திரு நக்கினம் சிவம்,
கல்வெட்டு ஆராய்ச்சி என்பது தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள மிக இன்றியமையாத ஒரு தரவு. கிரந்த எழுத்துகள் பல்லவர் வருகைக்குப் பின்னரே தலைதூக்குகின்றன. அதற்கு முன்னர் இருந்த கல்வெட்டுகளால் தமிழ் வரலாற்று நிகழ்வுகள் பல உறுதியாகின்றன. அவை எவையும் கிரந்தத்தில் இல்லை. கல்வெட்டுகள் மட்டுமல்லாமல் செப்பேடுகளும் தமிழக வரலாற்று நிகழ்வுகளை அறிய இன்றியமையாதவை.
பல்லவப் பேரரசர்கள், சோழப் பெருவேந்தர்கள், பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் குறிப்புகள் பலவற்றைப் பற்றி அறியக் கல்வெட்டுகள் உறுதியாகத் தேவை. கல்வெட்டுகளைச் செதுக்கிய குடியினர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத குடிகளாக இருந்திருக்கக் கூடும். கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகளில் இருக்கும் பிழைகள், எழுத்துகளைக் கலந்திருக்கும் முறை, வரிவடிவங்களின் அழகியல் தன்மை, என்று பல கோணங்களில் இவற்றைப் பார்க்கும் போது கல்வெட்டுகளைச் செதுக்கியவர்களுக்குத் தாம் செதுக்கிய மொழி புரிந்திருக்கிறதா என்று சில நேரங்களில் ஐயப் பட வேண்டியிருக்கும். ஆனால், எண்ணற்ற பல கல்வெட்டுகளில் பிழைகள் குறைவு. செதுக்கியதைத் திருத்த முடியாத நிலையில், சிற்பியைக் குறை சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை.
கல்வெட்டுகள் பலவற்றில் கிரந்தம் மட்டுமல்ல, தமிழ் வட்டெழுத்தும், பிற்காலத் தமிழ் வரிவடிவமும் உள்ளன. கல்வெட்டுகளைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் ஒரு சில கல்வெட்டுகளையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும். மசிப்படிகள், மற்றும் எழுத்து வடிவங்களில் வந்துள்ள நூல்களைப் படிக்க வேண்டும்.
சோழர்களுக்குக் கீழ் இருந்த தெலுங்கு, கன்னட நாடுகளில் கல்வெட்டுகள் கிரந்தத்தில் மட்டுமல்ல, தமிழிலும், ஏன் கிரந்த எழுத்துகளில் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் உள்ளன. கிரந்த எழுத்துகளில் எழுதப் பட்டிருக்கும் தெலுங்கு, கன்னட மொழியில் இருக்கும் கல்வெட்டுகளில் கணேசன் சொல்வது போல “திராவிட எழுத்துகள்” இல்லை. தெலுங்கு, கன்னட மொழிகளில் எகரம், ஒகரம் இருப்பினும், அந்த எழுத்துகள் கொண்ட பெயர்கள் இக்கல்வெட்டுகளில் இருப்பினும், கிரந்த எழுத்து முறையை மாற்றிக் கொள்ளாமல், அவர்கள் வழக்கப்படி ஏகார ஓகார எழுத்துகளில் தான் தெலுங்கு/கன்னட எகர, ஒகரத்தைக் குறித்திருக்கிறார்கள். இது குறிப்பிடத் தக்க தரவு. இதைச் சான்றாகக் கொண்டே கணேசனின் கூற்றை மறுக்க இயலும்.
அரசர்களின் ஆணைப்படி எழுதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் இவற்றை எவ்வாறு சமைப்பது என்பதற்கு ஒரு முறைமை இருந்திருக்கிறது. இந்த முறைமையைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. கல்வெட்டுகள், செப்பேடுகளின் மசிப்படிகள் 1908 வரை திரட்டியவை மட்டுமே நூறாயிரத்தையும் கடந்திருக்கிறது. இந்தியாவிலேயே எண்ணிக்கையில் கூடுதலான கல்வெட்டுகள், மற்றும் செப்பேடுகள் தென்னகத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் இருந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை தமிழ் எழுத்துகளிலும், வட்டெழுத்துகளிலும் இருக்கின்றன. ஆயினும் மெய்க்கீர்த்தி என்ற அரசப் பெருமைகளைப் பறைசாற்றும் செய்திகளைக் கிரந்த எழுத்துகளில், வடமொழியில் எழுதியிருக்கிறார்கள். இது, இன்றைக்கு நடக்கும் திறப்பு விழாக்களில் ஆங்கிலத்தில் கல்வெட்டுகளைப் பொறிப்பது போன்றது. தம் அரசர் பெருமையை தமிழரல்லாதவர்களுக்கும் தெரிவிக்க கிரந்த எழுத்துகளில் வடமொழியில் எழுதியிருக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், கல்வெட்டுகளின் முக்கிய நோக்கங்களை, அதாவது யார் எதற்கு என்ன கொடை வழங்குகிறார்கள் போன்ற உள்ளூர்ச் செய்திகளைப் பெரும்பாலும் தமிழில், தமிழ் எழுத்துகளில் பொறித்திருக்கிறார்கள்.
நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, உண்மை சுட்டாலும், (தமிழகத்தில் உள்ள கல்வெட்டுப் பகுதிகள் தமிழில் இல்லாமல் இருப்பது சுடுகிறது என்றாலும்), உண்மை உண்மைதான்.
