ஆடிப்பிறப்பு ஏன் கொண்டாடப்படுகிறது?
— தேமொழி சூரிய நகர்வின் அடிப்படையில் ஒரு பருவ காலத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் முறையில் ஆடி மாதத்தின் தொடக்கத்தைக் கொண்டாடுகிறார்கள். ஜூன் 21 அன்று கோடைக்கால கதிர்த்திருப்ப நாள்(summer solstice) நிகழ்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் (கடக ரேகையிலிருந்து மகர ரேகை நோக்கி), தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் (மகர ரேகையிலிருந்து கடக ரேகை நோக்கி) நகரும். இவ்வாறு சூரியன் வட தென் திசைகளை நோக்கி மாறி மாறி நகர்வது சூரியனின் தென்திசைச் செலவு என்றும் சூரியனின் வடதிசைச் செலவு என்றும் அழைக்கப்படுகிறது. புவி தன்னைத்தானே சுழலும் அச்சு 23.5° சாய்ந்திருப்பதால், சூரிய நகர்வு பருவ காலங்களை உருவாக்குகிறது (The Seasons, the Equinox, and the Solstices. NOAA.
https://www.weather.gov/cle/seasons).

அறிவியல்படி சூரியனின் தென்திசைச் செலவு/தட்சிணாயனம் (ஜூன் 21 — டிசம்பர் 22) ஆகும். இக்காலம் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். ஆக, தென்திசைச் செலவு ஆடித் திங்களில் தொடங்கி மார்கழியில் முடிகிறது.
அதுபோல, சூரியனின் வடதிசை நகர்வு அல்லது குளிர்கால கதிர்த்திருப்பம் நிகழும் நாள் டிசம்பர் 22. சூரியனின் வடதிசைச் செலவு/உத்தராயணம் (டிசம்பர் 22 — ஜூன் 21) ஆகும். இக்காலம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். வடதிசைச் செலவு தைத்திங்களில் தொடங்கி ஆனியில் முடிகிறது. சூரியனின் வடதிசைச் செலவு தொடக்க நாளில் தமிழகத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
முன்னும் பின்னுமான இந்த இரண்டு சூரிய நகர்வுகளுக்கும் இடையில், இரண்டு இரவு பகல் சம நாட்கள் (Equinox, மார்ச் 21, செப்டம்பர் 22) ஏற்படும். எனவே டிசம்பர் 22, மார்ச் 21, ஜூன் 21, செப்டம்பர் 22 ஆகிய நாட்கள் ஒவ்வொரு பருவகாலத்தின் தொடக்கங்களாக அமைகின்றன. ஜூன் 21 கோடைக்கால கதிர்த்திருப்ப நாள் என்பது ஆடியின் தொடக்கமாக, ஒருகாலத்தில் கோடைக்கால கதிர்த்திருப்ப நாளாக இருந்ததைப் புரிந்து கொள்ளலாம்.
புவியின் அச்சுத்திசை மாறுமியக்கம் (Precessional Motion) காரணமாகச் சூரிய நகர்வுகளைக் குறிக்கும் நாள் பஞ்சாங்கத்தில் மூன்று வாரங்களுக்கு மேல் தள்ளிப் போய்விட்டது. பஞ்சாங்கம் இதைச் சீர் செய்யவில்லை, இதை 'பஞ்சாங்கப் பிழை' எனக் குறிப்பிடுவார் 'விஞ்ஞான் பிரச்சார்' நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளரும் ஆன த.வி.வெங்கடேஸ்வரன். (பொங்கல் நாள் மாறிய மர்மம், த.வி.வெங்கடேஸ்வரன், அருஞ்சொல், ஜனவரி 21, 2023.
https://www.arunchol.com/tv-venkateshwaran-on-pongal-date-changing).
டிசம்பர் 21 ► ஜனவரி 14
குளிர்காலக் கதிர் திருப்ப நாள் = தைப்பிறப்பு
வேறுபாடு 24 நாட்கள்
மார்ச் 21 ► ஏப்ரல் 14
இரவுபகல் சமநாள் /இளவேனில் தொடக்கம் = சித்திரை பிறப்பு
வேறுபாடு 24 நாட்கள்
ஜூன் 21 ► ஜூலை 17 (ஆனியில் இம்முறை 32 நாட்கள்!!!)
கோடைக்காலக் கதிர் திருப்ப நாள் = ஆடிப்பிறப்பு
வேறுபாடு 26 நாட்கள்
செப்டம்பர் 22 ► அக்டோபர் 18
இரவுபகல் சமநாள் / குளிர்காலத் தொடக்கம் = ஐப்பசி பிறப்பு
வேறுபாடு 26 நாட்கள்
"ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை - 360 பாகைகளை - 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை." (பார்க்க:
http://www.sishri.org/puthandu.html, சித்திரையில்தான் புத்தாண்டு, எஸ். ராமச்சந்திரன்)
[சித்திரை விஷு=சித்திரை; தக்ஷிண அயனம்=ஆடி; ஐப்பசி விஷு=ஐப்பசி; உத்தர அயனம்=தை ஆகிய மாதங்களில் தொடங்கும் பருவ காலங்களின் தொடக்கங்கள்]
இதிலிருந்து கோடைக்காலக் கதிர் திருப்ப நாளை பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது. ஆனால் அதைக் கொண்டாடினார்களா என்பது ஆய்வுக்கு உரியது. இருப்பினும், சூரிய நகர்வுகளைக் கொண்டாட விரும்பும் இக்காலத்துத் தமிழர் ஏன் கொண்டாடுகிறோம் என்ற காரணம் புரியாமல் பிழையான காலக் கணக்கில், ஜூன் இறுதி வாரத்தில் கொண்டாட வேண்டிய நாளை ஜூலையும் தொடங்கி இரண்டு வாரங்களுக்குப் பிறகு கொண்டாடிக் கொண்டிருப்பது காலம் அதன் கோலம்.