“ஸ்ரீ குருவாயூர் கிருஷ்ண பதிகம்”
(மீ. விசுவநாதன்)
(பாவின் வகை: கட்டளைக் கலித்துறை)
அன்னை மடியிலே வந்தநற் போதில் அறிந்திடவே
உன்னை நொடியிலே எண்ணிய போதோ உணரவல்லேன்
என்னைத் திருத்தியே இன்தமிழ் ஈந்தே இயல்புடனே
உன்னைப் புகழ்க்கவி செய்யவே வைத்தவா உன்சரணே. (1)
மச்சமாய் கூர்மவ ராகனாய் சிம்மனாய் வந்தருளும்
மிச்சனே! வாமன னாகிய வானமே! வேதவொலி
உச்சனே! ராமனே! கண்ண குருவென உட்புகுந்த
இச்சனே! ஈசனின் மச்சின ஆதியே என்னன்பனே! (2)
கண்ணக் கனியமு தானவன் கார்போல் கரியவன்தான்
மண்ணில் பிறந்ததும் மாயையால் கோகுலம் வந்தடைந்தான்
தண்ணீர் வழிவிடத் தந்தை சுமக்கச் சுகமுடனே
வெண்ணை நினைவிலே சோதைக் குழந்தையாய்ச் சென்றவனே. (3)
பாலும் பழத்தைப் பருகிடத் தந்தால் பறந்திடுவாய்
நீலக் கருமணி நாகப் பழவாய் திறந்திடுவாய்
கோலை எடுத்துடன் சோதை விரட்டவே கோகுலத்துச்
சேலை விரைந்துனைத் தூக்கியே கொஞ்சிக் சிரிக்குமாமே. (4)
சோதைபால் தட்டியே பூதகிப் பாலுயிர் கொண்டவனை
பேதையாம் அன்னை திருட்டி கழிக்கவே கூப்பிடுவாள்
காதிலே போடவே மாட்டாய் கருமையாம் கண்ணனுக்கு
ஏதுமே துன்பம் நெருங்கிடா தென்றே இருப்பயாமே. (5)
உறியடி ஆடுவாய் ஊர்வம் பிழுப்பாய் உரிமையாக
நெறிமுறை மாறுவாய் தீயென நின்றே விதிபலவும்
அறிந்தவ னாகவே ஆட்சியும் செய்யும் அரியேயுனை
அறிகிற ஆற்றலை ஆறறி வார்சொல் அளந்திடாதே. (6)
மாயவா மாலவா கோகுல வாசவா மாதவனே
தாயவள் சோதை தருவது போலவே சங்கெடுத்துப்
பாயசம், சக்கரை, பாலுடன் நேர்ந்துநான் தந்திடுவேன்
ஆயசம் இன்றியே ஓடலாம் இப்பநீ உண்ணலாமே. (7)
காலையில் சந்தனக் காப்பிலே கண்டத்தில் கண்பனித்தேன்
மாலையில் யானைமேல் உள்வலம் போவதோ வண்மலர்த்தேன்
பாலையோ சோலையோ உன்முகப் பாலைப் பருகுவனே
நீலவான் வண்ணனே நீயெனைக் காத்திட வேண்டுறனே. (8)
நாயெனச் சுற்றியே நாளினைக் கொன்றவன் நம்புகின்றேன்
ஆயிர நாமனை ஆழ்ந்துநாம் எண்ணிட ஆசைவைப்பாய்
தூயதோர் சிந்தனை ஊற்றெனக் காணுமே துன்பமில்லாய்
சேயவன் சத்தியன் சீக்கிரம் யாவரும் சேருவீரே. (9)
பஞ்சமா பூதனே! பாரதப் போரின் பரிதியொளிக்
குஞ்சனே! நற்குரு வாயூர னே!உன் குளிரடிகள்
தஞ்சமே கொண்டதால் தப்பிலா வாழ்வும் தவநினைவும்
பிஞ்சிலே பேற்றினைத் தந்தவா! நெஞ்சம் நிறைந்தவனே. (10) (பலன்)
கூடவே கற்றவன் ஏழைக் குசேலனைக் கோபுரத்துக்
கூடலில் வைத்தவன் கொஞ்சும் குழந்தைபோல் உள்ளவனை
நாடினால் சொக்கியே நின்றிடச் செய்கிற நந்தகுலம்
பாடினால் நோய்வினை தீருமே நம்பிவா பக்திசெய்தே. (11)
(10.03.2026 15.44 pm)