மூலிகையின் பெயர் – கற்பூரவல்லி
வேறுபெயர்கள் – ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.
தாவரப்பெயர் – COLEUS AROMATICUS
குடும்பம் – Lamiaceae
வளரும் தன்மை – இதன் தாயகம் இந்தியா. இதைப்பற்றிய குறிப்பிகள் நமது சித்தர்கள் ஓலைச் சுவடிகளில் இருந்ததாக சரித்திரம் சான்றியம்புகிறது. இந்தியாவின்அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய மூலிகைச் செடி நன்றாக வளரும். இதை வீட்டில் உள்ள சிறிய தோட்டத்தில் கூட வளர்த்து உடனடி நிவாரணத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் வண்டல் மண், செம்மண், களிகலந்த மணற்பாங்கான இருமண்பாட்டு நிலம் ஏற்றது.
6.5 – 7.5 வரையிலான கார/ அமிலத்தன்மை ஏற்றது. தட்பவெப்பம் குறைந்தது 25°C முதல் 35°C இருக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்ய 4 இலைகளுடன் கூடிய சுமார் 4 அங்குலம் நீளம் கொண்ட தண்டுகளை நட்டு நீர் பாச்சினால் ஒரு மாதத்தில் நாற்று வளர்ந்து விடும். 6 மாதத்தில் பூக்காம்புகள் உருவாகும்போதே அதனை அகற்றிவிட வேண்டும். பூக்கள் சிறியதாக இருக்கும். சுமார் 8 மாதத்தில் இலைகள் முதிர்வடைகின்றன. அப்போதுதான் ‘மென்தால்’ சதவிகிதம் அதிகமாகக் காணப்படும்.
பசுமையான இந்த தாவரம் நல்ல கனமான, வட்டவடிவான வாசனைமிகுந்த அழகிய இலைகளை உடையது. இலை ஓரங்கள் கத்தரித்துபோல் அழகாய் இருக்கும். இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத் தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும்.
பயன்தரும் பாகங்கள் – தண்டு, இலைகள் ஆகியவை.
“காச இருமல் கதித்தம சூரியயையம்
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு” – அகத்தியர் குணபாடம்
“கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே” – தேரையர் குணபாடம்
கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும்.
இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சீதள இருமல் தீரும்.
இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காய்ச்சல் போகும். இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக்கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த, குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள். இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.
கற்பூரவள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.
மூலத்தில் சூடு இருந்தால் மூக்கினில் நீர் வரும் என்பது சித்தர் வாக்கு. வீட்டு வைத்தியத்தில் ஜலதோஷம், இருமல் நீங்க, இரண்டு கற்பூரவல்லி இலைகளை கழுவி, நசுக்கி சாறு பிழிந்து 1/2 தேக்கரண்டி தேனுடன் உண்டால் நிவாரணம் கிடைக்கும்.
ஒரு இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் உணவு ஜீரணம் நன்றாக ஆகும்.
கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும்.
வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது.
மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது.
இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
ஆஸ்துமா பாதிப்பிலிருந்து விடுபட
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும். இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.
புகை பிடிப்பவரா..?
புகை நமக்குப் பகை என்ற வாசகம் போட்டு இருந்தும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அரசு பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு தடை பிறப்பித்தும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. புகையினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்பட்டும் இந்நிலை மாறவில்லை. புகைப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்றுநோயாக மாறுகின்றது. இவர்கள் கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
வியர்வை பெருக்கி
சிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.
இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.
காசநோய்
காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். கற்பூரவள்ளி செடியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் ஈறாடுகால் (12 அடி விட்டம்)வரை எந்த விதமான பூச்சிகளையும் அண்டவிடாது.
சித்தர்கள் இதனை கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவார்கள். இதனால் கூட இதற்கு கற்பூரவள்ளி என்று பெயர் வந்திருக்கலாம்.
வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம். நாட்டைப் பாதுகாக்கும் போர்ப்படை வீரர்களைப் போல் மனிதனை இந்த கற்பூரவள்ளி பாதுகாக்கிறது.
நாமும் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதன் பயனைப் பெறுவோம்