மார்கழி வெண்பாக்கள் -2025-26

6 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Dec 25, 2025, 8:48:59 AM (2 days ago) Dec 25
to சந்தவசந்தம்
தினம் ஒரு வெண்பா என்று ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களில் பொதிந்துள்ள பல  பொருட்களில்  அடியேன் மனத்தைக் கவர்ந்த  ஒன்றை எடுத்து தினமும் வெண்பாவில் இடுகிறேன். முதல் 10 நாட்களின் வெண்பாக்களை இங்கு இடுகிறேன். மற்றவை தினம் தினம் வரும்.
தாஸன் புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

மார்கழி வெண்பா – 2025

அடியார்க்கடியான்

(புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி)

 

காரார் திருமேனிச் செங்கண் கதிர்மதியன்

சீரார் குணமதில் மூழ்கியே - நீராட

வாரீர் நமக்கெனவே நாரணன் நற்பறை

நேரிழை நன்னழைப்பை நேடு                                                   1

 

வையத்துள் வாழவகை யிட்டு விரதத்தில்

ஐயமும் பிச்சையும் சேர்த்தங்கே - பையத்

துயிலரியைப் பாடென்ற பாவைமொழி என்றும்

உயிரெனக் கொள்ளல் உயர்வு                                                     2

 

ஓங்கி யளந்த உலகிடை ஞானத்தைத்

தேங்க நிறைக்கும் குருவினை - நீங்காத

செல்வம்  எனக்காட்டும் தீந்தமிழ் முப்பதைத்

தொல்மறை சாரமெனத் தேக்கு                                                   3

 

வாழ வுலகில் மழையை அழைத்தவள்

ஆழி நிறத்தனைக் கொள்ளென்றாள் - ஊழியில்

ஏழை கரக்காது கைகுவிக்கக் காப்பனென்ற

தோழி செவிச்சொல் திரட்டு                                                        4

 

மாயன் வடமதுரை மைந்தன் குலவிளக்கன்

தூயோர் மலர்தூவும் ஆதியன் -  வாய்பாட

தீயினில் தூசாய் வினைதீர்ப்பன் பாடென்ற

தூயசொல் கோதைதமிழ் தாங்கு                                                  5

 

வெள்ளத் தரவில் துயில்கொளும் வித்தகன்

உள்ளமதைக் கண்டளிப்பான் மோக்கமே - பிள்ளையாய்க்

கள்ளமிலா நெஞ்சில் அரிநாமம் தேக்கிடவே

வெள்ளமிடும் வைகுந்த வாழ்வு                                                 6

 

வேதக் கடலைநல் புத்தியெனும் மத்திட்டுக்

கோதில் அமுதமே கொண்டிடுசீர் - ஆதியான்

கேசவனைப் பாடியே தேசடை என்றிட்ட

வாசக் குழலிசொல் வாழ்வு                                                          7


கோதுகலம் கொண்டன்றோ கீதையனைக் கூவிடணும்

ஏதுமில்லை என்றிடினும் ஈவனருள் - போதிலெழு

தேவாதி தேவனையே சேவியுந்தன் ஆகாப்பான்

நாவிலிடு நம்கோதை நூல்

 (ஆ- ஆன்மா)                                                                                   8

 

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றிடவே

ஏமத்தில் சிக்காது நம்மனமே - நாமங்கள்

தூமணி மாடத்தில் வைக்கும் நமையென்ற

பாமகளைப் பாராட்டிப் பாடு                                                       9

( ஏமம்- கலக்கம்)

 

நாற்றத் துழாயனாம் நாரணன் நற்பாதம்

நோற்றே பிறவியறு என்றிட்டுத் - தோற்காத

ஆற்றல் அமுதிடும் பாவைப் பசுந்தமிழைப்

போற்றிப் பறைகொள் பணிந்து                                                  10

Kaviyogi Vedham

unread,
Dec 25, 2025, 11:30:51 AM (2 days ago) Dec 25
to santhav...@googlegroups.com
ok. seen  good,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/8feb2207-1c42-498a-944e-a3c11cc1e9f6n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages