"நிறைந்த மனமே வேண்டும்"
(மீ. விசுவநாதன்)
உலகெங்கும் ஆனந்த ஊற்றாக வேண்டும்
உள்ளத்தில் அன்பென்ற தேன்கொள்ள வேண்டும்
கலகலென எப்போதும் களித்திருக்க வேண்டும்
கையள்ளித் தருகின்ற வள்ளல்வாழ் வேண்டும்
கலைமிக்க ஞானத்தால் மேலோங்க வேண்டும்
கடைக்கோடி மனிதரையும் கைகோர்க்க வேண்டும்
அலைகடலின் ஆழத்தின் நல்முத்து போன்ற
அழ்ந்திருக்கும் ஆன்மாவில் அகம்நிலைக்க வேண்டும்.
ஓரறிவு ஆறறிவு உயிக்கூட்டம் எல்லாம்
ஒன்றுக்கு ஒன்றாக உதவிடவும் வேண்டும்
ஈரமுள்ள இதயத்தால் எப்போதும் வாழ்த்தும்
இரக்ககுண சீலரெனும் பேர்வாங்க வேண்டும்
வாரணம்போல் வலிமையுடல் ஞானமுமே வேண்டும்
வற்றாத புன்சிரிப்பு இன்முகமும் வேண்டும்
பூரணமாய் இருக்கின்ற ஓர்முதல்வன் எண்ணி
பூமியிலே அனைத்துயிரும் பொலிவுறவும் வேண்டும்.
(20.04.2026 இன்று அக்ஷய திருதியை நந்நாள்)