source -
https://tamil.oneindia.com/news/international/tamilnadu-minister-thangam-thennarasu-inaugurates-tamil-exhibition-in-germany-479744.htmlமா.ச. மதிவாணன், ஞாயிறு,அக்டோபர் 9, 2022
ஜெர்மனியில் தமிழர் பெருமித கண்காட்சி- தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு! முதல்வர் வாழ்த்து!
ஸ்டுட்கார்ட் : ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருட்களின் கண்காட்சியை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். அகம் புறம் என்ற தலைப்பில் 6 மாதம் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் ஜெர்மனி தமிழ் அமைப்புக்கள் முன்முயற்சியில் அகம் புறம் என்ற 6 மாத கால கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக தொழில்துறை தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பு செய்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது வாழ்த்து செய்தியை அனுப்பி இருந்தார். இந்த வாழ்த்துச் செய்தியை தமிழக அரசின் சுற்றுலாத்துறை செயலர் டாக்டர் சந்திரமோகன் வாசித்தார்.
ஸ்ட்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகம் மற்றும் சென்னை அருங்காட்சியகம் இரண்டிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான சந்திப்பு கூட்டம் ஸ்ட்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் இரண்டு அருங்காட்சியகங்களுக்கு இடையே ஆக்கபூர்வமான செயல்பாடுகள் எவ்வகையில் அமையலாம் என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. இதன் அடிப்படையில் இரண்டு அருங்காட்சியங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜெர்மனி லண்டன் அருங்காட்சியகத்தின் இயக்குனர் டாக்டர் டி காஸ்ட்ரோ, தமிழ்நாடு அரசின் சுற்றுலா பண்பாடு அருங்காட்சியங்கள் மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் டாக்டர் சந்திரமோகன் ஐஏஎஸ் அவர்களும் கையெழுத்திட்டனர்.
தமிழக அரசின் தொழில்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சுபாஷினி ஒருங்கிணைப்பில் இச்சந்திப்பு கூட்ட நிகழ்வு நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைச் செயலாளர் கௌதம சன்னா, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜெர்மனி மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு நாடுகளுக்கு இடையே வரலாறு மற்றும் ஆய்வுகள் தொடர்பான முயற்சிகளை ஆக்கபூர்வமான வகையில் முன்னெடுக்கும் எண்ணத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளில் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநில அமைச்சர் பெட்ரா ஓல்ஷோவ்ஸ்கி, ஜெர்மனிக்கான இந்திய தூதர் எஸ்.ஈ. ஹரிஷ் பர்வதனெனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
6 மாத காலம் நடைபெறும் இந்த கண்காட்சியில் தமிழகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், ஐரோப்பிய தமிழறிஞர்களின் தமிழ் கொடைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
------