இராசேந்திர சோழன் வங்காளத்தின் வழியாகப் பருமாவில் இருந்த ‘பெரு’ அரசிற்கு எதிராகப் படையெடுத்தான். இருமுறை கடல் வழியாகவும் ஒரு முறை நிலத்தின் வழியாகவும் பருமாவின் மீது இராசேந்திர சோழன் படையெடுத்ததாக ஆய்வறிஞர் ஆர்.சி.மசூம்தார் கூறுகிறார். அகழ்வாராய்ச்சிச் சான்றுகளுடன் ஆராய்ச்சியாளர்கள் இதை உறுதி செய்கின்றனர். 1025-1027 ஆண்டுகளுக்கு இடையே ‘பெரு’ அரசு வெற்றியைப் பறைசாற்றும் நோக்கில் இராசேந்திர சோழன் இரு கருங்கல் தூண்களை நிறுவினான். இதனை அகழ்வாராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.
அவை இராசேந்திர சோழனுடைய வெற்றித்தூண்களே என இடச்சு ஆய்வாளர் தா செயின் கோ (Taw Sein Ko) உறுதி யிட்டுக் கூறியுள்ளார்(Archologicl Report on Burma. 1908, Oara 25). (இவரைத் தேசெயென்கோ என்றும் தெசெயென்கோ என்றும் குறிப்பிடுகின்றனர்.)
பருமாவில் இன்றும் அவனின் மெய்கீர்த்திக் கல்வெட்டு
"திருமன்னி வளர இருநில மடந்தையும்
போர்ச் செயப்பாவையும் சீர்த்தனிச் செல்வியும்
தன்பெருந் தேவியராகி இன்புற"
என்னும் வரிகள் தாங்கி உள்ளன.
கி.பி.1025 இல் இராசேந்திர சோழன் கடாரம் மீது படையெடுத்தான். அதனை வென்று தன்ஆட்சியில் கீழ்க் கொணர்ந்தான். இதனைக் கலிங்கத்துப்பரணி மூலம் அறியலாம்.
“களிறு கங்கை நீர் உண்ண மண்ணையில்
காய் சீனத் தொடே கவவு செம்பியன்
குளிறு வெண்திரைக்குரை கடாரமும்
கொண்டு மண்டலமும் குடையுள் வைத்ததும்”
என்கிறது.
(களிறு=ஆண் யானை(போர் யானை) ; மண்ணை=ஒர் ஊர்; கலவு-பொருந்திய; செம்பியன்=சோழன் (இராசேந்திரன்); குளிறு=ஒலிக்கின்ற; குரை=ஆரவாரத்தை யுடைய)
கங்கையையும்‘மண்ணை’ (மான்யகேடா) நகரையும் வென்ற இராசேந்திர சோழன் கடாரத்தையும் வென்றதை இப்பாடல் கூறுகிறது.( கருநாடகாவைச் சேர்ந்த குல்பர்க்கு மாவட்டத்தில் உள்ள நகரமே மண்ணை-மான்யகேடாவாகும். இராட்டிரக் கூடர்களுக்கும் பின்னர் மேலைச் சாளுக்கியருக்கும் தலைநகராக இது விளங்கியது.)
19. வெற்றித்தூண்கள்
இக்கருத்தினை உறுதிப்படுத்தும் வகையில், பருமாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ‘பெகூ’விற்கு அருகில் ஆறு பட்டைகளைக் கொண்ட இரண்டு வெற்றித் தூண்களைக் கண்டு பிடித்தனர். அவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னர், “கி.பி. 1025-1027 அளவில் நடைபெற்ற இராசேந்திர சோழனின் படை யெடுப்பில் நாட்டப்பட்ட வெற்றித்தூண்கள் அவை'' எனும் முடிவிற்கு அவர்கள் வந்தனர். அவற்றில் காணப்படும் கல் வெட்டுத் தொடர்களால், இம்முடிவிற்கு வந்தனர். அத்தூண்களில் கி.பி. பதினோராம் நூரற்றாண்டுக்குரிய கிரந்தக் கலப்பு தமிழ்மொழி வரிவடிவத்தில் கல்வெட்டுச் செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர். இத்தூண் கல்வெட்டுகளை ஆராய்ந்த பருமியக் கல்வெட்டுத்துறை அதிகாரி தா செயின் கோ (Taw Sein Ko) என்பவர்; *அவை இராசேந்திர சோழனுடைய வெற்றித் தூண்களே” என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறியுள்ளார்."
20. ‘மலாயா’வில் உள்ள ‘கெடா’தான் கடாரமா?
1918 வரை ஆராய்ச்சியாளர் கடாரம், பருமாவில் உள்ளதாகவே கருதினர். மலாயாவில் உள்ள கெடா என்னும் பகுதிதான் கடாரம் எனச் சிலர் கூறுகின்றனர். 1918 ஆம் ஆண்டில் கோடசு (CODES) என்னும் இடச்சு ஆய்வாளர் அவ்வாறே கருதுவதாகத் தெரிவிக்கிறார். இவருடைய கருத்தினையே, சமகாலத்து அறிஞர்கள் போற்றத்தொடங்கினர். இதன் விளைவாகப் பெகூவில் உள்ள இரு வெற்றித்தூண் தமிழ்க் கல்வெட்டுகள், பொய்யானவை என்று தவறுதலாகப் புறக்கணிக்கப்பட்டன.
ஆனால், கல்வெட்டுக்
கலைஞர் வெங்கையா அவர்களின் ஆராய்ச்சி முடிவு தா செயின் கோ (Taw Sein Ko) கருத்தையே உறுதி
செய்கிறது.
(Archalogical Report on Burma 1908 Para 25)
இவருடைய கருத்தை உறுதிப்படுத்துவது போல: பருமாவில் உள்ள பப்பாளம் என்னும் துறைமுக நகரத்தை இராசேந்திரன் கைப்பற்றிய வரலாற்றுச் செய்தி அமைகிறது.
கல்வெட்டுக் கலைஞர் வெங்கையா, இராசேந்திரனுடைய கடாரப்படையெடுப்பில் போர் நடந்ததாகக் குறிப்பிடப்படும் இடங்களை ஆராய்ந்துள்ளார். அவற்றுள் ‘பப்பாளம்’ என்பது எங்குள்ளது? என்பதை மகாவமிசத்தின் துணையைக் கொண்டு, அவர் முடிவு கட்டியுள்ளார். பருமாவின் துறைமுகத்தை ‘பப்பாளம்’ என மகா வமிசம் சுட்டுவதில் இருந்து, ‘பப்பாளம்’ மகாவமிசம் குறிப்பிடும் ‘பப்பாள’மாகவே இருத்தல் கூடும் எனும் முடிவிற்குத் தமிழ்நாட்டுக் கல் வெட்டு ஆராய்ச்சியாளர் வெங்கையா வந்துள்ளார். அதனால், கடாரம் என்பது பருமாவில் இருந்த அரசாகவே இருத்தல் வேண்டும் எனத் தோன்றுகிறது. எனவே, இராசேந்திரனுடைய படையெடுப்பு பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுகிறவை மெய்தான் என்றாகிறது.
மேலும் கி.பி.1084-1112 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த கியான்சித்தா (Kyansittha) என்ற பருமிய மன்னர் சோழப் பேரரசனோடு உறவு கொண்டிருந்தார் என்கிற கல்வெட்டும் கிடைத்துள்ளது.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj69uL1G9Frak35j3wA3aVxLq0L0_vfYYY25X%2BOQOKxt7g%40mail.gmail.com.