ஆசாத்,
// > சார்பு நிலை எல்லாரிடமும் உண்டு. ஒன்றைச் சார்வதால் நிச்சயமக
> மற்றொன்றிற்கு எதிர்ப்புதான்.//
நிபந்தனையற்ற கருத்துகளின் தொகுப்பே உண்மை.
எனது நிலைபாடு இது தான்.
சார்பு நிலை ஒருவரிடத்தில் இருப்பதனால், அவருடைய எழுத்துகளும் வாதமும்
அந்த சார்புடையதாகத் தான் இருக்க வேண்டும் என்று வாதிட்டால், உண்மை எங்கோ
போய் ஒளிந்து கொண்டது என்று தான் அர்த்தம். அவர் காங்கிரஸ் ஆதரவாளர்
என்பது, அந்தக் கட்சியின் மேடையில் ஏறி நின்று பேசும் பொழுது மட்டுமே
கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டியது. ஒரு புத்தகத்தையும் அதே
சார்புநிலையில் எழுதுகிறார் என்றால், அவர் உண்மையை விட, தான் சார்ந்த
சித்தாந்தத்தை மட்டும் தான் வலியுறுத்த அந்தப் புத்தகத்தை எழுதியதாக
எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு ப்ளாக்கர் எப்படி தனக்குப்
பிடித்ததை மட்டும் தான் எழுதுவாரோ, (உண்மை எப்படியிருந்தாலும்,) அந்த
மாதிரி தான் எழுதுவேன் என்றால், அவரை என்னால் மற்றுமொரு ப்ளாக்கராக
மட்டுமே ஏற்றுக் கொள்ள இயலும். மற்றபடி, அவர் வரலாற்றில் ஒரு
துளியையேனும் தனது பங்களிப்பாக அளித்து விட்டார் என்று என்னால் ஏற்றுக்
கொள்ள இயலாது. சில ப்ளாக்கரக்ள், இந்த வகையில் எவ்வளவோ மேல். சில சமயம்
சிறப்பாக - இந்த மாதிரியான எழுத்தாளர்களை விட மேலானவர்களாக கருத
வைக்கிறது.
// > பாக்கிஸ்தானிய எதிர்ப்பை நான் தவறென்று சொல்லமாட்டேன். என்னிடம்
> இருக்கும் கொஞ்சம் கொஞ்சம் தேசியவியாதியை :-)நீங்கள் இதுவரையில்
> உணர்ந்திருப்பீர்கள். பாக்கிஸ்தானிய எதிர்ப்பு + காங்கிரசு ஆதரவு =
> எம்.ஜே.அக்பர், தவறில்லை என்பது எனது பார்வை. உங்கள் பார்வை வேறாக
> இருக்கலாம். //
ஒருவர் தன்னை நிறுவிக் கொள்ள, பொதுப்புத்தியில் நிகழும்
எண்ணங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற
'self-consciousness' கொண்டு செயல்படுகிறார்கள் என்பதைத் தான் இது
சொல்கிறது.
பாக்கிஸ்தான் எதிர்ப்பு, பாக்கிஸ்தான் ஆதரவு என்பதல்ல இந்த நிலைபாடு.
நான் ஒரு முஸ்லிம். இந்தியாவில் அனைவரும் முஸ்லிம் என்றால்,
பாக்கிஸ்தானைச் சார்ந்தவன் - அங்கு போகாமல், இங்கு தங்கி விட்டானே என்ற
ஆதங்கத்தை மனதிலேந்திக் கொண்டிருப்பவர்கள் - அவர்களிடத்தில் நான் நல்ல
பெயர் வாங்க வேண்டுமென்றால், அவர்களுக்கு வெறுப்பானதன் மேல் நானும்
வெறுப்பு கொள்வேன் - அவர்களுக்கு விருப்பமானதன் பேரில் நானும் விருப்பு
கொள்வேன் - I am a conscious guy about this likes and dislikes - என்று
இயங்க ஆரம்பித்தால், அவரால் எதையும் உண்மையுடன் பார்க்கும் பக்குவத்தைப்
பெற முடியாது. ஒருவன் தன்னை மையப்படுத்தி, அதன் மூலமே தன்னைச் சுற்றியவை
அனைத்தையுமே நோக்குவேன் என்று அடம் பிடித்தால், அவன் தனக்குப்
பிடித்தமானதை மட்டுமே எழுதும் ஒரு ப்ளாக்கர் தானே தவிர, ஒரு பெரும்
வரலாற்றை, அதன் நிகழும் போக்கில் படம் பிடித்துக் காட்டும் அருகதையற்றவன்
என்றாகிவிடுவான்.