அது இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் பொருள் இல்லை.
தமிழ்ப் பெருவேந்தர்கள் கடல் கடந்தும் படை எடுத்துச் சென்று பல்வேறு நாடுகளை வென்றார்கள். இமயத்தில் சேரன் வில்லைப் பொறித்திருக்கலாம். ஆனால், கடாரத்திலும், சாவகத்திலும், சோழன் தமிழைப் பொறிக்கவில்லை. வடமொழியைத்தான் பொறித்திருக்கிறான்.
இன்றைய நிலையிலும், பல அரசாணைகள், நீதி மன்றத் தீர்ப்புகள், அரசுக் கல்வெட்டுகள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. தமிழகத்தின் தலைநகரத்தில், கடைகள், பொது நிறுவனங்களின் பெயர்களைத் தமிழிலும் (நோக்குக, தமிழில் மட்டுமல்ல, தமிழிலும்) எழுதுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கவே 2010 வரை காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. அப்படியும், முற்றிலும் எல்லோரும் மாறவில்லை. பெங்களூரில் தெருப்பெயர்கள், பேருந்துகள், கடைப் பெயர்கள் எல்லாமே கன்னடத்தில் மட்டுமே இருக்கிறது. அங்கே முணுமுணுக்காமல் சட்டத்தின் கீழ்ப்படிந்த அதே வணிகர்கள், தமிழகத்தில் போர்க்கொடி உயர்த்துகின்றனர்.
தமிழ்நாட்டில் தமிழையும் ஒரு பாடமாகப் படிக்கச் சொல்வதற்கே நீதிமன்றம் வரை எதிர்க்கப் போகிறார்கள். இங்கிருக்கும் சிறுபான்மையர் உரிமைகளைப் பறிப்பது போல் இல்லையா என்ற கூக்குரல் கேட்கிறது. தனிமனித உரிமைகளைப் பறிப்பது போன்றது இத்தகைய ஆணை என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன. ஆனால், கருநாடகத்தில் கன்னடம் படிக்க வேண்டும் என்பதை முணுமுணுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால், தமிழர்களுக்கு மட்டுமே தமிழ் வெறியர்கள் என்ற பழிச்சொல்.
இன்னும் மொழி ஆளுமை பற்றிய செயல்களில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்குள்ளேயே ஒரு சரியான புரிதல் இல்லை. வடமொழி வெறுப்பும், ஆங்கிலத்தின் மீது ஈர்ப்பும், தமிழ்ப் புறக்கணிப்புமே திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தலையெடுத்திருக்கின்றன.
நம் வரலாறு பற்றியும் உண்மையை அறிந்து கொள்ளும் அடிப்படையில் இல்லாமல், தொன்மங்களின் அடிப்படையில் நாம் விரும்பும் செய்திகளை வரலாற்றின் மீது மேற்பூச்சு பூசிக் கற்பனை செய்வதில் நமக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சி வருகிறது. இந்தத் தாழ்வு உளப்பாங்கு தேவையற்றது.
களப்பிரர்களும், பல்லவர்களும் வந்தேறிகள்தாம். அவர்கள் தம்முடன் தம் சமயங்களையும், தம் மொழிகளையும், கொண்டு வந்தனர். தமிழ் அரசர்களை முறியடித்து வேற்று அரசுகளை நிறுவினர். இது வரலாறு. ஆனாலும், களப்பிரர்களும், பல்லவர்களும், நம்முள் கலந்து விட்டார்கள். தமிழர்களாகி விட்டார்கள். காலப்போக்கில் தமிழ் மீண்டும் தலை எடுத்தது. பின்னர், மீண்டும் தமிழ் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் பிறமொழிகளும், பிறர் ஆட்சிகளும் தலையெடுத்திருந்தாலும், தமிழர்களின் விடாமுயற்சியால் தமிழ் இம்மண்ணில் வேரூன்றியிருக்கிறது. ஆங்கிலத்தின் மாபெரும் தாக்கத்தின் கீழும், அரசு ஆதரவு கொண்டு இந்தியின் ஆட்சியின் கீழும், தமிழ் தளரவில்லை.
இணையம் என்ற ஒரு களம் உருவானவுடனேயே, எந்த அரசின் ஆதரவும் இல்லாமல், தமிழர்கள் தாமே உருவாக்கிய குறியீட்டு முறையில் தமிழை வலையேற்றி உலகெங்கும் பரப்பினார்கள். இந்தத் தனித்தன்மை இருக்கும் மட்டும், தமிழ் என்றும் வாழும். அதற்காகத் தமிழகத்தில் வேற்று மன்னர்கள், வேற்றுக் குடிகள், வேற்று மொழிகள், மேலோங்கவே இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்.
ஏனைய நாடுகளைப் போலவே, தமிழ் மண்ணிலும், பல பண்பாடுகள், மொழிகள், கருத்துகள், கலந்து ஊடாடின. எண்ணற்ற பல குடிகள் இங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இன்று தம்மைத் தமிழராகத்தான் அடையாளம் காணுகின்றனர். இங்கு வந்து சேர்ந்த குடிகள் கொண்டுவந்த கலைச்செல்வங்கள் யாவும் தமிழுக்கு உரம் சேர்த்திருக்கின்றன. தமிழன்னை தனக்கே உரிய வகையில் இவற்றை எடுத்துக் கொண்டு இன்றும் நம் உள்ளங்களை ஆளுகின்றாள்.
நாம் இந்த உண்மையைக் கொண்டாடலாமே!
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு