தமிழ் சினிமா : விமர்சன சூழலும் நாயகிகள் எனும் நுகர்வுப் பொருளும்

50 views
Skip to first unread message

நந்தா

unread,
Apr 9, 2008, 2:50:53 AM4/9/08
to பண்புடன்
மத அடிப்படைவாதங்கள், தமிழ் தேசியம், பிராந்திய உணர்வு, என்று பல்வேறு
பிரச்சினைகள் குறித்து பல்வேறு விதமாய் ஒவ்வொரு பத்தி எழுத்தாளர்களும்,
விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
தமிழ் சினிமாவின் விமர்சன சூழலைக் குறித்து யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ள
“நகல் போலி சினிமா : தமிழ் விமர்சனச் சூழல்” இந்த கட்டுரை இதற்கான மறு
பார்வையை எழுதச் சொல்லி எனக்குள் தூண்டியிருக்கிறது.

இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா ஒரு மோசமான சூழலால்
கட்டுண்டிருக்கிறது. இந்த, இந்த அபத்தங்கள் இப்போது ஆரம்பித்தது என்று
குறிப்பிட்டுச் சொல்லுபடியாய் இல்லாமல், தொன்று தொட்டு நெடுங்காலமாய்
இருந்து வந்துக் கொண்டிருக்கிறது. மறைமுகமாய் தமிழ் சினிமா, கலாச்சாரம்
என்ற சொல்லாடலை உபயோகப்படுத்தி, மெல்ல மக்களிடையே ஏற்படுத்தி
வைத்திருக்கும் கருத்தியல்களையும், அல்பத்தனமான உணர்ச்சிகளையும், இவை
எவற்றையும் விட, விகாரமாய் நிறுவி வைத்திருக்கும் கட்டமைப்புகளையும் நாம்
மறு விசாரணை செய்ய வேண்டிய அவசியத்திலிருக்கிறோம். சொல்லப்போனால் இதுவே
வெகு தாமதம் தான். “Any how,It’s better late than never”.

யமுனா ராஜேந்திரனின் இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் பல
விஷயங்களைக் கண்டிப்பாய் ஒத்துக்கொள்ள வேண்டியவைதான். அது தமிழ் சினிமா
குறித்தான சரியான சொல்லாடல்கள் இல்லை எனும் கவலை, உலக சினிமா என்பதற்கு
தமிழ் சினிமா அறிவு ஜீவிகளின் புரிதல், திரைப்பட விழாக்களின் பின்னாலான,
வர்த்தக நோக்கம், திரைப்பட அமைப்புகள் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களின்
பின்னே நிலவும் அரசியல், என்று பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம்.
இது குறித்தான அவரது புரிதல்களை அவர் வெளிப்படுத்தும் போது சினிமாவை
நேசிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும், மேலதிகமாய் ஒரு கவலை ஏற்படும் என்பது
உண்மையே.

ஆனால் இவரது இந்த கட்டுரையில் ஒரு சில இடங்களில் மட்டும் நாம் முரண்பட
வேண்டி இருக்கிறது. “தமிழ் சினிமா விமர்சனச் சூழல் தனது அடிப்படையான
தப்படியைக் கூட இன்னும் முன் வைக்கவில்லை.” என்று ஆரம்பித்து, இன்று ஒரு
சிலரால் “தீவிர விமர்சகர்கள்” என்று கொண்டாடப்படுபவர்கள் மீதான இவரது
காட்டமான விமர்சனங்களைக் குறித்து பேசும் போது நாம் சற்றே மாறுபட
வேண்டியுள்ளது. அதற்குக் காரணங்களும் உள்ளது.

தமிழ் சினிமாவின் தற்போதைய அறுவறுப்பான சூழ்நிலைக்கு ஓர் முக்கிய காரணம்
சரியான விமர்சன சூழல் இல்லாததும் கூட. இன்றும் எங்கள் ஊர்களில் திரை
விமர்சனம் என்பது, சன் டீவியின் விமர்சனமாகவோ, குமுதம் அல்லது ஆ.வியின்
விமர்சனமாகவோ மட்டுமே புரிந்துக் கொள்ளப்படுகிறது. சற்றே முன்னேறிய
அல்லது கணிணி வல்லுநர்களுக்கு மேலதிக வாய்ப்பாக இணையத்தில் ஆங்காங்கு
எழுதப்படும் பதிவுகள் மற்றும் ஏதேனும் பொழுது போக்குத் தளங்களின்
விமர்சனங்கள் (இதற்கும் ஆ.வி டைப் விமர்சனத்திற்கும் அதிக
வித்தியாசமில்லை) கிடைக்கிறது.

தமிழ் திரைப்படங்களுக்கு வெகு ஜன ஊடகங்களில் எழுதப்படும் திரை
விமர்சனங்கள், பல்வேறு அரசியல்களினடிப்படையிலேயே மதிப்பிடப்படுகின்றன.
குறிப்பிட்ட திரைப்படத்தின் இயக்குநர் அல்லது கதாநாயகன்,
போன்றவர்களுக்கும், சம்பந்தப்பட்ட ஊடகத்திற்குமிடையேயான
நட்புறவினடிப்படையிலேயே இத்தகைய விமர்சனங்கள் எழுதப்படுகின்றன. உனக்கும்
வேண்டாம், எனக்கும் வேண்டாம் 100 க்கு 40 மார்க் போடறேன் எடுத்துக்கோ
என்ற தொனியில் எழுதப்படும் இத்தகைய விமர்சனங்களில் நிறைந்துள்ளப்
போலித்தனங்களைப் பார்க்கையில் ஒரு வித ரௌத்ரம் ஏற்படுகிறது.

அறந்தை நாராயணன் போன்றோ ஏற்படுத்திக் கொடுத்த விமர்சன சூழல், சமீப
காலங்களில்தான் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. சாரு, அ.ராமசாமி, எஸ்.ரா,
யமுனா, ப.திருநாவுக்கரசு, விஸ்வாமித்ரன், தியோடார் பாஸ்கரன்,வெங்கட்
சாமிநாதன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, காஞ்சனை சீனிவாசன், பாமரன்,
பிஸ்மி,போன்ற விமர்சகர்களும், திலகவதி, செழியன் போன்றோரின் உலக சினிமா
பற்றிய நூல்களும் கொஞ்சமேனும் வாசகர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது.
இவர்கள் ஒவ்வொருவரும் மார்க்சிய சார்பு, திராவிட சார்பு,அழகியல்
விரும்புபவர்கள், விளிம்பு நிலை பார்வையாளர்கள்,என ஒவ்வொரு தளங்களில்
இருந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களே. தான் சார்ந்த அரசியல்
சித்தாந்தங்கள் இவர்களது விமர்சனங்களிலும் எட்டிப்பார்த்துக்
கொண்டுதானிருகிறது.

அது எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் பராசக்தி குறித்த திராவிட பார்வையாகட்டும்,
அல்லது யமுனாவின் மார்க்சிய பார்வைகளாகட்டும் ஒவ்வொருவரும் தனது சார்பு
நிலையை வெளிப்படையாகவே தெரிவித்து கட்டுரைகளும், விமர்சனங்களும், எழுதிக்
கொண்டிருப்பவர்களே. இங்கே நெருடலே யமுனா இடது சாரி விமர்சனச் செயல்பாட்டை
ஒட்டு மொத்தமாய் முன் நிறுத்தி, பிற அரசியல் சார்புகளையும், காலச்சுவடு
எழுத்தாளர்கள் என்று சொல்லி தியோடார், அ.ராமசாமி போன்றவர்களயும், இன்ன
பிற காரணங்களுக்காக எஸ்.ரா, சாரு போன்றவர்களையும் எளிதில் புறம்
தள்ளுவதுதான்.

நிற்க. கருத்தியல் அடிப்படையில் இந்த விமர்சகர்கள் அனைவரும், எல்லா
படங்களுக்கும், வெகு ஜனநாயகமான, முன் மதிப்பீடுகளற்ற, நடு நிலை
விமர்சனங்கள் தான் எழுதி இருக்கிறார்கள் என்று நான் சொல்ல வர வில்லை.
இந்த விமர்சகர்களின் ஒரு சில விமர்சங்களில் நிலவும் தேவையில்லாத
காட்டமும், காட்சி ஊடகம் என்பதை மறந்து வெறுமனே தான் சார்ந்த அரசியல்
சார்பை முன்னிறுத்தி, வெறுப்பினை உமிழும் சில சந்தர்ப்பங்களையும் நாம்
அறிந்துதான் இருக்கின்றோம். இது யமுனாவிர்கும் பொருந்தும்.

