மஹாபாரதத்தில் வரும் ஒரே தமிழ்ப் பெயர் மணலூர். வடமொழியும் தென்மொழியும் திகழ்ந்த நாவர்கள் வாழ்ந்த இடம். வித்தைக்கு விளைநிலம் எனத்தக்க மணலூரில் நம்காலத்துப் பகீரதர் ஒருவர் பிறந்தார். பெரியோரின் சரிதங்களையே ஊன்றிப் படித்தார். தாமும் வாழ்வில் செயற்கரிய செய்ய வேண்டும் என்று அவாவினார். 1905ஆம் ஆண்டுக்குமுன் ஓரிரு வருஷங்கள். கும்பகோணத்தில் நேடிவ் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராய் இருந்த பொழுது திரு உ வே சாமிநாதய்யருடன் பேசும்பொழுதெல்லாம் ஐயர், 'ஸ்ரீவில்லிப்புத்தூரார் பாரதம் முழுமையுமே மொழிபெயர்க்காமல் போனாரே' என்று வருந்துவதை கவனித்திருக்கிறார். ஏன் அந்த மஹாபாரதம் தமிழில் வரவில்லை? நீண்ட தமிழ்ப் பாரம்பரியத்தில் ஏன் எந்தப் புலவரும், புரவலரும் அதற்கு முயலவில்லை? தமிழ் மக்கள் பாரதம் முழுமையும் வியாசரின் எழுத்து ஒன்றுவிடாமல் தமிழில் படிக்கமுடிந்தால் எத்துணை நன்றாக இருக்கும்! என்றெல்லாம் எண்ணிய நம் பகீரதர் யார் தெரியுமா? மணலூர் வீரவல்லி ராமானுஜாசாரியார். 1905ஆம் ஆண்டு முடிவெடுத்துவிட்டார். பாரத கங்கையை தமிழில் பாயச் செய்வதற்கு. முதலில் அவர் அபிப்பிராயம் கேட்டது உ வே சா அவர்களிடம், ஐயரிடமிருந்து உற்சாகமும் ஊக்குவித்தலும் 25ரூ பணமும் உடனே வந்து சேர்ந்தது. அபிப்பிராயம் கேட்டால் அங்குரார்ப்பணமே செய்துவைத்து விட்டார் ஐயர். 'இதனினும் மிக்க தமிழ்ப் பணி கிடையாது தொடங்குக' என்ற ஐயரின் அன்புக்குக் கட்டுப் பட்டார் ம வீ ரா.
ஆனால் அன்று தொடங்கி 1932ஆம் ஆண்டு மஹாபாரதம் தமிழ் மொழிபெயர்ப்பு பூர்த்தியான 27 ஆண்டுகள், அல்லது 324 மாதங்கள் அப்பப்பா என்ன இன்னல்கள் இடையூறுகள் எதிர்பாரா உதவிகள் எதிர்நோக்கா ஏமாற்றங்கள் ஊக்கச் சொல் பழிச்சொல் ஏளனச் சொல் உத்தரவாதம் திட்டு. அந்தக் கதையே ஒரு பெரும் பாரதம். அந்தக் காலத்திலேயே ரூ1 45 000 கடன் அதற்கு பெருகிக்கொண்டே போகும் வட்டி. கைப்பணம், சொத்து, இதர வருமானங்கள் எல்லாவற்றையும் விழுங்கியவாறு அமைதியாக கஷ்டத்தைச் சகித்துக்கொண்டு ஒரு சிறு அய்யங்கார் குடும்பம். இவருக்கு இருந்த ஒரே சொத்து சிறிதும் முகம் கோணாத இவர் மனைவி, வெறுக்காத மகன். பாரதம் முடியும் தருவாயில் சென்னையில் செலவு தாங்க முடியவில்லை என்ற காரணத்தால் தம் சொந்த ஊரான மணலூர் சென்றுவிட்ட தந்தையைத் தொடர்ந்து அவருக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்தில் தனது லாங்க்மன்ஸ் கீரீன்ஸ் வேலையை ராஜீனாமா செய்துவிட்டுச் சென்ற மகன்.
