''கடைசி வரை ரோஜாவுடன் வாழ்வேன்!''
திருத்தணி திகுதிகு
திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஜனகராஜ குப்பம் கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்த
ஒரு காதல் ஜோடிக்கு, கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
காதலனின் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கியதோடு, ஊரைவிட்டும் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்த
நிலையில் கலெக்டர், காவல் துறை எனப் பலருக்கும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை
என்று ஆதங்கப்படுகிறது அந்தக் குடும்பம்.
மனு கொடுத்த முனுசாமி மற்றும் அவரது மனைவி போதும் (பெயரே அதுதான்) ஆகியோரைச்
சந்தித்தோம். 'எங்கள் மூன்று மகன்களில் மூத்தவன் ஆனந்தகுமார், வெல்டிங் வேலை பார்க்கிறான்.
அவன், மூன்று மாதங்களுக்கு முன், ராகவ நாயுடு குப்பத்தில், அருந்ததியர் காலனியைச்
சேர்ந்த கிருஷ்ணன் மகள் ரோஜாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். இந்தச் சம்பவத்தை
அறிந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களான ஆர்.கே பேட்டை ஒன்றியக் கவுன்சிலர் மாணிக்கம்,
அவரது மகன் வேலாயுதம் தலைமையில் 25-க்கும் மேற்பட்டவர்கள் வந்து, கடந்த 9-ம் தேதி
என்னுடைய வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். அதைத்
தடுத்தபோது, 'கீழ் சாதியைச் சேர்ந்த பெண்ணை உனது மகன் திருமணம் செய்ததால், உங்கள்
குடும்பத்தில் உள்ளவர்களை வீட்டிலேயே வைத்துக் கொன்று எரித்துவிடுவோம்’ என்று மிரட்டினார்கள்.
இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீஸில் புகார் கொடுத்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்போது வீடு இல்லாமல் கொட்டும் மழையில் மரத்தடியில் குடும்பத்தோடு தங்கியிருக்கோம்.
எங்களை ஊரைவிட்டே அவர்கள் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இதனால் கடந்த 15-ம் தேதி
திருவள்ளூர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்த
என்னுடைய மகனும், மருமகளும் தலைமறைவாக இருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தை இந்தக்
கும்பலிடமிருந்து காப்பாத்துங்க...' என்றனர் கண்ணீர் மல்க.
தலைமறைவாக உள்ள ஆனந்தகுமாரிடம் பேசினோம். ''ஆர்.கே. பேட்டையில் உள்ள எக்ஸ்போர்ட்
கம்பெனியில் ரோஜா வேலைப் பார்த்தபோது எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவீட்டிலும்
காதலுக்கு எதிர்ப்புக் கிளம்ப.... வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டோம்.
பிறகு, எங்களுடைய திருமணத்தை இரண்டு வீட்டிலும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், என் சமூகத்தைச்
சேர்ந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ளாமல் வீட்டை இடித்துத் தள்ளியதோடு, கொலை மிரட்டலும்
விடுத்திருக்கிறார்கள். என் இரண்டு தம்பிகளின் கல்விச் சான்றிதழ்களையும் கிழித்துப் போட்டு
அவர்களின் எதிர்காலத்தையும் வீணாக்கிவிட்டனர். இப்போது ரோஜா கர்ப்பமாக இருக்கிறாள். கடைசி
வரை ரோஜாவுடன் வாழ்வேன். நான் இருக்குற இடம் தெரிந்தால் இங்கு வந்து பிரச்னை பண்ணுவாங்க.
அவர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.
தொடர்ந்து ரோஜா, 'இரண்டு பேரின் வீட்டிலே«யும் எங்க திருமணத்துக்குச் சம்மதம்
தெரிவிச்சுட்டாங்க. சாதியைக் காரணம்காட்டிப் பிரிக்க நினைக்கிறது நியாயமா?'' என்றார்.
அ.தி.மு.க பிரமுகரான வேலாயுதத்திடம் பேசினோம். ''சாதி சம்பந்தமாக இந்தச் சம்பவம்
நடக்கவில்லை. அரசு புறம்போக்கு இடத்தில் முனுசாமி மற்றும் அவரது உறவினர்கள் வீடு
கட்டியுள்ளனர். பஞ்சாயத்து மூலம் அந்த வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. அவர்களை
ஊரைவிட்டுத் தள்ளிவைக்கவில்லை. கலப்புத் திருமணம் செய்த ஆனந்தகுமார், ரோஜா ஆகியோர் எங்கள்
ஊரிலேயே பாதுகாப்பாக வாழலாம்'' என்றார்.
ஆர்.கே.பேட்டை போலீஸார், ''விசாரித்து வருகிறோம்'' என்றனர்.
இன்னும் எத்தனை பெரியார்கள் பிறக்க வேண்டுமோ?
- எஸ்.மகேஷ்
--
முனைவர். க. சரவணன்
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
அரசு கலைக்கல்லூரி[தன்னாட்சி]
கரூர்-639005
தொலைபேசி:04324-255558
அலைபேசி:
9787059582,
8675225229
தனி மின்னஞ்சல்:
tamizper...@gmail.com
ஸ்கைப்: ksnanthusri
வலைப்பூ: http:
www.ksnanthusri.wordpress.com