பதியிலார், தேவடிரயார், இஷபத் தளியிலார் ஆகியோரிடையே ஓர் உடன்பாடு
இராசராச சோழன் 400 பதியிலாரை ஏற்பாடு செய்து அவர்களுக்கு நிலமும் வீடும்கொடுத்து பெரிய கோவில் உள்ள பல ஊர்களில் குடியேற்றினான். சோழர் ஆட்சி குலைந்து இசுலாமியப் படையெடுப்பாலும் பின் வந்த ஆட்சியாளர் கருத்து மாறுபாட்டாலும் பதியிலார், தேவரடியார் வாழ்க்கை நிலை இரங்கத்தக்கதாக ஆகிவிட்டது.
அந்நிலையில் பதியிலார், தேவடிரயார், இஷபத் தளியிலார் ஆகியோரிடையே திருவொற்றியூரில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அந்த உடன்பாடே கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது.
இந்த உடன்பாடு சம்புவராயன் முதலாம் இராஜநாராயணனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (1342 A D) வியாகரணதானன் திருக்காவணத்து முதலியார், பிக்ஷாமடத்து முதலியார் திருமுன்பாககீழ மடத்து முதலியாரும், சோழ மண்டலத்தில் தனி மாகேச்வரர், இத்திருக்காவணத்து ஸ்ரீ மகேசுவரரும், ஸ்தானத்தாரும், நாட்டாரும், வீரசோழ அணுக்கரும், கைக்கோளரும் கூடி இருந்த வேளையில் ஏற்பட்டது.
ஸ்வஸ்தி ஸ்ரீ இராஜ நாராயண சம்புவராயர்க்கு யாண்டு அஞ்சாவது திருஒற்றியூர் வியாகரணதானன் திருக்காவணத்து முதலியார் பிக்ஷாமடத்து முதலியார் திருமுன்பாககீழ மடத்து முதலியாரும் சோழ மண்டலத்தில் தனி மாகேச்வரரால் சித்தயாபரணமும், இத்திருக்காவணத்து ஸ்ரீ மகேசுவரரும், ஸ்தானத்தாரும், நாட்டாரும், வீரசோழ அணுக்கரும், கைக்கோளரும் இருந்து
பதியிலார் தேவரடியார் கோவில் சேவகத்துக்கு இவர்கள் பொருந்த அறுதியிட்டபடிக்கி கல்வெட்டினபடிக்கி முன்னாள் பெருமாள், எம்மண்டலமும் கொண்ட பெருமாள் சுந்தரபாண்டிய தேவர் நாளில் கொத்தப்பராயர் ஆன வாணராயர் இவ்வூரிலே அதிகாரமாய் இருந்த நாளில், நாங்கள் அனவரும் பொருந்த நிச்சயித்தபடி, பதியிலார் செத்தும் கெட்டும் போய்ச் சுருக்கமாகையில், இவ்வூர்களுக்கு உதவியாக இஷபத்தளியிலாரை புகுத விடுகயில், தேவரடியார் முன்பு செய்து போந்தனமையான திருவலகு, திருமெழுக்கு, தளிகை, விளக்கு, அமுது படிக்கு அரிசி குத்தளக்கிறயிதுவும் தவிர்த்து இதுக்கு ஓர் நிமந்தமும் கட்டி
பதியிலார் சந்திக்குனிப்பமிடும் பொழுது, தேவரடியார் நாச்சியார்க்கு சந்திக்குனிப்பமிடவும் நாச்சியார்க்குப் பகலோலகம் இல்லாதிருக்க இதுவும் குடுத்து, திருக்கோயிலுடன் ஓலக்கமாக இருக்கவும் குடுத்து, வெண் சாமரமும் கவரியும் பணிமாருமிடத்து, பெருமாளுக்கு முதலியார்க்கும் பதியிலார் முன்பும் தேவரடியார் இவர்கள் பின்புமாக பணிமாரக் கடவார்களாகவும், தேவரடியார் திருநீற்றுக் காப்பு, புஷ்பதளிகை எடுக்குமிடங்களில், எல்லாமிடங்களும் எடுக்கவும், இஷவதளியிலாரும்,அகமார்க்கமும் வரிக்கோலமும் ஆடவும், திருத்தோப்பில் திருஓலக்கத்துக்கு வரிக்கோலம் ஆடக கடவார்களாகவும்,பதியிலார் சொக்கமாடும்பொழுதும், சந்திக் குனிப்பமிடுபொழுதும், இஷபத்தளியிலார் பாடக்கடவார்களாகவும், பதியிலார் பாடும் இடங்களிலும் சிறி பலிக்குப் பாடும்பொழுது இஷபத்தளியிலார் பாடவும்,திருவெண்சாமரம் திருவந்திக் காப்பும் இஷபத்தளியிலார் எடுக்கக் கடவார்கள் அல்லவாகவும், பதியிலாரும் தேவரடியாரும் சேவிக்குமிடத்து சேவுகத்தாழ்வு படாதபடி சேவிக்கக் கடவர்களாகவும் பதியிலார் முன்பு ஆண்டு ஒன்றுக்கு பெறும் நெல்லு முப்பதிங்கலமும் பெறக் கடவார்களாகவும், தேவரடியார்க்குப் பொழுதுப்படியே பேர் ஒன்றுக்கு நாழி சோறு பெறக் கடவார்களாகவும் இப்படிக்குச் சேவுகத் தாழ்வு படாமல் சேவிக்கவும்.
