தங்கத் தமிழ்நாடு
சி. ஜெயபாரதன் & இராம. மேகலா
******************************
தங்கத் தமிழ்நாடு! எங்கள் தாய்நாடு!
சங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடு!
சிங்கத் தமிழர் உதித்த செந்தமிழ் நாடு!
மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு!
எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட
முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!
வங்கக் கடலெழு செங்கதிர் ஒளியூட்ட
தென்குமரி முனைதிகழ் வள்ளுவர் வழிகாட்ட
ஆத்திசூடி ஓளவை, சூடிக்கொடுத்த ஆண்டாள்,
வான்புகழ் வள்ளுவர், தேன்கவி இளங்கோ,
கவிச்செல்வர் கம்பர், கவிக்கோ சேக்கிழார்
புதுமைக்கவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன்,
யாவரும் உனது மாதவ மக்கள்!
யாதும் நாடே யாவரும் கேளிர்!
தீதிலா துனையாம் பாதுகாத் திடுவோம்!
காசினி மீதில் நேசமாய்த் திகழும்
மாசிலா நாடே! மைந்தர்கள் ஒன்றாய்
வாழ்த்துவம் உனையே! உயர்த்துவம் உனையே!
பாரதத் தாயின் தவத்திரு நாடே!
பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்
பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!
++++++++++++++++
S.Jayabarathan [jayaba...@gmail.com] October 24, 2016 [R-1]
தங்கத் தமிழ்நாடு – 2
சி. ஜெயபாரதன் & இராம. மேகலா
தங்கத் தமிழ்நாடு! எங்கள் தாய்நாடு!
சங்கத் தமிழ் வளர்த்த பண்டைத் திருநாடு!
முத்தமிழ் வேந்தர் வளர்முத் தமிழ்மொழி
மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு!
எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட
முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!
வங்கக் கடலெழு செங்கதிர் ஒளிபட,
தென்னக முனையில் வையக வள்ளுவர்
ஆத்திசூடி ஓளவை, திருப்பாவை ஆண்டாள்,
திருக்குறள் வள்ளுவர், சிலம்பு இளங்கோ,
புரட்சிக்கவி பாரதி, புதுமைக்கவி பாரதிதாசன்,
அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர்,
கவியரசு, கவிப்பேரரசு, கவிக்கோ, சேக்கிழார்
யாவரும் உனது மாதவ மக்கள்!
யாதும் நாடே யாவரும் கேளிர்!
மேதினியில் உனைப் பாதுகாத் திடுவோம்!
காசினி மீதில் நேசமாய்த் திகழும்
மாசிலா நாடே! மைந்தர்கள் ஒன்றாய்
வாழ்த்துவம் உனையே! உயர்த்துவம் உனையே!
பாரதத் தாயின் தவத்திரு நாடே!
பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்
பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!
++++++++++++++++
தமிழ்நாடா? தமிழகமா? என்கின்ற விவாதங்களும் அதனைத் தொடர்ந்து ”தமிழ்நாடுதான் சரி… இல்லை… தமிழகம்தான் சரி” என்று அவரவர் கட்சிச் சார்பு/ கொள்கைச் சார்பு நிலையிலான முடிவுகளும் சமூக வலைத்தளங்களில் தூள் பறக்கின்றன! 😁--
நாமும் இந்த ஆராய்ச்சியில் ‘தொபுக்கடீர்’ என்று குதித்து உண்மையைக் கண்டறிவோம்…வாருங்கள்! 🙂
***
முதலில் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தமிழ்நாடு, தமிழகம் இவற்றில் எந்தச் சொல் இடம்பெற்றுள்ளது; எது அதிகம் இடம்பெற்றுள்ளது என்பதனை ஆராய்வோம்.
தொல்காப்பியம்: இந்நூலில், ”தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற சொல் அதன் சிறப்புப் பாயிரத்தில் ’பனம்பாரனாரால்’ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது தவிர்த்துத் தமிழ்நாடு, தமிழகம் போன்ற சொற்கள் நூற்பாக்களில் இல்லை.
***
சங்க இலக்கிய நூல்கள்:
**********
1. தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டு அகமெல்லாம் (பரிபாடல்: 31)
2. வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு - 168)
ஆக, தமிழ்நாடு, தமிழகம் இரண்டுமே சங்க நூல்களில் காணக் கிடைக்கின்றன.
***
ஐம்பெருங்காப்பியங்கள்
**********
சிலப்பதிகாரம்:
******
1. இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய (சிலப்: வஞ்சிக்காண்டம்:25/165)
2. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்: புகார்க்காண்டம்:3/38)
சிலம்பில் தமிழ்நாடு, தமிழகம் இரண்டும் உள்ளன.