தமிழ் சினிமா இப்போதிருக்கும் நிலையில், இவர்கள் செய்யும் சிறு சிறு
பிழைகளை புறம் தள்ளி, இவர்களனைவரிடமிருந்தும், மேலதிகமாய் இன்னும் அதி
தீவிர செயல்பாடுகளை வேண்டி நிற்கும் சூழ்நிலையில் நாம் நிற்கின்றோம்.
ஏனெனில் இப்போது (என்னைப் பொறுத்தவரை) நம் முன் விரவி நிற்கும் முக்கியப்
பிரச்சினை விமர்சனங்கள் எத்தகைய தன்மையுடையதாய் இருக்க வேண்டும் என்பதே
அல்ல. அதை விட பூதாகரமாய் தமிழ் சினிமாவின் அவலங்களும், அறுவறுப்புகளும்
நம் முன் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன. அப்படி என்ன தமிழ் சினிமா
சூழல் கட்டமைத்து விட்டது?? இதெல்லாம் சும்மா அளவுக்கதிகமாய்
மதிப்பீடுகளைக் குறைத்து கூறும் ஒரு முயற்சி என்று எவரேனும் சொல்லலாம்.
ஆனால் இப்படியாய் நாம் கூறுவதற்கும் ஆதாரங்களாய் சில இருக்கத்தான்
செய்கின்றன.

நடிகைகள் அல்லது சதை வியாபாரிகள்:

தமிழ் சினிமாவில் நடிகைகளை வெறும் நுகர்வுப்பண்டமாக மட்டுமே
பயன்படுத்தப்பட்டு வருவதை என்னால் ஒரு உச்சக்கட்ட அறுவறுப்பான ஒன்றாகவே
பார்க்க முடிகிறது. பெண்ணியம் குறித்து பல்வேறு தளங்களில் விவாதங்களும்
கேள்விகளும் எழுப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தனது உச்சகட்ட
பாக்கியமாய்,”கதாநாயகனிடம் திட்டுக்களோ, அடியோ அல்லது இலவசமாய் தமிழ்
கலாச்சரம் பற்றிய உபதேசங்களையும் வாங்கிக் கொண்டு, அவனது காலைச் சுற்றிக்
கிடப்பதே” தனது லட்சியமாய் கொண்டு வாழும் அழகு பொம்மைகளையே கதாநாயகிகள்
என்று தமிழ் சினிமா சூழல் நமக்கு ஒரு புனைவை ஏற்படுத்தி இருக்கின்றது.
சத்யராஜ், சிம்பு,தனுஷ்,விஜய்,சரத்குமார் போன்ற கதாநாயகர்களின் பல
திரைப்படங்களில் நாயகிகள் ஏதாவது ஒரு பாட்டில், நாயகனின் காலைச் சுற்றிக்
கட்டியபடி உட்கார்ந்திருப்பார்கள். இதை மதிக்காத ஓர் தோரணையில் நாயகன்
படு அலட்சியமாய், எங்கேயோ பார்த்த படி காலை விரித்த படி நின்றுக்
கொண்டிருப்பான். இந்த இடத்தில் நாயகி தனது நடிப்புத் திறமைக்கு விடப்பட்ட
சவாலாய் கருதிக் கொண்டு எவ்வளவுக்கெவ்வளவு விரகதாபத்தை தனது முகத்தில்
காட்ட வேண்டுமோ அவ்வளவு தூரம் முயற்சித்து நடித்திருப்பார். மிஞ்சி
மிஞ்சிப் போனால் அவருக்கு அந்த படத்தில் இதை விட சிறந்த ஓர் நடிப்புத்
திறமையை வெளிப்படுத்தும் ஓர் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

“உங்களுக்கெல்லாம் அம்மான்னு ஒரு ஸ்தானம் இல்லைன்னா மரியாதையே இருக்காது”
என்று தனது காதலியைப் பார்த்து விஜய் ஒரு வசனத்தை பேசியிருப்பார். அப்படி
கோபப்பட்டு கேவலமாய் நினைக்கும் எந்த ஒரு பெண்ணையும் தனது காதலியாய்
அல்லது மனைவியாய் ஏற்றுக் கொள்ள ஓர் அடிமட்ட மடையன் கூட நினைக்க
மாட்டான். ஆனால் தான் துரத்தித் துரத்திக் காதலிக்கும் ஒரு பெண்ணிடம் இது
போன்று பல முறைகள் அந்த படத்தில் விளாசியிருப்பார். இந்த வசனம்
சொல்லப்பட்ட போது, தியேட்டரில் இருந்த பெரும்பாலான கல்லூரி மாணவன்களும்
மூச்சு விடாமல் ஆரவாரம் செய்தார்கள். தனது டார்கெட் ஆடியன்ஸை
திருப்திப்படுத்தும் பொருட்டு தனது பெரும்பாலான படங்களில் இது போன்ற ஒரு
சில சீன்களை தொடர்ச்சியாய் கையாண்டுக் கொண்டிருக்கிறார் விஜய். அவர்
நடித்த சிவகாசி படம் இதற்கு இன்னொரு உதாரணம். எல்லாரும் கூடியிருக்கும்
ஒரு கல்யாண மண்டபத்தில் ஒரு பெண்ணை Humiliate செய்வது என்பது சத்தியமாய்
ஒரு பொறுக்கித் தனமான செயலே.எந்த ஒரு சுய மரியாதையுள்ள பெண்ணும், தன்னை
அசிங்கப்படுத்தும் அப்படி ஒருவனை விரோதியாய்தான் பார்ப்பாளேயொழிய அவனுடன்
கட்டிப் புரண்டு, காதல் செய்ய நினைக்க மாட்டாள்.

ஆனால் தமிழ் சினிமா நமக்கு சுய மரியாதையுள்ள மற்றும் படித்த பெண்களை
கர்வக்காரிகளாகவும், அகம்பாவம் மிக்கவர்களாகவும், ஏழைகளையும்,
முதியவர்களை மதிக்காத திமிர் பிடித்தவளாகவுமே நமக்கு அடையாளப்படுத்தி
வருகிறது. பாலிவுட்டுடன் போட்டி போடக் கூடிய அளவுக்கு சிறந்ததாய் தற்போது
விளங்குவது நம் கோலிவுட்தான் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழ்
சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில், “அய்யா நம்ம சின்னம்மா பட்டணத்துல
படிப்பை முடிச்சுட்டு நாளைக்கு வர்றாங்களாம்” என்று சொல்லும் ஓர் ஒற்றை
வரியைத் தொடர்ந்து தொடங்கும் கதாநாயகியின் அறிமுகம். அவரது அறிமுக
காட்சியில் ஒன்று அவர் ஏதேனும் ஒரு சிறுமியையோ, அல்லது ஓர் முதியவரையோ
கோபம் கொண்டு அறைவாள் அல்லது தனது காரை அரை நொடி கூட பிரேக் போடத்
தயங்குபவளாய் ஏதேனும் ஓர் கோழியையோ, ஆட்டையோ சாகடித்துச் செல்லும், ஓர்
அற்ப பிறவியாகவே காட்டி வருகிறது.

