மருத நில மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் இலக்கியம் பள்ளு இலக்கியமாகும். பள்ளு இலக்கியத்தில் தலை சிறந்த நூல் ‘முக்கூடற் பள்ளு’ ஆகும். இதில் கூறப்படுகிற காவை வடமலைப் பிள்ளை காலத்தை வைத்துப் பார்க்கும்போது இந்நூல் 1780ல் பாடப்பட்ட நூல் என்று தெரியவருகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பொருநை நதி, சிற்றாறு என்னும் சித்ராநதி, காட்டாறு ஆகிய மூன்று நதிகள் கூடுகிற இன்று சீவலப்பேரி என்று அழைக்கப்படுகிற முக்கூடல் ஊரில் கோவில்கொண்டுள்ள அழகருடைய பண்ணையில் வேலை பார்ப்பவன் வடிவழகக்குடும்பன். திருமாலைத் தொழாத பேரை இரண்டுகால் மாடெனவே கொழுவில் பூட்டி விரட்டி உழுவேன் என்று சொல்லும் தீவீரமானஅவனை வைணவன். அவனுக்கு மாமன் மகள் மூத்த பள்ளி. அவன் கண்டு ஆசைப்பட்டு இரண்டாவதாகக் கட்டிக்கொண்டவள் மருதூர்ப் பள்ளியாகிய இளைய பள்ளி. சிவநெறி சார்ந்தவள். இவர்களுடைய வாழ்வில் பயிரிடும் ஒருபோகத்திற்கான பயிர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் பதிவு இந்நூல். பலவகையான உழவுக் கருவிகள், பகல் உண்ட உணவு எந்த அரிசி என்று தெரியாத இக்காலத்தில் வியப்புடன் நாம் அறிய வேண்டிய அன்றிருந்த நெல்வகைகள், மாடுகள், அவற்றின் சுழிவகைகள், மீன் வகைகள் என நூலில் ஏராளமான செய்திகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன
நூலில் உள்ள சமுதாய, உளவியல் சிந்தனைகளை:- 1.தூரப் போ என்று விலக்கும் சமுதாய நிலை 2. ஆனாலும் தக்க வேளாண்மை மூலம் மைக்கடல் முத்துக் கீடாய் மிக்கநெல் உண்டாக்குபன் உழவன். தூரப் போகச் சொல்லும் மக்களின் பக்கமே என்றும் அழகர்! அவர் என்றைக்கு முக்கூடலுக்கு வந்தாரோ அன்றே அடியாராக வந்த பரம்பரை தன்னுடையது என்றும் பெருமிதம் கொள்ளும் குடும்பப் பள்ளன்.
3.பண்ணைக்காரனை வேடிக்கை மனிதனாக வர்ணிப்பதின் மூலம் மக்கள் மனதில் பண்ணையின் கங்காணியான பண்ணைக்காரனின் தாழ் நிலை.
4.ஆண்டை, நாயானார் என்று பண்ணைகாரனை அழைக்க வேண்டிய அடிமைத் தொழிலாளி.
5.வேலை செய்யத் தவறிய பள்ளனுக்குக் காலில் கட்டையைக் கட்டித் தொழுவத்தில் அடைக்குமளவுக்குத் தண்டனை அளிக்கப் பண்ணைக்காரனுக்கு அதிகாரம் கொடுத்திருந்த அன்றிருந்த அரசியல் நிலை. 6.விளைந்த நெல் விளைவித்தவனுக்கு உரிய அளவில் கிடைக்காமல் மடத்துக்கும், சுவாமி கட்டளைகளுக்கும், பிறவற்றிற்கும் சென்ற நிலை.
7.இரண்டு மனைவிகளின் சக்களத்தி மனச்சிக்கல்கள், அதனால் குடும்பத்தில் விளையும் துன்பம், அங்கு ஆணின் நிலை.
8.அந்த மனைவியரிடையே எழும் பூசல் அவரவரின் கடவுளர் வரை சென்று கடவுளரையும் தூற்றல். 9.தூற்றலிலும் கடவுளைப் போற்றும் உளவியல். 10.மக்களின் கடவுளர்கள். அவர்களுக்கு விரைய வெட்டும் செங்கிடாயும் குடத்திலிடும் கள்ளும். 11.ஆணும் பெண்ணும் சேர்ந்து அலுப்பில்லாமல் செய்யும் உழவு வேலைகள். இனக்கவர்ச்சியால் எழும் சிக்கல்கள் .
12.கம்பனுக்கு ஈடாகக் கவிநயத்துடன் முக்கூடல் பள்ளு ஆசிரியன் காண விரும்பிய கற்பனை நாடு!
13.சொல்நயமும், பொருள் நயமும், சந்தமும், பண்ணும் அமைந்த நாடகப் பாடல்கள் நிறைந்த நூல் முக்கூடற்பள்ளு!
14.உரையைச் செவிமடுக்க:
(காணொளியின் 58 நிமிடம் வரை உரை. பிறகு பார்வையாளர்களின் சிறப்பான பங்களிப்பு)