அவன் தான் விரும்பியவற்றை பெரும்பான்மை கருத்திற்கு உகந்ததாக
மையப்படுத்தும் பொழுது, உண்மைநிலையை விளிம்பு நிலைக்குக் கொண்டு
செல்கிறான் என்பது சொல்ல வேண்டியதில்லை.
தான் எழுதுவது அனைவருக்கும் பிடிக்கிறதா என ஒருவன் அச்சம் கொள்கிறான்
என்னும் பொழுதிலே, அவனது நேர்மை சந்தேகத்திற்குரியதாகி விடுகிறது.
பின்னர் எப்படி அவனது எழுத்துகளை நேசிக்க இயலும்? இங்கு இவர் எழுதுவது
ஒரு propagandaist எழுதுவதைப் போன்றது தானே தவிர, அதற்கு மேற்பட்டு
எதுவுமில்லை. ஒருவர் உண்மையைச் சொல்ல வேண்டுமென்பதற்காக, தனது
தேசபக்தியைத் துறக்க வேண்டுமென்பதில்லை.
ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன் -
(மராட்டா) சிவாஜியை நேர்மையற்ற தளபதி என்று ஒருவர் ஒரு புத்தகம்
எழுதிவிட்டார். (பெயர் இப்பொழுது ஞாபகம் இல்லை) அது ஒரு பெரும்
சர்ச்சையைக் கிளப்பி அந்தப் புத்தகம் தடை செய்யப்படும் அளவிற்கு
சென்றுவிட்டது. தகராறு செய்தவர் - பால் தாக்கரே.
எதனால்,சிவாஜி நேர்மையற்ற தளபதி?
விருந்திற்கு அழைக்கப்பட்ட ஔரங்கசீப்பின் தளபதியை, நயவஞ்சமாக முதுகுப்
புறத்தில் குத்திக் கொன்ற சம்பவத்தை தான் குறிப்பிட்டு, ஒரு diplomatic
meetingன் போது, ஆயுதங்களைப் பயன்படுத்துவது கூடாது என்பது தொன்று தொட்டு
வரும் சம்பவம். ஆனால், அந்த சம்பிராயத்தைக் கடைபிடிக்காது, நயவஞ்சகமாகக்
கொலை செய்தது மிகக் கொடூரமான சம்பவம். அதிலும், அந்த சம்பவம் அவரது படை
வீரர்களால் செய்யப்படவில்லை. அவரது கையாலே செய்யப்பட்டது.
சிவாஜி செய்தது மிகப்பெரும் நம்பிக்கைத் துரோகம் - இது தான் உண்மை.
ஆனால், அந்த துரோகம் நமக்கு கொண்டாடப்படும் ஒரு வரலாறாகவும், ஒரு வீர
செயலாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது. இதையே அந்த எழுத்தாளரும் எழுதி,
சிவாஜி மகாராஜாவின் வீரத்தைப் பாரீர் என சொல்லியிருந்தால், அந்த
எழுத்தாளருக்கு எந்த சிரமமும் இல்லாது போயிருந்திருக்கும். ஆனால், அவர்
ஒரு உண்மையான வரலாற்றியலாளராக இருந்திருக்க முடியாது. ஏனென்றால், இந்த
கருத்தையே வரலாறுகளை ஆய்ந்தவர்கள் கூறுவது. ஆக, பாமர விருப்பம்
என்பதற்கும், உண்மைக்குமிடையே பல சந்தர்ப்பங்களில், வேறுபாடுகள்
கண்டிப்பாகத் தோன்றிவிடுகிறது. அவர் - எழுத்தாளர் - எந்த அளவிற்கு
உண்மைக்கு அருகில் பயணிக்க விரும்புகிறார் என்பதைப் பொறுத்து, அவரது
எழுத்துகள் தனித் தன்மை அடைகிறது.
எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றிய ஒற்றை நோக்குடன் ஒரு எழுத்து பயணிக்க
வேண்டும். தேவையற்ற அநாவசிய சரக்குகளை - தன்னைப் பற்றிய உயர்வான
எண்ணத்திற்கு தன் எழுத்துகள் வித்திட வேண்டும் என்பது ஒரு எழுத்தாளனுக்கு
இலக்கானால், அவனால் பேசப்படும் விஷயங்களைப் பற்றித் தான் பேச முடியுமே
தவிர, பேச இயலாதவற்றைப் பற்றிப் பேச இயலாது. உண்மையும், நேர்மையும், பேச
இயலாத விளிம்புகளில் ஒளிந்து கொண்டு விடும்.
The Shade of Swords என்ற புத்தகத்தைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள்.
படித்து விட்டு சொல்லுங்கள், உங்கள் எண்ணம் என்னவென்று. அறிய ஆவலாக
இருக்கிறேன்.
அந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகள்-
The Abbasids of Abul Abbas, .... however would not be remembered so
much for the purity of the faith as the glory of some of his heirs,
the most famous being Haroon ur Rashid (786 - 804). Actually, the
Arabian Nights are a bit of an undersell. ............ At the palace,
truth began to compete with fiction. Haroon's grandson Mutawakkil is
said to have had 4000 concubines; more impressively, he claimed to
have slept with all of them. ............ Harun might buy a ruby for
40,000 dirham; the Caliph Mustain order a rug worth 130 million dirham
for his mother. ..... (page 65)
நானும் இந்தப் புத்தகத்தை முழுமையாக வாசிக்கவில்லை. வாங்கி வைத்ததோடு
சரி. நீங்கள் சொன்ன பிறகு, புத்தகத்தை எடுத்து தற்செயலாகப் பிரித்த
பொழுது, அவரது எழுத்தின் லட்சணங்களைக் கண்டு சிர்ப்பதா, அழுவதா என
புரியவில்லை. Jihad and the conflict between Islam & Christianity என்று
ஒரு Caption வேறு.
இது எப்படி இருக்கிறது தெரியுமா?
மதன் எழுதிய வந்தார்கள், வென்றார்கள் படிப்பதைப் போலிருக்கிறது. வரலாற்றை
விட, வரலாற்றைப் பற்றிய புரணிகள் தான் சுவையானவை. அதனால், வரலாற்றை
மேம்போக்காகப் படித்து எழுதிவிட்டு, புரணிகளையும், வதந்திகளையும்
சுவையுடன் பக்கம் பக்கமாக எழுதினார், மதன். அக்பரும் அந்த வகையோ? அல்லது
அவரது புரிதல் குறைவானதா?
Actually, the Arabian Nights are a bit of an undersell. என்ன வகையான
விமர்சனம் இது? மேஜிக்கல் சர்ரியலிஸம் என்பதைத் தாங்களே கண்டு கொண்டதாக
ஐரோப்பிய எழுத்தாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். அவர்கள் -
இந்தியாவின் பஞ்ச தந்திரக் கதைகளையோ, அரபிய இரவுகளையோ
வாசித்திருக்கவில்லையென்பதே உண்மை. இது இவ்வாறிருக்க, அக்பரின் விமர்சனம்
- கொச்சையாக இருக்கிறது. ஏனென்றால், அதில் வரும் சில கதாபாத்திரங்கள்,
இன்றைய தினத்தில் கூட, எல்லோராலும் எளிதாக உள்வாங்கப்பட முடியாத,
நினைத்துப் பார்க்கக் கூட முடியாத காமத்தின் உச்சத்தைத் தொட்டுச்
செல்லும். இதைத் தான் "undersell" என்கிறாரா, அக்பர்? அல்லது, அந்த
சமூகம் அப்படியொரு கேடுகெட்ட சமூகமாக இருக்கிறது என்கிறாரா?
