“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“(104). வங்கக்கடலில் மிகப்பெரிய பிரளயம் (சுனாமி) தோன்றி, பாண்டியநாட்டைத் தாக்கி அழித்தது என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்து அழித்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றனவா? அதிலும் குறிப்பாக மதுரையில் காணக் கிடக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன! கடல்வெள்ளத்தைச் (சுனாமியைச்) சுயம்புலிங்கங்கள் தடுத்த காரணத்தினால் இடபமலை, நாகமலை, பன்றிமலை ஆகிய மண்படிம மலைகள் தோன்றியுள்ளன. இரண்டாவதாக ஏற்பட்ட பிரளயத்தில் உண்டான கடல்வெள்ளத்தில் (சுனாமியால்) இந்த மலைகள் அழியாமல் இருந்துள்ளன.
திரைகடல் மலிந்து கரைகடந்துவந்து மதுரையை அழித்த போது, திருவாப்புடையார் என்ற சுயம்புலிங்கத்தினால் கடல்வெள்ளம் (சுனாமி) தடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆப்புடையார் கோயிலுக்கு மேற்கே நீண்ட நெடியதொரு நாகமலைத் தொடர் உருவாகியுள்ளது. நாகமலையைப் போன்றே, வத்தலக்குண்டிலும், புதுப்பட்டியிலும் கடல்வெள்ளம் (சுனாமி) தடுக்கப்பட்ட காரணத்தினால் பன்றிமலை உருவாகியுள்ளதா? பன்றிமலையில் மண்திட்டுகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்காகப் படிந்துள்ளன. இந்த மண்படிமங்கள் வத்தலக்குண்டு மற்றும் புதுப்பட்டியில் துவங்கி கொடைக்கானல் மலையில் முடிவடைகின்றன.
வத்தலக்குண்டிற்குப் புறவழிச்சாலை அமைக்க வேண்டிப் பன்றிமலைத் தொடரைக் குறுக்காக வெட்டி எடுத்துத் தேசிய நெடுஞ்சாலை அமைத்துள்ளனர். இவ்வாறு வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில் பன்றிமலையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நன்கு காணும்படியாக உள்ளது.
திரு ஆப்புடையார் என்ற சுயம்புலிங்கம் கடல்வெள்ளத்தைத் தடுத்து நாகமலை உருவானது போன்று, வத்தலக்குண்டிலும் புதுப்பட்டியிலும் உள்ள சுயம்புலிங்கங்கள் தடுத்துப் பன்றிமலை உருவாகி இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, வத்தலக்குண்டிலும் புதுப்பட்டியிலும் பன்றிமலைத் தொடர் தொடங்கும் அந்தக் குறிப்பிட்ட இடங்களில் சுயம்புலிங்கங்கள் உள்ளனவா? என அறியப்பட வேண்டியுள்ளது.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
வைகாசி 19 (02 சூன் 2017) வெள்ளிக் கிழமை.
(குறிப்பு – கட்டுரையாளரது கருத்துகள் அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டியுள்ளன)
பன்றிமலை பற்றிய
திருவிளையாடல் புராணப் பாடல்களின் தொகுப்பு
2242.
வன் திறல் மன்னவர் மன்னவன் உந்தன்
பொன் திகழ் மா நகர் புக்கனன் இப்பால்
பன்றி விழுந்து பருப்பதம் ஆகா
நின்றது பன்றி நெடும் கிரி என்ன.
2263.
என்று நாயகன் நாயகிக்கு இறை கொடுத்து இயம்பி
அன்று மீனவன் கனவில் வந்து அரச கேள் பன்றிக்
குன்றில் ஏன மா முகத்தராய்ப் பன்னிரு குமரர்
வென்றி வீரராய் வைகுநர் மிக்க அறிவுடையார்.
2330.
கரும் கடல் ஏழும் காவல் கரை கடந்து ஆர்த்துப் பொங்கி
ஒருங்கு எழுந்து உறுத்துச் சீறி உம்பரோடு இம்பர் எட்டுப்
பொரும் கட கரியும் எட்டுப் பொன் னெடும் கிரியும் நேமிப்
பெருங் கடி வரையும் பேரப் பிரளயம் கோத்தது அன்றே.
2331.
அப்பெரும் சலதி வெள்ளத்து அழிந்தன அழி விலாத
எப்பெரும் பொழிலும் ஏழு திபமும் இவற்றுள் தங்கி
நிற்பன செல்வ ஆன திணைகளும் நீண்ட சென்னி
பர்ப்பத வகையும் ஈறு பட்டன ஆக அம் கண்.
2332.
தேன் இழி குதலைத் தீம் சொல் சேல் நெடும் கண்ணி கோயில்
வன் இழி விமானம் பொன் தாமரை விளையாட்டின் வந்த
கான் இழி இடபக் குன்றம் கரிவரை நாகக் குன்றம்
ஆன் இழி வரை வராக வரை முதல் அழிவு இலாத.
2333.
வெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல்
உள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிர் உடல் புத்தேள் மூவர்
தள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும் தந்தான்.