புத்தக வேலை தொடங்கி உற்றார் சுற்றார் பலரின் கனிவான வேண்டுகோள் பட்ட நஷ்டம் இதோடு போதும் என்றுவிட்டுவிடு என்பதுதான். அல்லாடும் மனத்துக்கு இதமாக வலங்கைமான் ஜோஸ்யர் கோவிந்தச் செட்டியிடம் ஆருடம் கேட்டார் ம வீ ரா. எழுதித் தந்த ஆரூடத்தை எவருக்கும் காட்டாமல் 22 வருடம் மறைத்துவைத்து மஹாபாரதம் முடிந்த அன்று 24-12-1931 வியாழன் மாலை ப்ரொபசர் ஸுந்தர்ராம ஐயர், அட்வகேட் எம் கே வைத்யநாத ஐயர் ஸ்ரீமான் குப்புசாமி ஐயர் ஆகியோர் முன்னிலையில் அரக்கி இட்டு மூடிய அந்த ஆருடக் கவரைப் பிரித்துக் காண்பித்தார் மணலூர் வீரவல்லி ராமானுஜாசாரியார். ஆரூடம் கூறியது: 'பாரதம் தமிழ்செய்யக் கேட்கிறது. வருஷம் மூணு செல்லு. இதில் கவலை அதிகம். முடிவாகிற முன்னிட்டு விஷ்ணு தரிசனம் கிடைத்து. அதிலிருந்து சிலது பாக்கி நின்றுவிடும்..' யாருக்குமே பொய்க்காத ஆரூடம் எழுதுபவர் என்று பெயர் வாங்கிய ஜோச்யருடைய ஆரூடத்தைப் பொய்யாக்கினார் அய்யங்கார். பாதியில் நின்றுவிடும் என்ற ஊழையும் உப்பக்கம் கண்டார் உலைவின்றி தாழாது உழைத்த ம வீ ரா.
அந்த மஹாபாரதம் 1948க்குப் பின் கிடைப்பது அரிதாகிப் போனது. இப்பொழுதோ அப்படி ஒன்று வந்தது என்பதைப் பற்றியே சொல்வாரும் இலர். பதிப்புலகின், மொழிபெயர்ப்பு சகாப்தத்தின் பெரும் சாதனையை மூடிய படியே காலமும் தமிழ் மக்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே ஓடியது. ஆனாலும் பகீரத அடிவாழை ஓய்ந்துவிடுமா என்ன? 1950களில் M V ராமானுஜாசாரியாரிடம்(ம வீ ரா) பதிப்புரிமை பெற்ற சிவராமகிருஷ்ணய்யரின் பேரன் S வெங்கட்ரமணன் எங்கிருந்தோ ஓர் ஆவேசம் கொண்டார். அரைநூற்றாண்டுக்கும் மேல் அருமையாகிப் போன மஹாபாரதத்தை தமிழுலகிற்கு மறுபதிப்பாக்கித் தந்தே தீருவது என்று பகீரத பிரயத்தினம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரையில் எவ்வளவு முடித்திருப்பார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?
18 பர்வங்களில் 11 பர்வங்கள் வரை ஆறு வால்யூம்களாக என் கையில் தவழக் கொடுத்துவிட்டார். இன்றுதான் அவரிடமிருந்து ஒரு போன்கால் வந்தது. 'சார் !!! 7வது வால்யூமும் ரெடி. நாளைக்குக் கொண்டுவந்து தருகிறேன். வீட்டில் இருப்பீங்களா?' என்ன கேள்வி ஐயா இது? போன் வந்ததிலிருந்து எனக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. தூக்கம் போயே போய்விட்டது!! 'உங்களால் எனக்கு மிகவும் உபயோகம் சார். நான் மறக்கவே முடியாது' என்று அவர் கூறும் போது எனக்குப் பெரும் சிரிப்புதான் வருகிறது. நான் சொல்லவேண்டிய வசனத்தை அவர் அல்லவா சொல்கிறார். வரட்டும் அந்த வெங்கட்ரமணன். நடமாடும் பகீரதன் என்று பெயர் வைத்துவிட வேண்டியதுதான்.