இந்த திட்டப்படி அழியச் செய்தாருண்டாகில், தம்பிரானார் ஆணை மறுத்தார் பட்டதும், சிவ துரோகிகள் பட்டதுவும் பட்டு இப்படிக்கு இதுவே கை ஓலையும், வாய் முட்டுமாக கொண்டு, கை முறுத்து கொள்ளக் கடவதாகவும் சம்மதித்து, இசைவு முறி இட்டோம், பதியிலாரும் வீரசோழ அணுக்கரும், தேவரடியாரும், திருக்காவணத்து கைக்கோளரும், இவ் அனைவரோம்.
//பார்வை நூல் Select Inscriptions of Tamilnadu, p 158 - 159//
இக்கல்வெட்டு திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் சன்னதியின் வடக்கு பிரகார சுவரில் வெட்டப்பட்டுள்ளது.
இஷபத்தளியிலார் - பாடல் பாடுவோர், பதியிலார் - மணக்காத ஆடல் மகளிர், தேவரடியார் - ஆண் பெண் இருபாலரையும் குறித்த இறைவனுக்காக தம்மை ஒப்புவித்த கோவில் பணியாளர், முறி -ஒப்பந்தம், கைக்கோளர் - செங்குந்தர் படை; முதலியார் - தலைவர், chief; குனிப்பம் - ஒரு வகை ஆடல்
விளக்கம்: இராசராச சோழன் 400 பதியிலாரை ஏற்பாடு செய்து அவர்களுக்கு நிலமும் வீடும்கொடுத்து பல ஊர்களில் குடியேற்றினான். சோழர் ஆட்சி குலைந்து இசுலாமியப் படையெடுப்பாலும் பின் வந்த ஆட்சியாளர் கருத்து மாறுபாடாலும் பதியிலார், தேவரடியார் வாழ்க்கை நிலை இரங்கத் தக்கதாக ஆகிவிட்டது.
அந்நிலையில் பதியிலார், தேவடிரயார், இஷபத் தளியிலார் ஆகியோரிடையே திருவொற்றியூரில் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அந்த உடன்பாடே கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது.
இந்த உடன்பாடு சம்புவராயன் முதலாம் இராஜநாராயணனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (1342 A D) வியாகரணதானன் திருக்காவணத்து முதலியார், பிக்ஷாமடத்து முதலியார் திருமுன்பாககீழ மடத்து முதலியாரும், சோழ மண்டலத்தில் தனி மாகேச்வரர், இத்திருக்காவணத்து ஸ்ரீ மகேசுவரரும், ஸ்தானத்தாரும், நாட்டாரும், வீரசோழ அணுக்கரும், கைக்கோளரும் கூடி இருந்த வேளையில் ஏற்பட்டது.
சுந்தர பாண்டியன் காலத்தில் (இந்த உடன்பாட்டிற்கு 80-100 ஆண்டுகள் முன்பாக வாணராயர் அதிகாரம் செலுத்திய நாளில் பதியிலார் நாங்கள் முறையாக நடந்துகொண்டோம். பின்பு எங்களவர் சிலர் செத்தும்,சிலர் முறைதவறியும் போனதால் எமது தொகை சுருங்கியது. அதை ஈடுசெய்ய இவ்வூர்களில் இஷபத் தளியிலாரை அமர்த்தி (induct) விடுகையில் தேவரடியார் முன்னர் செய்துவந்த திருவலகு, திருமெழுக்கு, தளிகை, விளக்கு, அரிசிகுத்தி அளத்தல் போன்ற பணிகள் தவிர்க்க வேண்டி வந்தது. அதனால் இதற்கு ஒரு உடன்பாடும் கட்டப்பட்டுள்ளது. அதன்படி பதியிலார் சந்திக்குனிப்பமிடும் (ஆடல்) வேளையில் தேவரடியார் வடிவுடை அம்மனுக்கு சந்திக்குனிப்பமிடலாம் அப்போது அம்மனுக்கு பகல் ஓலக்கம் (நாயனம்)இல்லாது போகும். அந்த ஓலக்கம் இனி கோவிலுடன் சேர்ந்த ஓலக்கமாக இருக்கும். இறைவர்க்கு வெண் சாமரம் கவரி வீசுவது முதலில் பதியிலாரும் அதன் பின்னர் தேவரடியாரும் பணிமாறிக் கொள்ளவேண்டும். பதியிலார் தேவரடியார் சேவிக்கும் போது சேவித்தலில் தாழ்வு ஏற்படாமல் நடந்து கொள்ளவேண்டும்.
பதியிலார் முன்பு ஆண்டிற்கு முப்பது கலம் நெல் பெற்று வந்தது போல இனியும் பெறுவார்கள். தேவரடியார்கள் பொழுதுப்படி அவரவர் பெயர்க்கு நாழி சோறு பெற்றுக் கொள்வார்களாக. இதன் சேவுகத் தாழ்வு ஏற்படாமல் சேவிக்க வேண்டும்.
இந்த திட்டத்தை நடைமுறையில் இருந்து அழியச் செய்வோர் தம்பிரானின் ஆணையை மறுத்த சிவத்துரோகி ஆவர்.
என்றபடி பிக்ஷா மடத்து தம்பிரான் முன் உடன்படிக்கை செய்துகொண்டனர்.
திருக்கழுக்குன்றத்து கோவில் சிற்பத்தில் இரு பதியிலார் கையில் சாவி வைத்திருப்பதன் காரணம் அறியும் எனது ஆய்வில், திருவொற்றியூர் சிற்பத்தில் இரு பதியிலார் கையில் சாவி வைத்திருப்பதன் நோக்கத்தை அறியும் முயற்சியில் என்னால் இப்போது இதுவரை தான் பயணிக்க முடிந்தது.
முதல் மூன்று படங்கள் திருக்கழுக்குன்றம்.
நாலாம் படம் திருவொற்றியூர்