எப்படியிருந்தாலும், அவரது அனுமானங்கள் தவறு. இஸ்லாமிய உலகமும், கலாச்சார
பெருமை மிக்க சிகரங்களைத் தொட்டிருந்தது - இலக்கிய உத்திகளைத்
தேடிப்பிடித்து வளர்த்தெடுத்தது என்பதே உண்மை. அந்த சகிப்புத் தன்மையை
இழந்ததே நமது பரிதாபம். அந்த சகிப்புத்தன்மையும், இலக்கிய வளமும்
தொடர்ந்திருக்குமானால், இன்று நம்முடைய வளர்ச்சி எங்கேயோ
போயிருந்திருக்கும். இன்று பலரும் - குறிப்பாக - இறுக்கமான மதவாதிகள்
அந்த வகை இலக்கியங்களை ஏற்றுக் கொள்வதில்லை. நாமும் அதனுள்ளேயே முடங்கிப்
போயிருக்க மாட்டோம். அதைப் போன்று அவரே குறிப்பிடுவது போல, the line
between the truth and fiction fades away என்ற வைப்பாட்டிகளின் கணக்குத்
தொகையும், கலைப் பொருட்க்ளின் மீதான முதலீடு பற்றிய குறிப்புகளும்.
இந்த எழுத்துகளின் தரத்தோடு, நான் குறிப்பிடும் மற்றொரு புத்தகத்தை
ஒப்பிட்டுப் பாருங்கள் - The struggle within Islam என்ற Dr.Rafeeque
Zakaria எழுதிய புத்தகத்தையும். வளமான சிந்தனைக்கும், ஒரு
வலைப்பதிவாளரின் மனஓட்டத்திற்கிடையுமான வித்தியாசங்கள். வதந்திகள்,
புரணிகள் இவற்றையெல்லாம் பற்றி பிரஸ்தாபிக்காமல், நேரிடையாகப் பேசிச்
சொல்கிறது. இஸ்லாமியர்களின் வீழ்ச்சிக்குக் காரணமான - the clash within
the ruler on his function between the temporal head and the spiritual
head lead to a compromise which had never satisfied the living people
and the priest class... இஸ்லாமியர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் - அரசனா,
மதத்தலைவனா என்ற குழப்பத்திற்குள் ஆள்பவரை தொடர்ந்து தடுமாற வைத்தத்ன்
மூலம் - அரச குடும்பங்களின் எழுச்சியோடும், வீழ்ச்சியோடும் இஸ்லாமியர்கள்
தங்களை முடிச்சுப் போட்டுக் கொண்டனர். மதத்தையும், அரசியலையும்
குறிப்பிடத்தக்க அளவில் பிரித்து வைத்திருப்பார்களேயானால், இரண்டும்
தனித்தனி நிறுவனங்களாக அற்புதமாக வளர்ந்திருக்கும். ஒன்று வீழ்ந்தாலும்,
மற்றது நிலை பெற்றிருக்க்கும். இந்தக் கருத்தை ஒட்டியே அவருடைய
வாதங்களும், எதிர்வாதங்களுமாக அருமையாக எழுதியிருந்தார். (இறுதி
வரையிலும் படிக்கவில்லை. இந்த வருட விடுமுறையில் படித்து முடித்து
விடுவேன். பின்பு தான் சக்கரியா அவர்கள் தனது இறுதி கருத்தாக எதை
சொல்கிறார் என்பது தெரியவரும். ஆனால் - அவர் இரு தரப்பு வாதங்களையும்
வைக்கத் தயங்கவில்லை.படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற தொனியிலே
செல்கிறது.அந்தப் புத்தக்கத்தை துபாய் எடுத்து வர எனக்குத்
தயக்கமிருக்கிறது என்பதனால் எடுத்து வரவில்லை) இது தான் என்னுடைய
கருத்தும் - இஸ்லாமிய தலைமை - மசூதியை விட்டு வெளியே வரவேண்டும் - அதுவே
உண்மையான விழிப்புணர்விற்கும், எழுச்சிக்கும் வழி வகுக்கும்.
