காதல் வாழ்க!
=======================================ருத்ரா
நான் முந்திக்கொண்டு விட்டேன்
நீ
இப்படி ஒரு
திருமண அழைப்பிதழை
அனுப்பிவிடுவாய் என்று
பயந்து பயந்து
அந்த என்
திருமண மடலை
உனக்கு அனுப்பிவிட்டேன்.
உன் மடலில்
கண்ணன் ராதை மயில்பீலி புல்லாங்குழல் படம்.
என் மடலில்
வள்ளி வேல்முருகன் மயிலுடன் படம்.
இந்த படங்களும்
நம் மனப்பிம்பங்களுமே மிச்சம்.
.......
.......
சங்கச்செய்யுளில் ஒரு காட்சி உண்டு.
அந்த பாலைமணலில்
கொஞ்சமாய் கிடக்கும்ரி
ஊற்று நீர்.
பெண் மான் குடிக்கட்டும் என்று
ஆண் மானும்
ஆண் மான் அருந்திக்கொள்ளட்டும் என்று
பெண் மானும்
பொய்யாய்
அங்கே உறிஞ்சிக்கொண்டிருக்கின்றன.
இந்த திருமணமடல்களும்
அப்படித்தான்.
இருவரும் தங்களைத்தாங்களே
பொய் மடல்களில்
ஏமாற்றிக்கொண்டனர்.
"கௌரவக்கொலை"க்கு
காத்திருக்கும் வெட்டரிவாள்கள்
மேலே தொங்கிக்கொண்டிருப்பதால்
இங்கே
காதலும்
பொய் ஊஞ்சல் எனும்
பொன் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கின்றன
ஏக்கங்களில்.
உயிர்கள் காப்பாற்றப்பட்டு விட்டன.
ஆம்
உயிர்கள் காப்பாற்றப்பட்டு
பிணங்கள் மட்டும் வாழ்கின்றன!
காதல் வாழ்க!
================================================