இப்போ எல்லாம் எங்கய்யா இப்படி படம் எடுக்கிறாங்க? அது எல்லாம் இப்போ
இல்லை என்று கூற நினைப்பவர்க்கு நான் சொல்ல வருவது இதுதான். படித்த
அல்லது தான் சார்ந்த துறையில் திறமை மிக்கவர்களாய் இருக்கும் பெண்களை
இவ்வாறு கர்வக்காரிகளாகவும் அல்லது ஆண்களைக் கண்டாலே வெறுக்கும் ஓர்
அகம்பாவக்காரிகளாவும் காட்டிக் காட்டியே தமிழ் சினிமா மக்களின் மனதில்
விதைத்த நஞ்சுக்கள் ஏராளம். வெகு நிச்சயமாய் இது பெண்கள் குறித்தான ஓர்
மறைவான கட்டமைவு ஏற்பட காரணமாய் இருந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் ஒரே ஒரு
வித்தியாசம்தான். வில்லன் “உன்னை கற்பழிக்கிறேன்” என்று சொல்லி
கற்பழிப்பான். கதாநாயகன் “உன்னைக் காதலிக்கிறேன்” என்று சொல்லி
கற்பழிப்பான். அவ்வளவே. உலக சினிமா தரத்திற்கு தமிழ் சினிமாவும் கொண்டுச்
செல்லப்பட வேண்டும் என்று சொல்லி அதனடிப்படையில் நிகழ்த்தப்படவேண்டிய புற
மாற்றங்களாகச் சொல்லப்பட்டு வரும் விஷயங்களில் முக்கியமானவை, 2 1/2 மணி
நேரச் சினிமா என்பதிலிருந்து மாற்றுதல், காட்சிகளை இடைவேளைக்கு முன்,
பின் என்று பிரிக்காமல், இடைவேளையற்ற சினிமாவாக மாற்றுதல், பாடல்களற்ற
சினிமாவை உருவாக்குதல் என்று பல்வேறு விஷயங்களை விமர்சகர்கள்
முன்வைக்கிறார்கள். ஆனால் பாடல் காட்சிகளில்லா சினிமாவை எவர் ஏற்றுக்
கொள்ளக்கூடும். தனக்கு பிடித்த நாயகியின் பல்வேறு தாபங்களையும், கணவனின்
முன் மனைவி கூட செய்ய யோசிக்கும் உடல் அசைவுகளயும், க்ளோசப் ஷாட்டில்
நாயகியின் அங்கங்களையும், காதல் விளையாட்டுகளையும் பார்த்து
கிளர்ச்சியுறும் கூட்டமாய், ஒரு சமூகத்தையே, தமிழ் சினிமா மாற்றி
வைத்திருக்கும் இந்த சூழலில், பாடல்களில்லாமல் திரைப்படங்களா????
“போங்கடா போய் பொழப்பைப் பாருங்கடா” என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கோபம்
கொள்ளக்கூடும்.

தமிழ் சினிமா, தனது ரசிகர்களுக்கு செய்த ஒரு பெரும் தொண்டு, அவர்களை
“விசிலடிச்சான் குஞ்சுகளாக” மாற்றி வைத்திருப்பதுதான். சந்திரமுகி
திரைப்படத்தில், ரஜினியைப் பார்த்து, நயன்தாரா “இப்போ பேசாம போ…. போ”
என்று ஒருமையில் பேசுவார். இந்த காட்சி வரும் போது தியேட்டரில் பாதி
பேருக்கு மேல் “ஏய்ய்ய்ய்ய்” என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள். தனது
ரசிகர்களின் உச்ச கட்ட ரசனையை தெரிந்துதானோ என்னவோ, அவர்களை சமரசம்
செய்ய, ரஜினியும், நயனைப் பார்த்து அடுத்த காட்சியில் “போடி” என்று
சொல்லி விட்டுப் போவார். அதன் பின்பே எங்கள் ரசிகர்கள் தலைவர் பழி
வாங்கிட்டார் என்ற அல்ப உணர்ச்சியுடன் சமாதானமடைவார்கள். தமிழ் சினிமா
கட்டமைத்த இத்தகைய ரசனையான சூழலிற்கு வெகு நிச்சயம் வெட்கப்பட வேண்டும்.

தாலி, கற்பு,கலாச்சாரம் என்ற பெயரில் தமிழ் சினிமா பெண்களுக்கும்,
கதாநாயகிகளுக்கும் மட்டும் என்று கட்டமைத்திருக்கும் விதிகள் ஏராளம்.
தாலி என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால், பாதி இயக்குநர்கள் திரைப்படங்களே
எடுத்திருக்க முடியாது. இவர்கள் தாலியை வைத்து இன்னும் பம்பரம் விடாதது
மட்டும்தான் பாக்கி. நாயகி தனது தாலியை அவிழ்த்தெறியும் போது, அடிக்கின்ற
கடல் அலைகள் நின்று விடுகின்றது, கூடு திரும்பும் பறவைகள் பறப்பதை
நிறுத்தி விடுகின்றன, “அய்யோ ஒரு கோபத்தில் நான் தாலியை அவிழ்த்தெறிந்து
விட்டேனே” என்ற எண்ணத்தில் நாயகி கதறி அழுகின்றாள்….டேய் என்னதாண்டா
பிரசினை உங்களுக்கு?? நீங்க எல்லாம் நார்மலாவே படம் எடுக்க மாட்டீங்களா
என்று நாம் கதற வேண்டியதாயிருக்கிறது. நாயகியின் தொப்புளை வைத்து என்ன
என்ன செய்யலாம் என்று ஆராய்ச்சி செய்தது போல், தாலியை வைத்து எப்படி
எப்படி எல்லாம் செண்டிமெண்டுகளை உருவாக்கலாம் என்று இவர்கள் யோசித்து
வைத்திருந்திருக்கிறார்கள். அதன் உச்ச கட்டமாக குஷ்பூ ஒரு படத்தில்
தாலியால் ஒருவனை கொலையும் செய்கிறார்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கற்பழிப்பு என்பதற்கான
தண்டனையாய் நம் தமிழ் சினிமா கிராம பஞ்சாயத்துக்கள் வழங்கி வந்த
தீர்ப்பு, “கெடுத்தவன் பொண்ணைக் கட்டிக்கணும்”. ஒரு பொண்ணை நமக்கு
பிடிச்சுப் போச்சுன்னா, அவளுக்காக அலைய வேண்டிய தேவையில்லை. காதல் கடிதம்
எழுதி, அவள் வரும் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை.
“உன்னைத் தவிர வேறொரு பொண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்” என்று வசனம்
பேசத் தேவையில்லை. ஏன் அவளுக்கு ஒரு ஐஸ் க்ரீம் வாங்கிக் கொடுக்கக் கூட
தேவையில்லை. வேறு என்ன செய்யலாம்? ரொம்ப சிம்பிள், அவளைக் கெடுத்துடலாம்.
அது எப்படி அவ்வளவு சாதாரண விஷயமா? அவள் தனியே இருக்க வேண்டுமே அதற்கு
என்கிறீர்களா?? அடப் போங்க சார், கல்லூரி லைப்ரரி, ஊர் ஆத்தங்கரை,
சவுக்குத் தோப்பு எல்லாம் எதற்கு இருக்கிறது? அங்கே தாராளமாய் துரத்திப்
பிடித்துக் கற்பழித்துக் கொள்ளலாம். சுடுகாட்டுல கூட ஒண்ணு ரெண்டு பேரை
நீங்க பார்த்து விட முடியும். எங்கள் ஊர் தமிழ் சினிமாக்களில் வரும்
இத்தகைய இடங்களில் மட்டும் நாய் கூட கண்ணில் படாது. இங்க இன்னொரு
விஷயமும் இருக்கு, அந்த பொண்ணை நீங்க காதலிக்கிறேன்னு சொன்னீங்கன்னா ஊரே
ஒண்ணு கூடி அருவாளைத் தூக்கிட்டு வந்து உங்க காதலை எதிர்க்கும். மாறா
அவளைக் கற்பழிச்சுட்டேன் என்று சொல்லி விட்டீர்களானால், ஊரே ஒண்ணு கூடி
இருவரையும் சேர்த்து வைத்து விடும்.

