இவ்வார வல்லமையாளர்: உம்முல் கர்
எட்டாம் வகுப்பு படித்ததற்காக குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கபட்ட பெண், சுயமுயற்சியால் இன்று ஐ.ஏ.எஸுக்கு தகுதி பெற்றுள்ளார்
உம்முல் கர். சிறுவயது முதல் இவருக்கு உடல் ஊனம் உண்டு. சிறு காயம் பட்டாலும் எலும்புகள் உடைந்துவிடும். இவரது பெற்றோர் மிக வறிய பின்புலத்தை சார்ந்தவர்கள். தந்தை டெல்லியில் பிளாட்பாரத்தில் துணி விற்கும் வியாபாரியாக இருந்தார். அவர்கள் குடும்பம் டெல்லியில் குடிசைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த ஒரு சிறுகுடிசை.
மகளின் வியாதிக்கு செலவு செய்யவே அவர்களால் முடியாத சூழல். 25 முறை மகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில் மகளை தீனதயாள் உபாத்யாயாவின் உடல் ஊனமுற்றோருக்கான இலவச பள்ளியில் சேர்த்தார்கள். எட்டாம் வகுப்பு படித்தவுடன் படிப்பை நிறுத்த சொன்னார்கள்.
ஆனால் அமர்ஜோதி எனும் சேவை நிறுவனம் உம்முல் கரின் படிப்பு செலவை ஏற்க முன்வந்தது. ஆனால் பெற்றோர் ஒப்புகொள்ளவில்லை. மகளை கண்ட்படி திட்டி தீர்த்தார்கள். “ஒரு பெண் எட்டாவது வரை படித்தால் போதும்” என்றார்கள்.
அதனால் அவர்களுடன் சண்டைபிடித்து வெளியேறினார் உம்முல்கர். டெல்லியில் இருந்த குடிசைபகுதி ஒன்றில் தனியே ஒரு குடிசையை வாடகைக்கு பிடித்தார். தினம் மாலை 3 மணிமுதல் இரவு 11 வரை குடிசைபகுதி குழந்தைகளுக்கு பேட்ச், பேட்சாக டியூஷன் எடுத்து தன் செலவுகளை சமாளித்தார். நூறு ருபாய் மட்டுமே கட்டணம். ஏனெனில் அவரிடம் படித்தவர்கள் எல்லாம் ரிக்ஷா ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், தினகூலிகள் போன்றோரின் பிள்ளைகளே.
12வது வகுப்பில் 91% எடுத்து தேறிய உம்முல் கர், அதன்பின் கார்கி கல்லூரியில் சேர்ந்தார்.
இந்த சூழலில் வியாதி முற்றி, எலும்புகள் உடைந்து நடக்கமுடியாமல் சக்கரநாற்காலியில் ஒரு வருடம் இருக்கும் சூழல் உருவானது. ஆனாலும் சளைக்காமல்கல்லூரி கட்டணத்தை தன் டியூஷன் சம்பளத்தை கொண்டே கட்டினார். அதன்பின் ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் சேர்ந்து ஸ்காலர்ஷிப் பெற்று முதுகலை பட்டமும் பெற்றார். அவருக்கு அங்கே மாதம் 3500 உதவிதொகையும் கிடைத்தது.
அதன்பின் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 420வது ரேன்க் பெற்று தேறினார். ஐ.ஏ.எஸ் ஆகும் வாய்ப்பு வரும் என காத்திருக்கிறார்
சமூகமும், குடும்பமும், தன் உடல்நிலையும் தன் மேல் வீசி எறிந்த தடைகற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி மாற்றி சிகரம் தொட்ட
உம்முல் கரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறது