கீழ்க்காணும் எனது பதிவிற்கு, தளத்தில் தரவுகளை இணைத்தவரிடம் இருந்து இன்று பேஸ்புக் தனிச்செய்திப் பெட்டியில் மறுமொழி கிடைக்கப் பெற்றேன்.
கெங்கவல்லி ஆ.மணவழகன்
தமிழ்ப் பேராசிரியர்
(Dr.A.Manavazhahan)
எனது மறுமொழி:
விளக்கத்திற்கு மிக்க நன்றி.
இதை நான் மின்தமிழில் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள்.
-----------------------------------------
வணக்கம்.
நான் மணவழகன். தமிழியல்.காம் தளத்தில் நான் பதிவிட்டுள்ள தமிழாய்வுத் தலைப்புகள் தொடர்பாக நீங்கள் பதிவிட்டுள்ள கருத்தினை ‘மின்குழுமத்தில்’ (ஆக.7,2021) தற்செயலாகக் காண நேர்ந்தது (நீங்கள்தான் என்று எண்ணுகிறேன்).
உங்கள் புரிதலுக்காக:
1. “இந்த முயற்சி மனமகிழ்ச்சி தருகிறது.
ஆனால், மனநிறைவு தரவில்லை.
இது முழுமையான தரவுகளைக் கொண்டதாக கருத முடியவில்லை. “
- மனமகிழ்ச்சிக்கு நன்றி
- கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் உங்களைப் போன்ற மிகப்பெரிய வல்லுநர்களின் மனநிறைவிற்கானதல்ல; இதுவரை வெளிவந்துள்ள தமிழியல் ஆய்வேடுகள் குறித்த அடிப்படைத் தகவல்கள்கூட கிடைக்காமல், தலைப்பை எப்படி தேர்வு செய்வது என்பதை அறியமுடியாமல், தவறுதலாக ஏற்கனவே வெளிவந்துள்ள ஆய்வுத் தலைப்புகளையே (புதுமை என்றெண்ணி) தேர்வு செய்துவிடும் தொடக்கநிலை ஆய்வாளர்களுக்கானது. அவர்களுக்கு இது மனநிறைவை அளித்துள்ளது. என் இலக்கும் அவர்களே.
2. தமிழ்த்துறை ஆய்வில் “முதல் முனைவர் பட்டம் பெற்றவர்” என்ற தகுதி பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் (Dr. P.S. Subrahmanya Sastri) அவர்களைச் சேரும்.(1930)
- 1925 ஆம் ஆண்டிலேயே தமிழியல் ஆய்வு வெளிவந்துள்ளதை அறிக. ஆனால் அதுகுறித்து உரிய தரவுகள் கிடைக்கப்பெறவில்லை. உங்களிடம் இருந்தால் வழங்கலாம் (தளத்திலும் இக்கருத்தையே பதிவிட்டுள்ளேன்.)
3. தரவுகளைப் பெற்ற முறையும் வியப்பளிக்கிறது. இது போன்ற தரவுகளுக்கு செல்ல வேண்டிய இடம் பல்கலைக் கழக நூலகம். ஒவ்வொரு ஆய்வேடும் நூலகத்திற்கு ஒரு படி அனுப்பப்படும்.
- உயராய்வு நிறுவனத்தில் பணியாற்றும் நான், இதைக்கூட அறியாமல் இருப்பேன் என்ற முடிவிற்கு நீங்கள் வந்திருப்பது பெருவியப்பு. எத்தனை பல்கலைக்கழக நூலகங்களில் ஆய்வேட்டுப் பட்டியல்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறது? எத்தனை நூலகங்களில் ஆய்வேடுகள் உரிய முறையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன? நீங்கள் கூறினால் நான் பயன்படுத்திக்கொள்வேன்.
- அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கும் ஆய்வேடுகளின் விவரம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஒரேயொரு பல்கலைக்கழத்தில் இருந்து மட்டுமே பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் ஆய்வுத் தலைப்புகள் மட்டுமே. ஆய்வாளர் பெயர்கூட அதில் இடம்பெறவில்லை…
- வியப்படைவதற்கு முன்பாக நடைமுறை எதார்த்தம் அறிக
4. ஆய்வாளர் நிறைவு செய்து பட்டம் பெறவில்லை என்றால், அதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
- இக்கருத்து எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது. “வெளிவந்துள்ள ஆய்வேடுகளின் பட்டியல்” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில் நிறைவு செய்யாத ஆய்வேடுகள் பற்றிய கேள்வி எங்கிருந்து வந்தது? சரி, நிறைவு செய்யாத ஆய்வேட்டுப் பட்டியலை எப்படிப் பெறலாம்? வழிமுறை கூறவும்.
- பதிவு செய்யப்பட்ட தலைப்பில் குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆய்வேடு வழங்கப்படவில்லை என்றால் அது உயிர்ப்பு நிலையை இழந்துவிடும். ஆய்வாளர் மீண்டும் தலைப்பை உரிய முறையில் பதிவுசெய்தே ஆய்வேடு வழங்கவேண்டும். நடைமுறை அறிக.
5. எந்தப் பொருண்மை என்பதும்தான் தேடலின் அடிப்படை. சொல்லப் போனால் அதுதான் முக்கியம்.
- தலைப்புத் தேர்வு, முன்னோடி ஆய்வுகள் போன்றவற்றிற்கு அனைத்துவகைப் பொருண்மைகளும் நிரல்பட ஆண்டுவாரியாக வழங்குவது தேவை.
6. கொடுக்கப்பட்ட தரவுகள் ஆவணப்படுத்தும் துவக்கம்தான்.
- புரிதலுக்கு நன்றி.
7. ஆனால் இது போல நிலையான தரவுகள் கொண்ட நிலையான பக்கம் (static page) வகையில் தகவல் தருவது கால் நூற்றாண்டிற்கு முன் வழக்கில் இருந்த இணையக் கற்கால முறை.
- இருக்கட்டும். இணையக் கற்கால முறையில் கூட இவ்வகைச் செய்திகள் இல்லை என்பதாலேயே நான் முயற்சித்துள்ளேன்.
8. தேடுபவர் கோணத்தில் இருந்து செய்தி வழங்க வேண்டும். தேடுபவர் இந்தப் பொருண்மையில் எவராவது ஆய்வு செய்தாரா என்றுதான் தேடுவார். ஒவ்வொரு பல்கலை தளமாகச் சென்று வரிசையாக படித்துக் கொண்டிருக்க மாட்டார்.
- பொருண்மை/தலைப்பு கொடுத்துத் தேடினால் ஆய்வேடுகள் காட்டப்படும் என்ற அடிப்படையை அறிக.
9. ஒவ்வொரு பல்கலை தளமாகச் சென்று வரிசையாக படித்துக் கொண்டிருக்க மாட்டார்.
- ஒரே பல்கலைக்கழகத்தில், ஆய்வு மேற்கொண்ட தலைப்பிலேயே மீண்டும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு பல்கலையில் வெளிவந்துள்ள ஆய்வுத் தலைப்பு எழுத்து மாறாமல் வேறொரு பல்கலையில் வெளிவந்துள்ளது. தேவை என்பது உங்கள் குறுகிய நோக்கைப் பொறுத்தல்ல. முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடுபவர்கள் தான் ஆய்வு மேற்கொள்ளும் துறையில் இதுவரை வெளிவந்துள்ள ஆய்வுகளை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பது ‘ஆய்வு நெறிமுறை’.
10. மேலும் அரசு நிறுவனம் வழங்கும் செய்திகளும் படங்களும் மக்களுக்கானவை. காப்புரிமை சிக்கல் இல்லை. அதைப் பாதுகாப்பு கொண்டதாக அமைக்கவும் வேண்டியதில்லை. மக்களின் வரிப்பணத்தில் அரசு வழங்குவது மக்களுக்கானது. இவை வெட்டி ஒட்டும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.
- தமிழியல்.காம் முகப்புப் பக்கத்தையெல்லாம் எடுத்துப் பதிவிட்டுள்ளீர்கள். அதிலுள்ள அறிமுகப் பக்கத்தைப் பார்க்க மறந்தது ஏனோ? இது அரசாங்க தளம் அல்ல. மணவழகன் என்ற தனியனின் தளம். அவனின் தேடலால், அவனின் உழைப்பால் உருவான தளம். ஊரடங்கு காலத்திலும் பல்வேறு வழிமுறைகளில் தேடித்தேடிச் சேகரித்த தகவல்களே இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. நான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுவதால் நிறுவன செய்தி என்பதாக வெளிவந்துள்ளது. (தளத்தினைப் பார்வையிட்டிருந்தால் தெளிவாகியிருக்கும்).
மனமிருந்தால் நீங்களும் தரவுகள் கொடுத்து, ஆய்வாளர்களுக்கு உதவலாம்.
நன்றி
ஆ.மணவழகன்.
18.9.21
--------------------------------------