கற்பழிப்பு என்ற சொல்லாடலின் மூலம் தமிழ் சினிமா தமிழ் பெண்களுக்கு ஒரு
மிகப் பெரிய கட்டமைப்பை ஏற்படுத்த முயற்சி செய்துள்ள்ளது. கற்பு கெட்டுப்
போச்சுன்னா அவ தற்கொலை செஞ்சுக்கணும். வீரம் வெளைஞ்ச மண்ணு படத்தில
விஜயகாந்த் “என் தங்கச்சி எவனாலோயோ கெடுக்கப்பட்டான்னு ஊர்
சொல்லக்கூடாதுடா” என்று சொல்லி வில்லனை அடித்து கெடுத்து, சாகடிக்கப்பட்ட
தனது தங்கையின் கழுத்தில் தாலியைக் கட்டச் சொல்லுவார். இந்த காட்சி
காட்டப்பட்ட போது, விஜயகாந்த், பார்வையாளர்கள், தியேட்டர் ஆப்பரேட்டர்,
தியேட்டருக்கு வெளியே, விளக்குக் கம்பத்தில் காலைத் தூக்கி சிறுந்ர்
கழித்துக் கொண்டிருந்த நாய் என எல்லாருமே கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தனர்.

சரி இப்போ எல்லாம் இது போன்ற படங்கள் முற்றிலுமாய் குறைந்து விட்டனவே.
தமிழ் சினிமா ஒன்றும் அவ்வளவு மோசமான சூழலில் இல்லை. இது எல்லாம் உங்களை
மாதிரி, மசாலா படங்களை ரசிக்கத் தெரியாதவர்கள் பேசும் உளறல் என்று
எவரேனும் சொல்லலாம். காட்சியமைப்புகள்தான் மாறியிருக்கின்றனவே தவிர,
கட்டமைப்புகள் மாற வில்லை. இன்றும் ஹரி, பேரரசு பட நாயகர்களால், தமிழ்
பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? என்று ஆரம்பித்து, நாயகியிடம்
அறிவுரை கூறும் வசனங்கள் இடம் பெறத்தான் செய்கின்றன. இதைச் சொல்ல ஆண்
என்ற ஒரே ஒரு தகுதி மட்டும் போதும் கதாநாயகனுக்கு. வேறெதுவும்
தேவையில்லை.

பெண்ணின் உடலை மையமாய் வைத்து விவாதங்களும், வன்முறையும், கலாச்சார
மாற்றங்களும் இங்கே தொடர்ச்சியாய் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்ணின்
உடலை ஒரு துய்ப்புக்களமாய் உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு அவலம்
தொடர்ச்சியாய் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
உடலரசியலினடிப்படையில் இதைப் பார்க்கும் போது இதன் பின்னே நிலவும்
நுண்ணரசியலும், அவை நிறுவ முயல்வதும் நமக்கு புலப்படும். தன்னுடைய உடலை,
அங்கங்களை (exhibitionism) வெளிக்காட்டி ஒரு ஆணை தன் கட்டுப்பாட்டில்
கொண்டு வர முயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும், பெண் மறைமுகமாய், தன்னுடைய
உடல் கூறுகளை வெளிச் சொல்லி, “ஒரு பெண்ணை அசிங்கப்படுத்த, அவளது
உடலடிப்படையில் மேற்கொள்ளும் தீண்டல்களே போதும்” எனும் கட்டமைவை தமிழ்
சினிமா மறைமுகமாய் ஏற்படுத்தி இருக்கின்றது. அப்படி இல்லா விட்டால்,
நம்மால், நாயகியை நாயகன் உடலளவில் அசிங்கப்படுத்தும் காட்சிகளைப்
பார்த்து சுரணையில்லாமல் ரசித்துக் கொண்டிருக்க முடியாது.

தமிழ் சினிமாவில் திருமணத்திற்கப்புறம் நடிக்கும் நாயகிகளின் எண்ணிக்கையை
சொல்லி விடுங்கள் பார்க்கலாம். இதன் பின்னே ஒளிந்திருக்கும் பச்சையான
ஆதிக்க உணர்வுகளை, உடல் ரீதியான தமிழ் சினிமாவின் அவலத்தை எவரேனும்
புரிந்துக் கொள்ள மறுக்கிறோம் என்றால், நாமும் நமது சுய தேவைகளுக்காக
பெண்களை உபயோகப் படுத்திக் கொள்வதில் தவறில்லை என்று கருதும், ஓர்
அப்பட்டமான ஆதிக்கவாதிதான் என்றுதான் அர்த்தப் படுத்தத் தோன்றுகிறது
எனககு.

நமீதா,ஸ்ரேயா, மாளாவிகா, மும்தாஜ், ரம்யா, வேதிகா போன்ற இததகைய
கதாநாயகிகளைப் பார்க்கும் போது ஒரு வித பரிதாப உணர்வே வருகிறது. இன்னும்
ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு இவர்கள் தமிழ் சினிமாவில் நாயகிகள்
என்று சொல்லிக் கொண்டு வலம் வந்துக் கொண்டிருக்கலாம். திரைப்படம் சார்ந்த
விழாக்களில் முடியும் வரை குறைவான ஆடைகளை அணிந்துக் கொண்டுப் போய்,
கேமெராக்களை தன் பக்கம் திருப்புமாறு செய்யலாம். நடு நடுவே
அருவிக்கரையிலோ அல்லது வயல் வரப்பிலோ (எந்த இடமாய் இருந்தால் என்ன),
முழுதாய் வேட்டி சட்டையையோ, பேண்ட் சட்டையையோ அணிந்த நாயகனுடன்
பிகினியுடன் “எந்த மரத்துக் கட்டை நீ” என்பது போன்ற வரிகளுடன்
ஆரம்பிக்கும் பாடலுக்கு சிரித்த படியே நடனமாடலாம். உன்னை பார்த்து
பார்த்து சலித்து விட்டது என்று தமிழ் ரசிகர்கள் இன்னொரு கதாநாயகியிடம்
மையல் கொள்ள ஆரம்பிக்கும் நேரத்தில், தெலுங்குப்படத்திற்கோ அல்லது
ஏதேனும் ஒரு தொழிலதிபரையோ பார்த்து கல்யாணம் செய்து கொள்ளலாம்.

இத்தனை வருடம் லைம் லைட்டிலேயே இருந்துக் கொண்டு திடீரென்று ஒரு வீடும்,
காரும் ஷாப்பிங்கும், சமையலறை வேலைகளும் மட்டுமே தனது உலகமாய்
மாறிப்போனதனலான உளவியல் மாற்றங்களை நாயகி சரிவர புரிந்துக் கொண்டால்,
அவருடைய மண வாழ்க்கையாவது நிம்மதியாயிருக்கும். இல்லையெனில் குடும்ப நல
கோர்ட்டுகளில் ஒரு வழக்கை அதிகப்படுத்தி இன்னும் சில நாள் மீடியாக்களின்
காமெராக்களில் வலம் வரலாம். பின்பு அக்கா வேடம், சின்னத்திரை நாயகி வேடம்
என்று தனது வாழ்க்கையை ஒரு முற்றுப் பெறா பயணமாகவே முடித்துக் கொள்ளலாம்.
ஆண்டுக்கு குறைந்தது மூன்று கதா நாயகிகளாவது தற்கொலை செய்து கொள்வதன்
பின்னாலான உளவியல் மற்றும் உடல் சார் பிரச்சினைகளை ஏனோ தமிழ் சினிமா
புறக்கணித்தே வந்துக் கொண்டிருக்கிறது.

இப்பொழுதெல்லாம், “எனக்கு ரொம்பப் பிடிச்சது, என்னோட டெட்டி பியர்தான்”
என்று சிணுங்கிக் கொண்டே பேட்டி தரும் கதாநாயகிகளைப் பார்க்கையில் இரக்க
உணர்வும், பரிதாபமும் மட்டுமே மிஞ்சி நிற்கிறது.

பி.கு: சினிமா விமர்சகர்கள் குறித்தான காட்டமான பார்வைக்கு மறுமொழியாய்
ஆரம்பித்த இந்த கட்டுரை நாயகிகளின் அபலைத்தனத்தில் வந்து
முடிந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் நிரம்பி இருக்கும் அபத்தங்களின்
ஆரம்பம்தான் இது.இன்னும் இதைத்தாண்டி விமர்சகர்களின் பல்வேறு சார்பு
நிலைப்பாடு குறித்தும், பெண்கள் பிரச்சினைகளைத் தவிர்த்து, பொது
வெளியில் தமிழ் சினிமா ஏற்படுத்தி இருக்கும் வேறு சில அற்பத்தனங்கள்
குறித்தும், கலாச்சார மற்றும் பாசிச உணர்வுகள் குறித்தும் தொடர்ச்சியாய்
அடுத்த பகுதியில் பேசுவோம்.

pandii durai

unread,
Apr 9, 2008, 8:12:23 AM4/9/08
to panb...@googlegroups.com
இதற்காகவாவது தேடித்தேடி பதிவுகளை இங்கு இடத்தோன்றுகிறது நந்தா!
 
