[ 5.5.57 'ஆனந்த விகடன்' இதழில் வெளியான தலையங்கத்திலிருந்து . . .]
சென்ற 23 ஆண்டுகளாக அவர் எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண் முன் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி மனமார எழுதிய பேனா மன்னர், அவர் திருவடியிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்.
’தேவன்’ --ஆர்.மகாதேவன் -- 1913-ஆம் ஆண்டில் செப்டம்பர் 8-ஆம் தேதியன்று திருவிடைமருதூரில் பிறந்தவர். அதே ஊரில் இருந்த திருவாவடுதுறை ஆதீனம் உயர்தரப் பள்ளியில் படித்தார். பள்ளியில் சாரணப் படையில் சேர்ந்திருந்தார். சாரணத் தலைவர் திரு. கோபாலசாமி ஐயங்கார் பல கதைகளைச் சொல்வார்; மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இதனால் கதை கட்டுவதில் ‘தேவ’னுக்கு ஓர் ஆர்வமும், சுவையும் தோன்றின.