. கலைவாணி!
விளையாடப் பொம்மைகளை விழைவயதில் இலக்கணத்தின்
விதிகற்றுத் தந்தாய் அம்மா!
இளையோனாய் இருக்கையிலே இன்றமிழின் இலக்கியத்தில்
ஈர்ப்புவரச் செய்தாய் அம்மா!
தளையோடு சீரசைகள் தாமாகச் சொற்களுடன்
சதிராட வைத்தாய் அம்மா!
எளியேனின் உள்ளத்தில் கலைவாணி வந்தமர்ந்தாய்
எனக்கென்ன குறையிங்(கு) அம்மா!
. இசைவாணி!
கல்லாக இருந்தவனைக் கவிஞனென மாற்றியதால்
காவியங்கள் புனைந்தேன் அம்மா!
புல்லாக இருந்தவன்மேல் பனிமகுட வைரத்தைப்
பொருத்தியதால் சிறந்தேன் அம்மா!
சொல்லாகப் பொருளாகத் தோய்ந்திருக்கும் சுவையாகத்
தோன்றுவதுன் அருளே அம்மா!
எல்லாமாய் இருப்பவளும் எழிற்கலையில் சிரிப்பவளும்
இசைவாணி நீயே அம்மா!
கலைமகள்!
கூவுகுயில் குரலினிலும், கூடுகளில் பேசுகிளி
குதலையிலும் உள்ளாய் அம்மா!
மேவுகுழல் இசையெனவும், விளைந்துவரும் தாளமென,
விளங்குவதும் நீயே அம்மா!
காவளரும் தேன்மலர்கள் காணவரும் வண்டுமுரல்
காலைப்பண் ஆவாய் அம்மா!
பாவலர்கள் போற்றுவதும், பழமறைகள் சாற்றுவதும்
பாவையுன்றன் புகழே அம்மா!
‘ - - தில்லைவேந்தன்.
..
..
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hiXShs7ahb3-BBaySALzWjYhbYg7-UWpr9PGEkPsDbTGw%40mail.gmail.com.