 

////////////இப்பொழுதெல்லாம், "எனக்கு ரொம்பப் பிடிச்சது, என்னோட டெட்டி பியர்தான்"

என்று சிணுங்கிக் கொண்டே பேட்டி தரும் கதாநாயகிகளைப் பார்க்கையில் இரக்க
உணர்வும், பரிதாபமும் மட்டுமே மிஞ்சி நிற்கிறது./////////
 
 
 

நந்தா

unread,
Apr 9, 2008, 9:50:26 AM4/9/08
to பண்புடன்
நன்றி பாண்டித்துரை. இதன் தொடர்ச்சியாய் நான் பேச வேண்டியவை இன்னும்
நிறைய்ய உள்ளது.

M.RISHAN SHAREEF

unread,
Apr 9, 2008, 4:53:05 PM4/9/08
to panb...@googlegroups.com
மிகவும் விரிவான கட்டுரை நந்தா.
நிறையப் பேரது ஆதங்கங்களை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
 
அண்மையில் இயக்குனர் பேரரசுவின் படங்களில் நீங்கள் குறிப்பிடும் அத்தனை மலிவான காட்சிகளையும் காணலாம்.
 
இலங்கையில் தயாரிக்கப்படும் சிங்களத்திரைப்படங்கள் வருடத்துக்கொரு முறை கேன்ஸ் திரை விருது வழங்கும் விழாக்களில் ஏதாவதொரு விருதினைப் பெற்றுவருகின்றன.
 
இந்தியத் தமிழ் சினிமாவின் கதாநாயகி பூஜா கூட சிங்களப் படவுலகில் தனக்கென்றொரு தனியிடத்தை தனது நடிப்பின் மூலம் மட்டுமே பெற்றிருக்கிறார்.10 வயதுச் சிறுவனுக்கு அம்மாவாகக் கூட நடிக்கிறார்.
தனிப்பட்ட பயணங்களை ஆட்டோவில் கூடப் போய் வருகிறார்.
 
இது தமிழ் சினிமாவில் சாத்தியமில்லை.
ஒரு நடிகையெனுமிடத்து அவரது நடிப்பு மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் அது ஆரோக்கியமான சூழல் எனக் கருதலாம்.
 
மிகக் குறைந்த செலவில் எடுக்கப்படும் சிங்களப்படங்கள் உலகசினிமா அளவில் பேசப்படுகையில், கூடிய செலவில் எடுக்கப்படும் தமிழ்சினிமாவிலும் அச்சாதனைகளைக் கொண்டு வரலாம்தானே.
நிறையத் திறமையுள்ள இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.
 
 
முதலில் கதாநாயகர்களுக்குரிய சிறப்புப் பட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும்.
கதாநாயகர்களுக்காகவென்று கதைகள் உருவாகும் நிலை நீங்க வேண்டும்.
அப்பொழுதுதான் மாற்றங்களைக் காணலாம் என்பது என் கருத்து.
 
 
 
 


 

--
http://mrishanshareef.blogspot.com/
http://rishanshareef.blogspot.com/
http://mrishansharif.blogspot.com/
http://www.mrishaanshareef.blogspot.com/
http://msmrishan.blogspot.com/
http://rishansharif.blogspot.com/
http://mrishan.blogspot.com/

karthik

unread,
Apr 10, 2008, 5:52:31 AM4/10/08
to பண்புடன்

நல்ல பதிவு நந்தா.

//சாரு, அ.ராமசாமி, எஸ்.ரா,யமுனா, ப.திருநாவுக்கரசு, விஸ்வாமித்ரன்,
தியோடார் பாஸ்கரன்,வெங்கட்சாமிநாதன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி, காஞ்சனை
சீனிவாசன், பாமரன்,பிஸ்மி,போன்ற விமர்சகர்களும், திலகவதி, செழியன்
போன்றோரின் உலக சினிமா பற்றிய நூல்களும் கொஞ்சமேனும் வாசகர்களுக்கு
போய்ச் சேர்ந்திருக்கிறது. //

செழியனின் உலக சினிமா படிக்காமல் இருந்திருந்தால் இப்படிப்பட்ட
திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பை இழந்திருப்பேன்.அவர் மட்டும் அல்ல
நமது இணையத்திலும் அய்யனார்,மோகன்தாஸ் போன்றோரின் சினிமா பற்றிய பார்வை
என்போன்றோரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துசென்றுள்ளனர்.

நந்தா உங்களின் அஞ்சாதே பற்றிய விமர்சனம் அருமையாக இருந்தது.

// ஆனால் பாடல் காட்சிகளில்லா சினிமாவை எவர் ஏற்றுக்கொள்ளக்கூடும்.
தனக்கு பிடித்த நாயகியின் பல்வேறு தாபங்களையும், கணவனின் முன் மனைவி கூட
செய்ய யோசிக்கும் உடல் அசைவுகளயும், க்ளோசப் ஷாட்டில் நாயகியின்
அங்கங்களையும், காதல் விளையாட்டுகளையும் பார்த்துகிளர்ச்சியுறும்
கூட்டமாய், ஒரு சமூகத்தையே, தமிழ் சினிமா மாற்றி வைத்திருக்கும் இந்த
சூழலில் //

இது காதல் வரும் பருவம் அப்படின்னு ஒரு படம் கஸ்தூரி ராஜா இயக்கிய
படம்.முழுக்க முழுக்க நீங்கள் கூறிய இச் சூழலில் உருவாக்கப்பட்ட
படம்.தமிழகம் முழுவதும் எந்த திரையருங்குகளிலும் 2 நாட்களுக்குமேல்
ஓடவில்லை.குமுதம் இதழில் விமர்சனம் என்று போட்டு ஒரு குப்பைக்கூடை சில
குப்பை படம் போட்டு.படத்தை குப்பை என்று விமர்சித்திருந்தார்கள்.
ஒருமுறை ஜெயா டிவி யில் வரும் கோலிவுட் கோர்ட்டு எனும் நிகழ்ச்சியில்
ஒருவர் பேசும் போது மேலை நாடுகளில் எல்லாம் ஒரு பட விமர்சனம் என்பது
குறைந்தது 40 பக்கங்களுக்கு இருக்கும் என்று கூறினார்.

// முதலில் கதாநாயகர்களுக்குரிய சிறப்புப் பட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும்.
கதாநாயகர்களுக்காகவென்று கதைகள் உருவாகும் நிலை நீங்க வேண்டும்.
அப்பொழுதுதான் மாற்றங்களைக் காணலாம் என்பது என் கருத்து.//

உண்மை ரிஷான்.

//மிகக் குறைந்த செலவில் எடுக்கப்படும் சிங்களப்படங்கள் உலகசினிமா அளவில்
பேசப்படுகையில், கூடிய செலவில் எடுக்கப்படும் தமிழ்சினிமாவிலும்
அச்சதானைகளைக் கொண்டு வரலாம்தானே. //

ஆமாம் ரிஷான் இனிமேலும் தமிழ் சினிமாவுக்கான சந்தை பற்றிய பழைய கதை பேச
முடியாது.

பருத்திவீரன்,மொழி,கற்றது தமிழ்,அஞ்சாதே........

இப்போது சில நல்ல படங்கள் வரத்தான் செய்கின்றன.

நந்தா

unread,
Apr 14, 2008, 3:48:50 AM4/14/08
to பண்புடன்
எனது முந்தைய பதிவான "தமிழ் சினிமா : விமர்சன சூழலும் நாயகிகள் எனும்
நுகர்வுப் பொருளும்" கட்டுரையின் தொடர்ச்சி....



