நாமக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராம மக்கள் தங்கள் குறைகளை மனுவாக இணையம் மூலம் அளிக்கவும், ஆட்சியர் மற்றும் பல்வேறு அலுவலர்களுடன் இணையம் மூலமாக காணொளி கலந்துரையாடல் (Web Conferencing) முறையில் நேரில் பேசவும் நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் ( Weblog or Blog ) இந்த வலைப்பூ ஏற்படுத்தப் பட்டுள்ளது.

மாண்புமிகு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர்
————————————————————
S. காந்திசெல்வன்,
அவர்கள்
இந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வலைப்பூவை இன்று (01 ஜனவரி 2010) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இணையம் மூலம் துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் திரு.உ.சகாயம் அவர்கள் கிராம மக்களின் மனுக்களை இந்த வலைப்பூவில் பார்வையிட்டு காணொளி கலந்துரையாடல் முறையில் கிராம மக்கள் மற்றும் அலுவலர்களோடு பேசி குறை தீர்க்கும் நிகழ்வை நடத்தினார்.
இன்று முதல் நாமக்கல் மாவட்டத்தின் கிராம மக்கள் தங்கள் மனுக்களை, ஊராட்சி மன்ற கணினிகள் வாயிலாக, இதற்காக சிறப்பு பயிற்சியளிக்கப்பட்ட தன்னார்வலர்கள் துணை கொண்டு இந்த வலைப்பூவில் பதியலாம்.
ஊராட்சி மன்ற கணினிகள் இல்லாத/இணைய இணைப்பு இல்லாத கிராம மக்கள், தங்கள் அருகில் இணையம்/கணினி கொண்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களை அணுகி அங்குள்ள சிறப்பு பயிற்சியளிக்கப்பட்ட தன்னார்வலர்கள் துணை கொண்டு தங்கள் மனுக்களை பதியலாம்.
மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் மாவட்ட ஆட்சியரின் வலைப்பூவில் குறிப்பிட்ட கிராம பெயர் கொண்ட பக்கத்தின் கீழ் தோன்றும். இந்த வலைப்பூவை இணைய இணைப்பு உள்ள எந்த கணினி மூலமாகவும் காண இயலும். இம் மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்களையும் இந்த குறிப்பிட்ட மனுப் பக்கத்தின் கீழ் காணலாம்.