மணிமேகலை:
*******
1. சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் - (மணி:17/62)
மேகலையில் தமிழகம் மட்டுமுள்ளது.
சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி போன்ற நூல்களில் தமிழ்நாடு, தமிழகம் ஆகிய சொற்களில் எதுவும் காணப்படவில்லை.
***
திருக்குறள்: இதில் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழகம் முதலிய எந்தச் சொல்லும் வள்ளுவரால் பயன்படுத்தப்படவில்லை என்பது நாமறிந்ததே. 🙂
***
கம்பராமாயணம்:
*******
1. பிறக்கம் உற்ற மலைநாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர்… (கிட்:13 30/4)
2. தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் (கிட்:13 31/1)
3. இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார் (கிட்:15 50/4
4. என்ற தென் தமிழ்நாட்டினை எங்கணும் (கிட்:15 52/1)
தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு, தமிழ்நாடு, தமிழ்நாட்டினை ஆகியவை உள்ளன; தமிழகம் என்ற சொல் காணப்படவில்லை.
***
பெரியபுராணம்:
*******
1. பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில் சீர்ப்பதிகள் எல்லாம் - (வம்பறா:1 601/1)
2. நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லைப் பின்பட நெறியின் ஏகி - (வம்பறா:1 608/2)
3. புரசை வயக் கடக்களிற்றுப் பூழியர் வண்தமிழ்நாட்டு (வம்பறா:1 653/1,2)
4. தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ்நாட்டு மன்னன் - (வம்பறா:1 751/2)
5. தெருள்பொழி வண் தமிழ்நாட்டுச் செங்காட்டங்குடி சேர்ந்தார் - (வார்கொண்ட:3 35/4)
6. செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத் திரு மா மதுரை முதலான - (வார்கொண்ட:4 81/3)
*
1. சந்தப் பொதியில் தமிழ்நாடுடை மன்னன் வீரம் - (மும்மை:1 12/2)
2. வல்லாண்மையின் வண் தமிழ்நாடு வளம்படுத்து - (மும்மை:1 13/1)
3. ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும்பெறல் தமிழ்நாடுற்ற - (வம்பறா:1 604/1)
4. பானல் வயல் தமிழ்நாடு பழி நாடும்படிப் பரந்த - (வம்பறா:1 652/1)
5. தென் தமிழ்நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார் - (வம்பறா:1 750/2)
6. எங்கள் பிரான் சண்பையர்கோன் அருளினாலே இரும் தமிழ்நாடுற்ற இடர்நீக்கி - (மன்னிய:2 1/3)
பெரியபுராணத்தில் ’தமிழ்நாட்டு’ என்ற சொற்கள் ஆறு இடங்களிலும், ’தமிழ்நாடு’ என்ற சொற்கள் ஆறு இடங்களிலும் பயின்று வந்திருக்கின்றன. ’தமிழகம்’ என்ற சொல் இல்லை.
***
இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகள்
***************
மகாகவி பாரதி: இருபதாம் நூற்றாண்டின் மகாகவியான பாரதியின் பாடல்களை ஆராய்ந்தால் அதில் ’செந்தமிழ்நாடு’ என்ற தலைப்பில் அவரெழுதிய பாடலைக் காணமுடிகின்றது.
”செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே” எனத் தொடங்கும் அப்பாடலில் ”தமிழ்நாடு” என்ற சொல் பன்முறைப் பயின்றுவந்துள்ளதைக் காணமுடிகின்றது. ”தமிழகம்” என்ற சொல்லை அவர் பாடல்களில் காணமுடியவில்லை.
**
பாவேந்தர் பாரதிதாசன்:
**********
தம்முடைய ஒரு கவிதைக்கு “வெல்க தமிழ்நாடு” என்று தலைப்பிட்ட பாவேந்தர் மற்றோர் இடத்தில் ”தமிழகம் மீளவேண்டும் ஆரிய ஆட்சி ஒழிய வேண்டும்!” என்று தலைப்பிட்டிருக்கின்றார். இரண்டு சொற்களையும் தம் பாடல்களில் பயன்படுத்தியிருக்கின்றார்.
எனவே, அவருக்குத் தமிழ்நாடு, தமிழகம் இருசொற்களும் உடன்பாடே எனத் தெரிகின்றது. :-)
***
இவ்வாறு பண்டைய இலக்கியங்கள் தொடங்கி இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகள் வரை ஒரு பருந்துப் பார்வை பார்த்ததில் தமிழ்நாடு, தமிழகம் என்ற இருசொற்களும் தமிழ்நிலத்தைக் குறிக்கும் சொற்களாகத் தொடர்பயன்பாட்டில் உள்ளமை தெளிவாய்த் தெரிகின்றது.
எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது ”தமிழ்நாடு” என்ற சொல் ”தமிழகம்” என்பதைவிடவும் இலக்கியங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது புலனாகின்றது.
***
இனி, தமிழறிஞர்களின் நூல் தலைப்புக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது தமிழ்நாடா தமிழகமா எனப் பார்ப்போம்.
மா. இராசமாணிக்கனார்:
1. தமிழக ஆட்சி, தமிழகக் கலைகள், புதிய தமிழகம்
2. தமிழ்நாட்டு வட எல்லை
டாக்டர் கே.கே. பிள்ளை
1. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்
புலவர் கா. கோவிந்தன்:
1. காலந்தோறும் தமிழகம்
2. தமிழகத்தில் கோசர்கள்
3. தமிழக வரலாறு
ந.சி. கந்தையா பிள்ளை
1. தமிழகம்
டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை
1. தமிழகம் – ஊரும் பேரும்
மகாவித்வான் ரா. ராகவையங்கார்
1. தமிழகக் குறுநில வேந்தர்கள்
மார்க்சிய அறிஞர் நா. வானமாமலை
1. தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்
2. தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
பெரியசாமித் தூரன்
1. பாரதியும் தமிழகமும்
அறிஞர் அண்ணா
1. ஏ, தாழ்ந்த தமிழகமே! (கட்டுரை)
பேரா. தொ. பரமசிவன்
1. அறியப்படாத தமிழகம்
அனைத்து அறிஞர்களின் நூல்களையும் ஆராய்வது சாத்தியப்படவில்லை; கிடைத்த அளவில் ஆராய்ந்ததில் தமிழ்நாட்டைக் காட்டிலும் தமிழகம் என்ற சொல் அறிஞர்களின் நூல் தலைப்புக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவருகின்றது.
***
இவையன்றி, நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுவது தமிழ்நாடா தமிழகமா என்று பார்த்தால்…
விகடன்: தமிழக அமைச்சரவை விரிவாக்கம்…
தினமணி: தமிழகத்தில் கோயில் சிலைகள் பாதுகாப்பாக இல்லை – முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல்.
இந்து தமிழ் திசை: ”தமிழக” ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு என்பதைவிடத் தமிழகம் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று பேசியது சர்ச்சையான நிலையில் சமூக வலைதளங்களில் #TamilNadu #Thamizhagam என்று இரண்டு ஹேஷ்டேகுகள் மூலம் மக்கள் கருத்துகளைக் குவித்து வருகின்றனர்.
ஆகவே, பத்திரிகைப் பயன்பாட்டில் தமிழகமே முன்னிலை வகிக்கின்றது.
***
மேற்கண்ட அனைத்துத் தரவுகளையும் தொகுத்துப் பார்க்கையில் தமிழ்நாடு தமிழகம் இரண்டுமே இலக்கியங்களிலும் நூல்களிலும் இதழ்களிலும் தொடர்ந்து புழக்கத்திலுள்ள சொற்களே என்பது உறுதியாகின்றது. எனினும், தமிழ்நாடு என்ற பெயர் மாநிலத்தின் பெயராக அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில் முறையாக மாற்றம்பெற்று நடைமுறைக்கு வந்துவிட்டபடியால் அதனைத் தமிழகம் என்று இப்போது மாற்ற வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அதேநேரத்தில் தமிழகம் என்ற சொல்லையும் அதற்கு இணையான சொல்லாக நாம் தொடர்ந்து பயன்படுத்துவதில் தவறேதுமில்லை.
என்னினிய தமிழ்மக்களே... “தமிழ்நாடு” என்று சொல்பவர்தாம் தமிழுணர்வாளர்; ”தமிழகம்” என்று சொல்பவர் தமிழுணர்வு அற்றவர் என்ற வகையில் செய்யப்படும் பரப்புரைகளும், பகிரப்படும் மீம்களும் பொருளற்றவை; உண்மைக்கு மாறானவை என்பதையும் இங்கே அழுத்தமாகப் பதிவிட விரும்புகின்றேன். 👍
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (அறிவுடைமை: குறள்: 423)
- திருமதி மேகலா இராமமூர்த்தியின் முகநூல் பதிவு
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcqfy2%2BQEb7TspvuYJ8uK5u%2B9jWSYQYQbOb2xchQsBDsg%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyCr0BqpxWYSwO39TUwKiZY09744FdKjSm40r6AN2t0N6Q%40mail.gmail.com.
சரியாகச் சொன்னீர்கள்!
ஆம், தமிழகம் என்றால் இன்று அதன் பொருள் தமிழ் உலகம்
தமிழ் உலகம் > தமிழுலகம் > தமிழகம் என்று பொருள் உரைக்க வேண்டியதுதான்
தமிழகத்துக்குள் இந்தியா அடக்கம்!