தமிழ் சினிமாவின் பரிணாமம்: வளர்ச்சியா? வீழ்ச்சியா?
------------------------------------------------------

பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கான எதிர்வினை என்பது என்னவாய்
இருக்கக்கூடும்? கேள்விகளை கேட்பவர்களின் நடத்தையின் மீதோ, ஒழுக்கத்தின்
மீதோ ஒரு சில எதிர் கேள்விகளை எழுப்பி, எதிராளியின் அறநிலையின் மீது ஒரு
சந்தேகத்தை ஏற்படுத்துவதன் மூலம், “உன்னுடைய கேள்விக்கெல்லாம் நான் பதில்
சொல்ல வேண்டுமா?” என்று தப்பித்துக் கொள்ளல், இல்லையெனில் கேள்வியே தவறு
என்று எதிர் வினையாடல், அதுவும் இல்லையெனில், இதுதான் சமூகத்தின் வழக்கம்
இப்படி இருப்பதால்தான் சம்ச்சீர்மை இருக்கிறது என்று பொய்யாய் ஒரு
பதிலைச் சொல்லி ஒப்பேற்றுதல். பெரும்பாலான சமயங்களில் இதுவே எதிர்
வினைகளாய் இருந்திருக்கின்றன. தன்னை ஒரு முறை மீண்டும் சுய பரிசோதனை
செய்து கொள்ளும் பொருட்டு எழுப்பட்ட இந்தக் கேள்விகளுக்கான இத்தகைய எல்லா
வகை எதிர் வினைகளும் “தப்பித்துக் கொள்ளல் அல்லது நழுவுதல்” எனும் ஒரே
பிரக்ஞையின் அடிப்படையிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா இப்படி இருக்கிறதே, உலக சினிமாவின் தரத்திற்கு ஒரு சில
அடிகளைக் கூட எடுத்து வைக்காமல் இருக்கும் இந்த தருணத்தில் கூடிய
விரைவில் தமிழ் சினிமா ஆஸ்கார் அவார்டு வாங்கும் என்று திரையிலகினர் மைக்
முன்பு பேசும் சமயங்களில் நம் சுயம் மறந்து உணர்ச்சி வசப்பட்டுக்
கொண்டிருக்கின்றோமே எனும் இந்த சுய எள்ளலும், நொந்தனையும், “உலக
சினிமாவில் அப்படி இருக்கிறது”, “இந்த ஈரானியப் படம் நன்றாய் இருக்கிறது”
என்பது போன்ற எங்களது கூக்குரலும் வெகு சத்தியமாக விளிம்பு நிலை மக்களைப்
பற்றிய சுரணையே இல்லாத, ஒரு மேல் தட்டு மக்களின் “நைட் கிளப்” கலாச்சாரமே
சிறந்தது என்பது போன்ற ஒரு தட்டையான குரலோ அல்லது தமிழ்ப்படங்களைத்
தவிர்த்த பிற மொழிப்படங்களைப் பார்ப்பவன்தான் அறிவாளி எனும் ஒரு பொதுப்
புத்தியைச் சார்ந்த ஒரு சாதாரண மனப்பானமையோ இல்லை. இதை ஒரு ஆதங்கம்,
கொட்டித் தீர்த்தல், என்ற வகையிலோ, “நான் சாகறதுக்குள்ள உனக்கு ஒரு
கண்ணாலத்தைப் பண்ணி வெச்சுடணுடா” என்ற ஏழைக் கிழவனின் கடைசி கால ஆசைக்கோ
ஒப்பிடலாம்.

செனகல் என்ற ஒரு மேற்கு ஆஃப்ரிக்க நாடு அங்கிருந்து வந்த ஒரு இயக்குநர்
உலக அளவில் பேசப்படுகிறார்.பொலிவியா, வியட்நாம், போன்ற நாடுகளிலிருந்து
கூட வெகு சீரியஸான சினிமாக்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.லெபனான்,
ஆஃப்கான்,பிரேசில், தென் கொரியா, மொராக்கோ, ஹங்கேரி ஆகிய நாடுகளிலிருந்து
கூட குழந்தைகளைப் பற்றிய திரைப்படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்து
விட்டன. ஆனால் உலக சினிமாவை நோக்கி என்று ஒவ்வொரு விழாக்களிலும் பேசித்
திரியும் நாம் இன்னும் தனது அடிப்படை முயற்சிகளைக் கூட தொடங்காமல்
இருக்கின்றோம்.

தமிழ் சினிமா மட்டும் ஏன் இப்படி இருக்கின்றது. இது மட்டும் ஏன் காட்சி
ஊடகம் என்று மாறாமல், வசன ஊடகமாகவே பின் தங்கி விட்டது? 30 கோடிகளில்
படம் எடுக்க முடிந்த தமிழ் சினிமாவில் ஏன் ஒரு சீரிய படம் குறித்தான
முயற்சிகளைத் தொடங்க வில்லை? என்ற கேள்விக்கு நாம் வெகு எளிதில் பதில்
அளித்து விட முடியாது. அதற்கு தமிழ் சினிமாவைப் பற்றிய ஒரு முழுப்பார்வை
தேவை. அப்போதுதான் அது எப்படி மக்களுடன் பிணைந்திருக்கிறது என்ற உண்மை
புலப்படும்.

தமிழ் சினிமாவின் மூலம் நாடகங்களிலிருந்தே பெறப்பட்டிருக்கிறது. இதன்
தொடக்கப்புள்ளியாக, 1870 களில் ஆரம்பித்த கம்பெனி நாடகங்களை நாம் சொல்லி
விடலாம். அந்த ஆண்டுகளில் தொடங்கப்பட்ட இந்த கம்பெனி நாடகங்கள்
புராணக்கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. இசைக்கும், பாட்டுக்கும் வெகுவாய்
முக்கியத்துவம் கொடுத்து, பெரும்பாலான காட்சிகளை பாடல்களின் வழியாக
விவரிக்கப் பெற்றவை. இங்கே விவரிக்கப் பெற்றவை என்ற வார்த்தை மிக
முக்கியமான ஒன்று. 1900மாம் வருடங்களுக்குப் பிறகு எல்லா முக்கிய
நகரங்களிலும் திரையரங்குகள் நிறுவப்பட்டன. முதன்முதலில் 1916 ஆம் வருடம்
“கீசக வதம்” என்ற படம் நடராஜ முதலியாரால் தயாரிக்கப்பட்டது. இதுவே முதல்
தென்னிந்தியத் திரைப்படம் என்று சொல்லலாம். இவை தமிழ், தெலுங்கு என்று
பிராந்திய மொழிகளிலான் விவர அட்டைகளுடன் வினியோகம் செய்யப்பட்டு வந்தன.
இவையனைத்தும் மௌனப் படங்களே. இது போன்ற படங்களில் பெரும்பாலானவை மேல்
நாட்டுத் திரைப்படங்களே.இது போன்ற மௌனப் படங்கள் ஏறக்குறை பதினைந்து
ஆண்டுகள் (1916-1931) தென்னிந்தியா முழுதும் வலம் வந்தன.

இந்தியச் சினிமா வரலாற்றில் முக்கிய மைல்கல்லான இந்த நிகழ்வு
தென்னிந்தியாவில் நடந்த போது,இங்கு சூழ்நிலைகள் எப்படி இருந்தன?
பெரும்பாலும் மேல் தட்டு மக்களின் பேச்சையே ஒட்டு மொத்த சமூகத்தின்
பேச்சாக பிரதிபலித்து வந்த அந்த காலகட்டத்தில் இந்த நிகழ்வுகளுக்கு
உண்மையில் வெகுவான எதிர்ப்பு எழுந்தது. அந்த காலகட்டத்து
தமிழ்ச்சமுதாயத்தினிடையே, கர்நாடக இசை, பரத நாட்டியம், கதா காலட்சேபம்
போன்ற பாரம்பரியக்கலைகளே கோலோய்ச்சி வந்துக் கொண்டிருந்த அந்தத்
தருணங்களில், முற்றிலும் புதியதோர் கலை வடிவமாக, தொழில் நுட்பத்தால்
உருவான கேளிக்கை வடிவமாய், உள் நுழைந்த சினிமாவை, மேல்தட்டு வர்க்கமும்,
நடுத்தட்டு வர்க்கமும், எழுத்தாளர்களும் சுத்தமாய் வரவேற்க
வில்லை.அன்றிருந்த படித்தவர்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் நோக்கு இதை
முற்றிலும் விரோதமாகவே பார்த்தது.

