திரு நாகி அவர்கள் கவிதைக்கு எழுதிய பாராட்டு மடலைப் பொக்கிஷமாக
பாதுகாத்து வந்தேன். இதோ பெருமையுடன் அந்த மடல் -
_________________________________________________________________
சகோதரி
தங்கள் 'தீர்வு' தேன்குழல் மிகவருமை.
இந்த 'தீர்வு' குறித்து உடனே எழுத வேண்டுமென்று நினைத்து நான் எழுத
நினைத்த போதெல்லாம் மடல் வேலை நிறுத்தம் செய்ய அதற்கான 'தீர்வு'
கிடைக்காமல் சோர்ந்ததும் உண்மை.
எனக்கென சில வரிகள் உள்ளன:
......
பகலிரவு, அக்கம் பக்கம்
அண்மையிலேயும் அருகேயும்
வெளிச்சத்திலேயும், இருட்டிலும் கூட
தீர்வெதுவென தேடத்தான் வேண்டும்
....
கைதவறிய தங்கத்திருகாணி
மெலிதான குரலெழுப்பிவிட்டு விழும்!
அந்த இசைக்கு கொஞ்சம் செவி கொடுங்கள்
தேடுவது எத்தனை சுலபமாகிவிடும்!
(அருமை! மிகவருமை!)
....
வழிதேடுவது ஒன்றும் பெரிதல்ல
வீசும் காற்று
ஒரு வாடை தாங்கியே வரும்.
சருகின் மொழி சொல்லும்
சுவாரசிய சேதிகள்!
கவனமாய் கேளுங்கள்...
தீர்வின் திசை தெளிவாய் தெரியும்!
...
உதிர்த்த உப்புமாவும், தாளித்த ஊத்தப்பமும்
அடுக்களை தீர்வுகள்
....
பக்கத்தில் நன்னீர் கிடைக்காத வேர்கள்
மண்ணைத் துளைத்து துளைத்து தேடும்!
தொற்றிக்கொள்ள துரும்பென்றாலும்
கொடி பற்றிக்கொண்டு படர்ந்து வளரும்!
அளவு கடந்து படரும் ஆலம்
கூடுதல் விழுதுகள் விளைவித்துக் கொள்ளும்!
மழைக்கு ஏங்கிய கள்ளிச் செடி
இலைகளை சுருக்கி
செம்மலர் வழியே மின்னிச் சிரிக்கும்!
சுற்று முற்றும் தேடுங்கள்
தோட்டத்திலேயே இத்தனை தீர்வு
வாட்டத்தினாலே வேதனையே மிஞ்சும்.
(இங்கே தேர்ந்த ஒரு கவிதைக்குறிய
அத்தனை குணங்களும் இணைந்து
என்னை ஆச்சரியப் படவைத்தன...)
சிற்சில சம்பிரதாய வரிகளும் உள்ளன.
அவை சராசரி உணர்வின் வெளிப்பாடு.
அவற்றைத் தவிர்க்கலாம். அவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால்
'எந்தக் கொம்பனுக்கும் இளைத்ததல்ல இந்த கவிதை'
(இந்த பாராட்டை மற்ற கவிஞர்கள் தவறாக கொள்ள மாட்டார்கள்)
- எழுத்தினத்தினர்களான நாம் இப்படித்தான் உச்சி முகருவோம்).
அன்புடன்
நாகி
_______________________________________________________
எனது கவிதைத் தடாகம் வற்றும் போதெல்லாம் இது போன்ற மடல்களை மீண்டும்
மீண்டும் வாசித்து கவிதை ஊற்றெடுக்க முயற்சிக்கிறேன்.
- கற்பகம் இளங்கோவன்