நட்புடையீர்..!
ஒரு மாணவப் பயிற்சியாளனாகவே மரபெழுதிப் பழகுகின்றேன்.
ஒளிவு மறைவற்ற உள்ளத்து விமர்சனங்களை தயக்கமின்றி தந்துதவுங்கள். என்னெழுத்தின்
உயரங்களுக்கான விதை அதில் ஒளிந்திருக்கக் கூடும்.
இனி, கவியரங்கில்...
*
இறைவாழ்த்து:*
உயிருடன் உண்மை உயர்வும் அளித்து
இயல்பினில் நன்மை இருக்கவும் செய்து
மனிதரென நம்மையும் மாண்புற வைத்த
புனித இறைக்கே புகழ்.
*தமிழ்வாழ்த்து*
சொல்லில் அதன்பொருளில் சொந்தமாய் இவ்வுலகின்
எல்லா மொழிக்கும் இலங்கிடும் ஆதிநீ
வல்லமையில் பேரழகில் வாழ்பரப்பில் நற்றமிழே
இல்லை உனக்குமோர் ஈடு!
*தலைவர் வாழ்த்து*
நற்குணத்தில் நல்லன்பில் நாளெல்லாம்
....நாம்பேசும் நாயகரே ஆசாத்தாம்
கற்பனையில் சிறக்கின்ற கவிஞரிவர்
....கலைகளிலே காட்சியிலே இளைஞரிவர்
அற்புதங்கள் இவரெழுதும் ஆட்சீர்தான்
.....அத்துடனே 'பெருமூச்சும்' விட்டிடுவார் :-))
பற்பலவாய் திறனிறைந்த பெருமனிதர்
....பஃகுருத்தீன் போன்றோரின் அண்ணனிவர்.;-))
*அவைவாழ்த்து:*
நண்பர்கள் ஆகுகின்ற நல்மனங்கள் தன்னாலே
பண்புடன் இஃதொரு பள்ளியாம்- எண்ணம்
சிறக்க எழுதிடுவோர் சிந்தனை யாலே
பிறந்திடும் இங்கே படைப்பு!
*முதன்மைக் கவிதை*
கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக..
....கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக!
இனவாதம் மதவாதம் இறந்து போக
....இதயத்து குணத்தினையே யாரும் நோக்க..
பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை
....பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க
நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன்
....நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்!
கடந்துவந்த காலத்தை எண்ணிப் பார்க்க...
....கண்ணீரும் புன்னகையும் கலந்த வாழ்க்கை.
நடந்துவரும் நாள்களிலும் நிகழ்வின் கைகள்
....நினைவுகளைத் தூவிவர நெஞ்சம் பொங்கும்.
தொடர்ந்துவரும் திருநாள்கள் துலங்க வைக்க..
....தன்னுணர்வில் நுண்ணறிவு விழிக்க வேண்டும்.
இடங்களல்ல 'இருப்பி'னிலே என்று (உ)ணர்ந்து
....இயல்புகளை ஏற்கின்ற இதயம் வெல்லும்.
சின்னவனாய் இருக்கையிலே சுகமே உலகம்
....சிந்தனையில் வேறில்லை சமமே யாரும்.
விண்ணதுவும் உயர்வில்லை உயர்வு என்றால்
....உண்மையிலே சிறுபிள்ளை உள்ளம் தானே!
மின்னுகிற கண்களிலே கனவின் கங்கு
....மேதினியில் வெளிச்சத்தை ஏற்றச் செய்யும்
என்னவொரு காலமய்யா! இன்றோ ஏக்கம்
....எங்கெங்கு நோக்கிடினும் பாகு பாடு!
இனிவருமோ அந்நாள்கள் என்ற கேள்வி
....எழும்பிடுதே வழியெங்கும் என்ன செய்ய?
தனிமனித நலமொன்றே யாரும் பார்க்கும்
....தற்காலம் மாறிவிடின் தீரும் ஏக்கம்.
பனித்துளிபோல் புல்நுனியில் பட்டு நிற்கும்
....பாசாங்காய் அரசியலில் பொதுமை எண்ணம்
இனிப்பதுவும் தேநீரில் இருத்தல் போல
....இரண்டறவே கலந்துவிட வருமே அந்நாள்.
பொதுமக்கள் வரிக்காசில் பிழைத்தே ஏய்க்கும்
....போக்கிரிகள் பொதுவாழ்வில் நீங்கி விட்டால்..
எதுவாகும் தன்னெல்லை அறிந்தே எவரும்
....ஏற்பற்ற குணம்நீக்கி ஏற்றம் கண்டால்...
நதிபோல நகர்கின்ற நாள்கள் தன்னில்
....நற்றவமே போலாகும் செயல்கள் கொண்டால்
விதியென்று சோம்புகின்ற வீணம் விடுத்து
....விளைவுகளை ஏற்கின்ற வீரம் பெற்றால்...
இனிவருமோ நாளெல்லாம் எண்ணம் போல
....இறையவனை கேட்டுத்தான் இறைஞ்சும் உள்ளம்
வினையெதுவும் விதைத்தாலே வினையை அறுப்பாய்
....வேறில்லை நியதிகளும் என்றே சொன்னால்
தனியொருவன் செய்கின்ற தவறின் பலனாய்
....தரணியிலே மற்றவர்க்கும் துன்பம் ஏனோ?
கனியளிக்கும் மரங்களுக்கே கல்ல டிகளோ?
....காரணத்தைக் கேட்டேனே கருத்தாய் நானும்
விடையிருக்கும் உன்னிடத்தில் வேண்டித் தேடு!
....உணராத காரணங்கள் உள்ளி ருக்கும்.
கடைபிடிக்கும் முறையினிலே கோளா றிருக்க
....கண்டளித்த அறிஞனையா குறைகள் சொல்வர்?
கடைமனிதன், உயர்மனிதர் - பிரிக்கும் நீதி
....கைக்கொண்ட சுயநலத்தால் விளைந்த கேட்டை
உடைத்திடவே செய்யாமல் உறக்கம் கொண்டால்
....ஒன்றாகும் நன்மையுடன் தீமை கூட!
இனிவருமோ அந்நாள்கள் யாரும் கேட்பின்
....எப்போதும் மாற்றங்கள் மனிதர் கையில்!
தனிமனித நலனுக்காய் தவறே இழைக்கும்
....தரமற்ற தலைமைகளை மாற்ற வேண்டும்.
மனிதமிதே உயர்வென்ற மாண்பைப் போற்றி
....மண்மீதில் தருமத்தை மீளச் செய்வோம்.
அணிதிரளா நல்லவரால் கொடியோர் ஆட்டம்
....அறமழியும் முன்னாலே ஓடி வாரீர்!
2009 ஜனவரி 18 11:34 அன்று, ஆசாத் <banua...@gmail.com> எழுதியது:
> மூன்றாம் அழைப்பு
> கவிஞர் பக்ருத்தீன்
> வெண்பாவில் விருத்தத்தில் வீச்சைக் காட்டும்
> .வேங்கைதான் விளையாட்டுப் பேர்ச்சொல் லல்ல!
> உன்பாடல் வரிகேட்க முன்னம் வைத்தேன்
> .ஊஹூம்நான் பின்வருவேன் என்றீர் ஏற்றேன்!
> பின்பாடல் பிள்ளைக்கவி பாட்டும் அல்ல!
> .பிணைபொருளாய் முன்வரிசைப் பாட்டும் அல்ல!
> அன்பாலே அழைக்கின்றேன் அனல்சேர் பாலை
> .அரபுலகில் வாழ்வாய்அ ரங்கம் வாராய்!
> கவிஞர் பக்ருத்தீன் வருக! - தன்
> கல்பில் உள்ளதைத் தருக!
> (சில இஸ்லாமியக் கவிஞர்கள் இதயத்தைக் குறிப்பிடும் அரபுச் சொல்லான கல்ப்
> என்பதையே குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்கள் வழியில் நானும் இதயம் என்பதை
> இங்கே கல்ப் என்று சொல்லியுள்ளேன். அறிஞர் பெருமக்கள் மாற்றம்
> வேண்டினார்களென்றால், பிறகு மாற்றிவிடுகின்றேன்.)
--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.blogspot.com