இது முற்றிலும் கீழ்க்கலாச்சாரத்தின் வெளிப்பாடு என்றே கருதினார்கள்.
சமூகவியல் ரீதியிலும், சாதிய ரீதியிலும் பல அடுக்குகளாய் அமைந்திருந்த
நம் சமூக அமைப்பில் ஒவ்வொரு தளத்திற்கென்று பிரத்யேகமாய் சில கேளிக்கைச்
சாதனங்கள் இருந்தன. கீழ்த்தட்டு மக்களின் கலையமைப்பை மேல்தட்டு மக்கள்
விரும்ப மாட்டார்கள். ஆனால் சலனப்படங்கள் எல்லா தட்டுக்களும்,
பாகுபாடின்றிப் பார்க்கக் கூடிய, வெகு ஜன கலையாக பரிணமித்தது. இது படித்த
கூட்டத்திற்கும், மேல்தட்டு மக்களிற்கும் சகிக்க முடியாத ஒன்றாய்
இருந்தது. கூலிக்காரனின் கேளிக்கைச் சாதனத்தை நாம் புகழ்ந்து
ஊக்குவிப்பதா என்ற மனோபாவம் வளர்ந்தது. சினிமா ஒரு வர்க்க பேதமற்ற
கலையமைப்பாய் உருவெடுக்க இந்தத் தருணத்தில், அறிவு ஜீவிகளின் இது போன்ற
விரோதப் போக்கு இங்கென்றில்லை. எல்லா இடங்களிலும் நடந்திருக்கிறது.
பெர்னாட்ஷா போன்ற அறிஞர்கள் உட்பட பல்ர் சினிமாவை இகழவேச் செய்தனர்.

அன்றைய சென்னையின் அறிவு ஜீவிகள், சினிமாவின் பக்கமே போகாமல், தனிப்பட்ட,
உயரதிகாரிகளடங்கிய, சுகுண விலாச சபா, இம்மானுவேல் கிளப் போன்ற நாடகக்
குழுக்களில் அங்கம் வகித்து, ஷேக்ஸ்பியர், மோலியர் ஆகியோரின் நாடகங்களை
நடத்தி, சினிமா பார்க்கும் பாமரர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்
காட்டித் திருப்தியடைந்தார்கள்.அன்றைய பத்திரிக்கைகளும் இந்த
நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்தார்களேயொழிய, சலனப்படங்களை
துளியளாவும் மதிக்க வில்லை. சிந்தாமணி, ஆனந்த விகடன், இந்து, மெட்ராஸ்
மெயில் போன்ற இவை யாவும் உதாசீனப் படுத்தியதற்கு ஒன்றும் பெரிய காரணம்
இல்லை. இவை யாவும் மேல் தட்டு மக்களால் நடத்தப்படுபவை என்பதே.

திரையரங்குகள் ஒரு ஜனநாயகப் பொது இடமாக பரிணமித்ததை இவர்களால் ஏற்றுக்
கொள்ள முடிய வில்லை.அன்றைய எழுத்தாளர்களும் இதையே பிரதிபலித்தனர். இது
அவர்களது படைப்புகளிலும் வெளிப்பட்டது. ஒரு பக்கம் சினிமா பார்ப்போரின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போக, இன்னொரு புறம் சினிமாவைப் பற்றி எழுத
ஆட்களே இல்லாமல் போய்க் கொண்டிருந்தனர். இதனாலேயே அறிவார்ந்த ரசனை
உருவாகாமல், புலனார்ந்த ரசனையே வளர்ந்தது. சினிமா குறித்தான நல்ல
விமர்சகர்கள் வெகு குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதென்பது அன்றிலிருந்து
இன்றுவரை இன்னும் தொடர்ந்துக் கொண்டிருப்பது ஒரு மிகப் பெரும்
கொடுமைதான்.

இசை, நாட்டியம் போன்ற பல நுண்களைகளைப் பற்றிப் புகழ்ந்துக் கொண்டிருந்த
கூட்டம், இந்த கலையை மட்டும் வெகு மட்டமான ஒன்றாகவே பார்த்த்தது. ஆனால்
இதே தருணத்தில் மேலை நாடுகளில் இந்த கால கட்டங்களில் (1930)
எழுத்தாளார்களுக்கும், சினிமாவிற்குமிடையேயான உறவு வெகு நேர்த்தியாய்
இருந்தது. இது அக்கலையின் வளார்ச்சிக்கு மிக உதவியாய் இருந்தது.

காளிதாஸ் எனும் முதல் தமிழ் பேசும் சினிமா வந்த 1931 க்குப் பிறகே
பத்திரிக்கைகளில் சினிமாக்கள் வர ஆரம்பித்தன. ஆனால் அவையும்,.
சினிமாவிற்கு எதிரான தொனியிலேயே அமைந்திருந்தன. இருப்பினும், ஒதுக்கி
வைப்பதன் மூலம் அழித்து விட முடியும் என்று அவர்கள் நினைத்த ஒரு
கலையானது, எதிர்ப்பிரச்சாரத்தின் மூலமே இது சாத்தியம் என்ற நிலைக்கு
அவர்களை தள்ளியதிலிருந்தே, இதன் மறைமுக வெற்றியை நாம் புரிந்துக்
கொள்ளலாம். 1935ல் வெளி வந்த கே.பி.சுந்தராம்பாள் எனும் படத்தை விமர்சனம்
செய்த கல்கி அவர்கள் “இந்தப் படத்தில் பனை மரமும், எருமை மாடும் நன்றாக
நடித்திருக்கின்றன” என்று விமர்சனம் எழுதி இருந்தார். “தமிழ்
டாக்கீஸ்களைப் பற்றி எழுதுவதென்றால் கசப்பான மருந்தைச் சாப்பிடுவது
போன்று இருக்கிறது” சில்வர் ஸ்க்ரீன் பத்திரிக்கையில் சிட்டி எழுதி
இருந்தார்.

மேல் தட்டு மக்களின் மனதை மாற்றும் படியான சினிமாவின் பெரும் நிகழ்வு
என்று சொல்ல வேண்டுமானால், அது மேல் தட்டு கலையமைப்பாகிய, சாஸ்திரிய
இசைக் கலைஞர்களின் வரவே என்று சொல்லலாம்.பாபநாசம் சிவன், எம்.எஸ்.எஸ்,
தண்டபானி தேசிகர், ராஜரத்தினம் பிள்ளை, முசிரி சுப்பிரமணிய அய்யர்,
மகாரஜபுரம் விஸ்வநாத அய்யர் என்று பலர் சினிமா உலகிற்குள் அடியெடுத்து
வைத்தனர்.சினிமாவை பற்றி அவர்கள் எழுத விரும்பா விட்டாலும், அவர்களுக்கு
பிடித்த கர்நாடக இசை சினிமாவில் இடம் பெற்றிருந்ததால், அதைப் பற்றி எழுத
வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் சுதந்திரப் போராடம் உச்ச கட்டத்தைத்
தொட்டிருந்த 1936 காலகட்டங்களில், சினிமாவில் காந்தியக்கருத்துக்கள்
பிரதிபலிக்க ஆரம்பித்தன. கம்பெனி நாடகங்களின் மூலம் நடந்துக் கொண்டிருந்த
இந்த தேசிய வகைப் பிரச்சாரங்கள் சினிமாக்களிலும் பிரதிபலித்தன.
திரைப்படப் பாடல்கள் விடுதலை வேட்கையை ஊட்டக் கூடியவையாய் எழுதப் பட்டன.
கல்கி, மணிக்கொடி இதழ் எழுத்தாளர்கள் உட்பட பலர் இதன் மூலம் சினிமாவைப்
பர்றி பேச ஆரம்பித்தனர். சொல்லப் போனால் பேச வேண்டிய
கட்டாயத்திற்குள்ளானார்கள்.

இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று இப்படி சினிமாவைத் தொடர்ச்சியாக விமர்சனம்
செய்ய ஆரம்பித்தவர்கள் சினிமாவைப் பற்றிய தொழில் நுட்ப அறிவுடன் கூடிய,
சினிமா விமர்சகர்கள் அல்ல. இவர்கள் எழுத்தாளார்கள் மட்டுமே. இதனால்
இவர்களும் இலக்கிய ரீதியாகவே சினிமாவை அணுகினார்கள். திரைப்படங்கள்
கட்புல ஊடகமாய் மதிப்பிடப் படாமல், அதன் உள்ளடக்கமாகிய, கதை, வசனம்,
பாட்டு என்று இலக்கிய ரீதியிலேயே மதிப்பிடப்பட்டது. இந்தப் பாசாங்கு
இன்று வரை நடந்துக் கொண்டிருக்கிறது. சினிமா என்பது வசனங்களாலான ஒரு
வடிவம் என்பது திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் 1947
காலகட்டத்திற்குப் பிறகு வலுவாக நிலை நிறுத்தப்பட்டது. நல்லத்தம்பி,
மனோகரா, பராசக்தி போன்ற படங்களில் ஆரம்பித்த இந்த மாயை அதன் பின்பு
வந்தவர்கள் வேறெந்த முயற்சியும் முன்னெடுக்காத நிலையில் ஏறக்குறைய இன்று
வரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

நாடகத்துறையிலிருந்து சினிமாவிற்கு பல்வேறு காலகட்டங்களில் வந்த பலர்
சினிமாவை நாடகத்தின் ஒரு நீட்சியாய்தான் பார்த்தார்களேயொழிய, இது ஒரு
காட்சி ஊடகம் என்பதையோ, இதன் கட்புலன்களையோ ஆராய தலைப்பட வில்லை.
எஸ்.வி.சேகர், விசு, கிரேஸி மோகன், போன்ற பிற்காலத்தினரும் இதே
வகையினர்தான். இதன் காரணமாகவே சினிமா கதை வசனங்கள் ஒலி நாடாக்களாக
தமிழகம் முழுதும் விற்பனையாகிக் கொண்டிருந்தது. கண்களால் பார்த்து உணர
வேண்டிய கலையமைப்பு, காதுகளால் உணரப்பட வேண்டிய ஓர் ஊடகமாய் யாரும்
திட்டமிட்டுச் செயல்படாமலேயே மாறிப் போயிற்று. இதற்கு சரியான
விமர்சகர்கள் இல்லாததும் ஓர் காரணமே. சினிமாத்துறை குறித்த சரியான
சொல்லாடல்கள் உருவாகாமல் இருந்ததும் இதன் காரணமாக என்றுச் சொல்லலாம்.

குரிப்பிட்டுச் சொல்லும்படியான சில விமர்சகர்கள் மட்டும் தனது முயற்சிகளை
தன்னால் இயன்ற அளவு செய்து கொண்டிருந்தனர். அறந்தை நாராயணன் போன்றொரை
இந்த வரிசையில் சேர்க்கலாம். 1967ல் பிப்ரவரி மாத எழுத்து இதழில் “நிழல்
கலை” என்ற கட்டுரையில் எழுதிய தர்ம அரூப் சிவராமு, “ரத்னதீபம் மில்
ஜமீந்தாரின் பிணத்தை எரித்து விட்டு, தானே ஜமீந்தாராக நடிக்க யோசிக்கும்
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் எதிரிடை (சரியா? தவறா?) மன ஓட்டங்கள் சிறப்பான
முறையில் படமாக்கப் பட்டிருக்கிறது. ஃபிளாட்பாரத்தில் பாத்திரம்
நிற்கிறது. ஒரு இரயில் எதிரே இரவூடே ஓடுகிறது. அதன் ஜன்னல்களூடே பாயும்,
ஒளியும், ஜன்னல் சட்டத்தின் இருளும், மாறி மாறி பாத்திரத்தின் முகத்தில்
வீழ்கிறது. இது போன்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் வெகு அரிதாகவே இடம்
பெறுகின்றன.” என்று எழுதி இருந்தார். இது போன்ற சிறந்த விமர்சனங்கள்
மட்டும் தொடர்ந்து எழுதப் பட்டு வந்திருக்குமானால், தமிழ் சினிமா இன்று
தடம் மாறிப் போயிருந்திருக்கும். முக்கியமாய் அதன் ரசிகர்களும்,
கதாநாயகிகளும் சாப விமோச்சனம் பெற்றிருப்பார்கள்.

ஆக தமிழ் சினிமாவின் இன்றைய நிலை என்பது ஏதோ ஒரு 10 வருடங்களில் நடந்த
மாற்றமோ, அல்லது வெகு சிலரால் திட்டமிட்டு ஏற்படுத்திய சிதைவுகளோ இல்லை.
இது ஒரு பரிணாம வளர்ச்சி. ஒட்டு மொத்தமாய், மெது மெதுவாய் தன் மாற்றம்
அடைந்திருக்க வேண்டிய ஓர் கலையமைப்பு, இங்கு மட்டும் இன்னும் ஆரம்பப்
புள்ளிகளிலேயே அமர்ந்துக் கொண்டிருக்கிறது. இங்கே பொதுவாய் இரண்டு விதமான
கூட்டம் இருக்கிறது. ஒரு பக்கம் தன் சினிமா கதாநாயகர்களை தங்கள்
தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் வரித்துக் கட்டிக் கொண்டு, “தலைவா”
என்று உன்மத்தம் கொண்டுத் திரியும் கூட்டம். இவர்களைப் பொறுத்தவரை சினிமா
என்பது ஓர் இச்சைப் பொருள். தன் கதாநாயகர்களை எதிர்த்துப்
பேசுபவர்களையும், சினிமாவின் மீது தீவிர விமர்சனம் வைப்பவர்களையும்
விரோதிகளாய்ப் பார்க்கும் கூட்டம் இது. இன்னொரு பக்கம் சினிமா என்றாலே
அறுவறுப்பான ஒன்றாய், நினைத்துத் திரியும் அறிவு ஜீவிக் கூட்டம்.
இவர்களைப் பொறுத்தவரை சினிமாவும் சரி, சினிமாவைப் பற்றி பேசுபவர்களும்
சரி, சாதாரணப் பிறவிகள். பரிதாபத்திற்குரியவர்கள். இப்படி இரு பெரும்
கூட்டத்திற்கு நடுவே இருந்துக் கொண்டுதான் தமிழ் சினிமாவை பற்றியும் அதன்
பரிமாணங்களைப் பற்றியும் நாம் பேச வேண்டியதாயிருக்கிறது.

தமிழ் சினிமாவை மாற்ற வேண்டும் என்பது, வெறுமனே திரைப்படங்கள் என்ற ஒற்றை
வார்த்தையில் முடிந்து விடாது. இது திரைப்படங்கள், ரசிகர்களின் ரசனைத்
தனமையை வளார்த்தெடுக்கும் பொறுப்பு, இதில் மலிந்திருக்கும் அபத்தங்களை
களையெடுத்தல் என்று பல்வேறு கூறுகளை முன் வைக்கிறது.

ஆனந்த விகடனையும், மதன்’ஸ் திரைப் பார்வையையும் தாண்டி இங்கே ஒரு
விமர்சனக் கூட்டம் இருக்கின்றது. அப்படிப்பட்ட தீவிர விமர்சகர்கள் என்று
சொல்லிக் கொள்ளப்படுபவர்கள், மற்றும் சொல்லிக் கொள்பவர்கள் யார் யார்?
இவர்களின் அரசியல் சார்பு எத்தகையது? இவர்களின் விமர்சனங்களும் எப்படி
மற்ற வெகு ஜன ஊடகங்களிலிருந்து வேறுபடுகின்றன? இவர்கள் எப்போதும் நடு
நிலைத் தன்மையுடன் தான் விமர்சனம் செய்கின்றார்களா? இவர்களது
விமர்சனங்களில் அபத்தங்களே இல்லையா? யமுனா ராஜேந்திரன் சுட்டிக் காட்டும்
தவறுகள் எந்தளவுக்கு உண்மையானவை? இவை அந்தளவுக்கு கவனிக்கப் பட வேண்டிய
ஒன்றா? போன்ற விஷயங்களைப் பற்றியும், குறிப்பாய் பல்வேறு விமர்சகர்கள்
பற்றியும் இதன் அடுத்த பகுதியில் நாம் உரையாடுவோம்.
Reply all
Reply to author
Forward
0 new messages