தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள் மாநில மாநாட்டில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும் - கோவையில் குமரகுருபர சுவாமிகள் வேண்டுகோள்
கோவை: திருமுருக பக்தர்கள் பேரவையின் மூன்று நாள் மாநில மாநாடு, பெருந்துறை, சக்தி மண்டபத்தில் ஆகஸ்ட் 12, 13, 14ம் ஆகிய மூன்று நாட்கள் நடக்கவுள்ளது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை, திருமுருக பக்தர்கள் பேரவை, கொங்கு மண்டலம் தமிழக சைவ நெறிக் கழகம், மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை ஆகியோர் செய்து வருகின்றனர்.
இந்த மாபெரும் மாநாட்டில் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் பக்தர்கள், மாநாட்டில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் தங்கும் வசதி, உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குமரகுருபர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கோவை கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் கூறியதாவது:-
பன்னெடுங்காலமாக, நமது முன்னோர் முருக வழிபாட்டை போற்றி கொண்டாடி வருகின்றனர். முருக வழிபாட்டை முன்னெடுப்பதில் பல்வேறு அமைப்புகள், காவடிக் குழுக்கள் மாநிலம் முழுவதும் செயல்படுகின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.
அத்தகைய பக்தர்களை ஒருங்கிணைக்கும் விதமாக, கவுமார மடாலயத்தின் மூன்றாம் குரு மகா சந்நிதானம், 1990ல் ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டார்.
அதன் பயனாக, முதலில் 5 மாவட்ட மாநாடும், 1992ல், பழநியில் முதலாம் முருக பக்தர்கள் ஆன்மிக மாநாடும் நடத்தப்பட்டன. வழித்தடங்களில், தனிச்சாலை சிரவணபுரம் கவுமார மடாலயத்தை தலைமையிடமாக கொண்ட மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில், ஐந்தாவது மாநில மாநாடு பெருந்துறை சக்தி மண்டபத்தில் ஆகஸ்ட் 12, 13, 14ம் ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்து அச்சுறுத்தல் உள்ளதால், தனிச்சாலை வேண்டும் என்ற கோரிக்கை வைத்தபோது, திண்டுக்கல் முதல் பழநி வரை, அப்போதைய எம்.பி., கார்வேந்தன் தனிச்சாலை அமைத்து கொடுத்தார்.
அதேபோன்ற, தனிச்சாலை வேறு வழித்தடங்களிலும் அமைத்து தர வேண்டும், யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும், பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன.
அடுத்த தலைமுறைக்கு, பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்பட்டால், அவர்களுக்கு காப்பீடு வாயிலாக குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அரசு முன் வந்து பக்தர்களிடம் சிறு தொகை பெற்று காப்பீடு வழங்கலாம். இதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது, முருக பக்தர்கள் அறக்கட்டளையின் கோரிக்கை.
இந்த மாநாட்டில் நம் கலை, கலாசாரம், பண்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணிகளும் மேற்கொள்ளப்படும். முருக பக்தர்கள் ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை, திருமுருக பக்தர்கள் பேரவை, கொங்கு மண்டலம் தமிழக சைவ நெறிக்கழகம், மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை ஆகியோர் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் பக்தர்கள், மாநாட்டில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் தங்கும் வசதி, உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, குமரகுருபர சுவாமிகள் தெரிவித்தார்.
மாநாட்டில் பங்கேற்கவும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் விருப்பம் உள்ளவர்கள், முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை தலைமையகமான கவுமார மடாலயத்தை 98656 23817, 93631 58914 என்ற எண்களிலும், பெருந்துறை திருமுருக பக்தர்கள் பேரவையினரை, 77080 85424, 94434 98561 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.