எதற்கெடுத்தாலும் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கும் சிந்தனையாளர்களை விட,
(நீங்கள்அடிக்கடி சொல்வது போல் - ) களப்பணியாற்றும், இறுகிய மதவாதியாக
இல்லாமல், இளகிய தலைவனாக தங்களை வழி நடத்த நாம் தேட வேண்டும் என்பதே எனது
கருத்து. இன்றும் ஒரு சிறு கூட்டம் என்றால் கூட உடனே தொப்பி, ஜிப்பா
என்றெல்லாம் போட்டுக் கொண்டு, தன் பழமைத்தனத்தை அடையாளமாக அணிந்து வரும்
நண்பர்களைப் பார்க்கும் பொழுது, இதிலிருந்தெல்லாம் விடுதலை எப்போது என
மனம் ஏங்குகிறது.
நிச்சயமாக MJ Akbar மூலம் அல்ல.
அக்பரின் நடை - ஜெயலலிதாவின் வீட்டை சோதனையிட்டு அவரது செருப்புகளையும்,
புடவைகளையும் ஒளிப்பதிவு செய்து, அதைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக்
கொண்ட சன் டீவியின் சீப் பப்ளிசிட்டி ஸ்டண்ட் மாதிரி இருக்கிறது.
பாருங்கள், 4000 வைப்பாட்டிகள், 130,000 திர்ஹ்ம்மிற்கு ரூபி, 100,000
திர்ஹம்மிற்கு கம்பளம் என்றெல்லாமா எழுதுவது. யாருக்கு வேண்டும் இந்த
விவரங்கள்?
தாஜ்மஹால் கட்டி செல்வழித்து விட்டானே, இவனெல்லாம் மன்னனா என்று கேட்பது
போலிருக்கிறது? (அந்த மன்னனின் பெயரை வைத்துக் கொண்டு, கலைக்கும்,
இலக்கியத்துக்கும் செலவு செய்வதைக் குறை கூறினால், கோபம் பொத்துக் கொண்டு
வருகிறது. மன்னன் தன் வசதிக்கேற்ப தாஜ்மஹால் கட்டினான். நான் என்
வசதிக்கேற்ப ஒரு நூலகம்.. இரண்டு பேருமே - ஷாஜஹான் தான்.)
விஷயம் என்னவோ, அதைப் பற்றி மட்டுமே பேசுவோம் என்றில்லாமல், ஒரு மொக்கை
எழுத்தாளன் மாதிரி, அற்ப விஷயங்களையா பேசுவது?
அல்லது,
the clashes of civilization என்ற புத்ட்தகத்தையாவது ஒரு முறை
வாசித்திருக்க வேண்டும். (ஆசிரியரின் பெயர் நாளை தருகிறேன்.) ஒவ்வொரு
கலாச்சாரமும் எவ்வாறு எப்படி பிற கலாச்சாரத்துடன் மோதுகின்றன,
உறவாடுகின்றன என்பதைப் பற்றி விரிவாகப் பேசும் புத்தகம்.
எழுத்தாளனிடமிருந்தே எழுத்துகள் பிறந்தாலும், அவனது சுய ஆளுமைகளைக்
கடந்து செல்ல எப்பொழுது அந்த எழுத்துகளால் முடிகிறதோ, அப்ப்பொழுது
மட்டுமே அந்த எழுத்துகள் நிலைத்திருக்கும். அதனால் தான் நான் M J
Akbarஐப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, அவரை a confirmed apologist என்று
குறிப்பிடுகிறேன். தன்னை பிற முஸ்லிம்களிடமிருந்து விலக்கி தனித்தவனாக
அடையாளம் காணப்பட வேண்டும் என்பதற்காக, உண்மைகளை விட, நம்பிக்கைகளை
நேசிப்பவனை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும், சொல்லுங்கள்??