கோசலை பெற்ற குமரன், குணக்குன்று
பேசரும் பண்புப் பெரியவன், தெய்வமே
பாரில் மனிதனாய்ப் பாவனைகள் செய்திடவே
நேரில் இறங்கிவந்த நித்தியம், தந்தைசொல்
காத்திட வேண்டியே, காட்டுக்குச் சென்ற மகன்
பூத்திடும் நெஞ்சில் புனிதங்கள் தேக்கியவன்,
சத்தியத்தின் நேர்பிறவி, சாந்தத் திருவுருவம்,
இத்தரையின் வாழ்வில் எடுத்துக்காட் டாகியவன்
செத்த தடத்துள்ளும் ஜீவன் வரவாக்கும்
உத்தமன், கல்லில் உயிர்தூவி வைத்தமகன்,
அண்ணல், அறத்தின் அவதாரம், அஞ்சன
வண்ணன், ,கமல மலர்க்கண்ணன், வில்லேந்து
வீரன், விவேகி, வேடன்குகன் அண்ணன்,
தீரன், அபயச் சிகாமணி, கண்ணசைவின்
சின்னத் திருப்பத்தில் தெய்வம் ஒளிவீச
என்னவெனத் தேறாத ஏதோவோர் இன்பத்தின்
மின்னல் கனிச்சூட்டின் விந்தை விளைக்கிறவன்
உன்னதத்தின் உன்னதத்தின் உன்னதத்தின் உச்சமவன்
தன்மனத்தி லே பகைமைத் தன்மை அறியாதான்
இன்னபடி என்றே இலக்கணமாய்க் காட்டுதற்கே
சொன்னபடி தான்நின்ற சுந்தரன், மற்றொருவர்
துன்பத்தைக் கண்டால் துடிக்கிறவன், மண்ணாளும்
பாக்கியத்தைக் கூடப் பரவசமாய் எண்ணாதான்
வாக்கினிலே தூய்மை, வடிவத்தில் பேரழகு,
வானத் தமுதம் வடிவெடுத்து வந்ததுபோல்
போன இடமெல்லாம் புத்துணர்ச்சி ஊட்டியவன்
சற்றே விழிசிவந்தால் தாவும் கடல்வற்றும்
பற்றும் பெருங்கனலில் பாரே சிவப்பாகும்
ஆனால் சினம் கொள்ளான், அன்பே அவன் மூச்சு
தானாக வந்து சரணம் அடைபவரின்
கோத்திரம் பாரான், குலம்பாரான், ஒன்றாவான்
தீத்திறத்து மாற்றாரைத் தீய்க்கின்ற வெம்மைநிலா
கங்கு குளிர்ந்த கதிராவான் அன்பர்க்கே,
பொங்குமவன் புன்னகையில் போது மலராகும்
கங்குல் வெளிப்பூச்சு, காப்பதுவோ வெள்ளைமனம்
தங்கும் வனமுமிவன் சன்னதியி லேசொர்க்கம்
கங்கை புனிதமவன் காலடியிலே கொள்ளும்
பொங்கி வெடிக்கின்ற பூவில் அவன்சுகந்தம்
ஓர்சொல்லில் ஓர் இல்லில் ஓர்வில்லில் நிற்கிறவன்
நேர்பாதை செல்லும் நெறியின் வழிகாட்டி
போதன், புனிதன், புகழின் பொருளாளன்,
வேதன், வினயன், விரிஞான நீதிமகன்,
அல்லழகன், நல்லறிஞன், ஆனந்தன் அற்புதன்
சொல்லழகன், ஆண்களையும் சொக்கிவிடச் செய்கிறவன்
சீதை கணவன், திறல்மறவன், செம்மனத்தன்
ஆதி, அநாதி, அறத்தை அணிகிறவன்
என்றெல்லாம் பல்லோரும் ஏற்றும் இராமபிரான்
தன்கதையை இவ்வரங்கில் சாற்றுகிறான் கேட்போமா?