன்னியனுடன் இம்மாதிரி விவரங்களை பேசுகிறார். இதே அவர் மலேயாவிலும் நான் தமிழ்நாட்டிலும் இருந்திருந்தால் அவர் எனக்கு ஃபாரினர். நான் அவருக்கு ஃபாரினர்.
தொலைதூர நாட்டில் நம் வேற்றுமைகளை பார்க்காமல் ஒற்றுமையை மட்டும் பார்க்கிறோம்.
ஊனக்கண்ணில் பார்த்தாம் யாவும் குற்றம் தான்
ஞானக்கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம் தான்