கோகீ… கோகீ…
இன்று காலை மொட்டை மாடியில் வழக்கம் போல நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென யாரோ “கோகீ… கோகீ” என்று அழைப்பது கேட்டது. சற்று நின்று சுற்று முற்றும் பார்த்தேன் யார் அப்படிக் கூப்பிட்டது என்று. யாரையும் காணோம். சத்தம் நின்றது. மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்.
“கோகீ… கோகீ…”. அதே குரல்.
இரவு ஏழரை மணிக்கு சன் தொலைக் காட்சியில் வரும் பூவரசும், நானும் தான் கோகிலா என்னும் பெயர் கொண்ட எங்கள் மனைவிமாரை “கோகீ… கோகீ” என்று ஆசையாய் அழைப்போம். அது இவனுக்கு எப்படித் தெரியும்? கோகியை எங்காவது சந்தித்திருப்பானோ? கோகிக்கும் தான் புதிது புதிதாய் நண்பர்கள் பிடித்திடும் ஆசை உண்டே? அப்படி எங்காவது புதிதாய்ப் பிடித்த நண்பனாய் இருக்குமோ இந்த அயோக்கியன். வீடு வரை வந்து விட்டானே. வந்ததோடு விட்டானா? “கோகீ… கோகீ…” என்றல்லவா அழைக்கிறான் அவளை யவன் சர்வ சுதந்திரமாய் என்னைப் போலவே?
உற்று நோக்கினேன் சத்தம் வந்த திசையில். சமயல் அறைப் பக்கம் இருந்த ஒரு மா மரத்தில் இருந்து வந்தது அந்தக் குரல். அயோக்கிய ராஸ்கல். மரத்தின் மீது மறைந்து உட்கார்ந்து கொண்டு சமையல் அறையில் இருக்கும் என் மனைவி கோகிலாவை வெளியே வரச் சொல்லிக் கூப்பிடுகிறானோ?
அடெ. இப்போது அவள் முழுப் பெயரையும் சொல்லி அல்லவா அழைக்கிறான், “கோ,,,கீ…லா… கோ…கீ…லா…” என்று.
அடுத்த கணம் கேட்டது ஒரு கிலு கிலுப்பையை ஆட்டிடும் சத்தம். இதுவும் அவர்களுள்ளே ஒரு சங்கேத மொழியாக இருக்குமோ? எனக்குத் தெரியாது அவளை வெளியே கூப்பிடுகிறானோ?
நடைப் பயிற்சி முடித்து உடற் பயிற்சி ஆரம்பித்தேன். மீண்டும் அதே குரல். இந்த முறை, “ட்ரில்லிங்… ட்ரில்லிங்” என்று. ஆகா நான் “ட்ரில்”, அதான் உடற் பயிற்சி, செய்து கொண்டிருக்கிறேன் என்பதையும் என் கோகிக்கு சொல்கிறானே சூசகமாய்?
உடற் பயிற்சியை நிறுத்தி விட்டு உன்னிப்பாய் கவனித்தேன் மா மரத்தை.
“சார்ர்ர்ர்… சார்ர்ர்ர்…” என்றான் இம்முறை. “சார் கவனித்து விட்டார். இப்போது வெளியே வராதே” என்கிறானோ? அயோக்கியன்… அயோக்கியன்.
நான் உற்று நோக்குவதை அவன் கவனித்திருக்க வேண்டும். மா இலைகள் நடுவே மறைந்திருந்த அவன் திடீரெனெ அருகில் இருந்த நெல்லி மரத்திற்குத் தாவினான். அப்போது அவன் முழு உருவத்தையும் கண்டேன்..
என்ன ஒரு அழகான உடல் வாகு! குட்டி யானை போலிருக்கும் நான் எங்கே? அளவான உடல் பாகங்கள் கொண்ட அவன் எங்கே? அது மட்டுமா? நிறத்திலும்தான் கொள்ளை அழகு அந்த அயோக்கியன், வெள்ளை, மஞ்சள். பழுப்பு, கருப்பு என்று!
இதையெல்லாம் மனதில் கொண்டு தானோ அவன் பெயரை, “மரத்தின் ஊடே போதைக் கழித்திடும் அயோக்கியன்” “Dendro sitta vegabonda” என்று வைத்தாரோ ஆங்கிலத்தில் அறிஞர்?
அவன் உண்மையிலேயே ஒரு அயோக்கியன் தான். ஓடி உழைத்து, கூடு கட்டி குஞ்சு பொரித்திருக்கும் குருவிக் கூடுகளில் இருந்து முட்டை, குஞ்சு இவற்றைத் திருடித் தின்று வாழ்வது தானே இந்த பல் குரல் விற்பன்ன அயோக்கியனின் வேலை!
அவனது பொதுப் பெயர், “Tree pie” என்பது. ஆங்கிலத்திலே “pie” என்றால் வண்ணத் திட்டுகள் கொண்டது என்ற பொருளும் உண்டு. இங்கே பாருங்கள் அவன் அழகை:
(படம் இணையத்தில் இருந்து)
06-11-2012 நடராஜன் கல்பட்டு
--இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே