நூலகத்திற்குச் செல்ல நேரமில்லாதவர்கள் மிகப் பலர்; ஆனால், வேலை, வேலை என ஓடி, ஏதாவது நோய், நொடி வந்த பிறகு மருத்துவமனைக்கு வருவோர் பலர். அங்கு உள்நோயாளியாகச் சேர்ந்ததும் அவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும். அப்போது புத்தகங்கள் படிக்கலாம். எனவே அரசும் தனியாரும் நிருவகிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் தனித் தனி நூலகங்களை அமைக்கலாம்; அவரவர் வீட்டுக்கே நூலை எடுத்து வந்து தருவது போல், நடக்க முடியாதவர்களுக்காக, அவரவர் படுக்கைக்கே கொண்டு வந்தும் தரலாம். எழுத்தறிவு இன்மையினாலோ, பார்வைக் குறைபாட்டினாலோ, மின் தடையினாலோ படிக்க முடியாதவர்களுக்காக மின்கலனில் இயங்கும் ஒலி நூல்களை வழங்கலாம். குழந்தைகள்மருத்துவமனையாக இருந்தால், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவை அமைக்கலாம்; குழந்தைகளைக் கவனிக்கப் பெரியவர்கள் உடன் இருப்பார்கள் என்பதால், பெரியவர்களுக்கான நூல்களையும் வைக்கலாம். உடலைத் தேற்றும் மருந்து ஒரு புறம்; அறிவுக்கு விருந்து இன்னொரு புறம்.
எளிதில் தூக்கத்தை வரவழைக்கும் சில நூல்களைத் தேந்தெடுத்து, தூக்கம் வராமல் அவதிப்படும் நோயாளிகளுக்கு வழங்கலாம்; இதன் மூலம், தூக்க மாத்திரை, தூக்க ஊசி போன்றவற்றின் பயன்பாட்டைக் குறைக்கலாம். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற அடிப்படையில் நகைச்சுவை நூல்களைப் படிக்கச் சொல்லி, மருத்துவச் செலவை வெகுவாகக் குறைக்கலாம். வாழ்வை வெறுத்துத் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்குத் தன்னம்பிக்கை நூல்களை அளிக்கலாம். மன அழுத்தம், படபடப்பு, மன நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நோயைக் குறைக்கும் வகையில் சில நூல்களை வழங்கலாம்; நூலைக் கிழிக்கவோ, உடைக்கவோ முடியாதவண்ணம், பிரத்யேகமான மின்னூல்களாக அவை இருத்தல் நலம்; சில நூல்கள், தலைவலியைத் தரக்கூடும் என்பதால், அனுபவத்தின் அடிப்படையில் அத்தகைய நூல்களைத் தனிமைப்படுத்தலாம்; இவற்றையும் நோயாளிகளின் சகிப்புத்தன்மையைச் சோதிக்கச் சில நேரங்களில் பயன்படுத்தலாம். நோயாளிகளைப் பார்க்க, ஆரஞ்சுப் பழம், ஆர்லிக்ஸ் ஆகியவற்றோடு வரும் அன்பர்களை இனி புத்தகங்களோடு வரச் சொல்லலாம். ஆனால், அவற்றை அந்த நேரத்தில் படிக்கலாமா என்பதை மருத்துவரோ, இதர நிபுணர்களோ படித்துப் பார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டும்; அல்லது, அவர்கள் ஒப்புதல் அளிக்கும் புத்தகங்களாகப் பார்த்து, வாங்கி வர வேண்டும். இதன் மூலம் மருத்துவப் புரட்சியும் அறிவுப் புரட்சியும் ஒரே நேரத்தில் நிகழும் சாத்தியக்கூறுகள் உண்டு. (அகமொழி 67)