என்ன நீங்களும் உதவ வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஆளுக்கு ஒரு ஸெட் பாரதம் வாங்க வேண்டியதுதான். வாங்குவதற்கு மற்றவர்களையும் தூண்டி வாங்க வைக்கவேண்டும். அந்த இளைஞர் தாம் செய்த அசகாய சூரத்தனத்தில் அமுங்கி கஷ்டப் படாமல் இருக்கச் செய்ய முந்தவேண்டிய கடமை தமிழ் நெஞ்சங்கள் ஒவ்வொன்றுக்கும் உண்டு. அவருடைய முகவரி S VENKATRAMANAN SHRI CHAKRA PUBLICATIONS, DOOR NO 14, VALMIKI STREET PLOT NO 78 SELVARAJ NAGAR EXT 2 URAPPAKKAM 603202 PHONE: 044-27466110. கழிவு சதவிகிதம் வேண்டும் என்று நினைப்பவர்கள் என் பெயரையும் இந்த மின்தமிழ் இடுகையையும் குறிப்பிடலாம்.
அருமையான பதிவு!
On Oct 11, 6:04 am, "srirangammohanarangan v" <ranganvm...@gmail.com>
wrote:
> மஹாபாரதத்தில் வரும் ஒரே தமிழ்ப் பெயர் மணலூர். வடமொழியும்
> தென்மொழியும் திகழ்ந்த நாவர்கள் வாழ்ந்த இடம். வித்தைக்கு விளைநிலம்
> எனத்தக்க மணலூரில் நம்காலத்துப் பகீரதர் ஒருவர் பிறந்தார்.
>
இது எந்த மணலூர்? மதுரைக்குப் பக்கத்தில் உள்ள ஊரா? (எங்கள் ஊர் பக்கம்
என்று பெருமைப் படலாம் அல்லவா? :-)
> என்ன நீங்களும் உதவ வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறீர்களா?
> நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஆளுக்கு ஒரு ஸெட் பாரதம் வாங்க
> வேண்டியதுதான். வாங்குவதற்கு மற்றவர்களையும் தூண்டி வாங்க
> வைக்கவேண்டும். அந்த இளைஞர் தாம் செய்த அசகாய சூரத்தனத்தில் அமுங்கி
> கஷ்டப் படாமல் இருக்கச் செய்ய முந்தவேண்டிய கடமை தமிழ் நெஞ்சங்கள்
> ஒவ்வொன்றுக்கும் உண்டு. அவருடைய முகவரி S VENKATRAMANAN SHRI CHAKRA
> PUBLICATIONS, DOOR NO 14, VALMIKI STREET PLOT NO 78 SELVARAJ
> NAGAR EXT 2 URAPPAKKAM 603202 PHONE: 044-27466110. கழிவு
> சதவிகிதம் வேண்டும் என்று நினைப்பவர்கள் என் பெயரையும் இந்த மின்தமிழ்
> இடுகையையும் குறிப்பிடலாம்.
தமிழ்ன் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம். சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை. ஒரு காலத்தில் சிவன்
கோயிலில்தான் பாரதம் வாசிக்கப்படும்.
பாரதம் ஆங்கிலத்தில் வந்துவிட்டதா? மொழிபெயர்ப்பவர் கோடி கோடியாக
சம்பாதிப்பர்! இதுதான் நிலமை.
இப்புத்தகத்தை தமிழக அரசு ஏன் இன்னும் அரசுடமை ஆக்கவில்லை?
தமிழ்ப் பண்பாடு என்பது இன்னும் தனியார் கவனத்தாலேயே புணரமைக்கப்படுகிறது
என்பது எவ்வளவு உண்மை. இன்று அருட்செல்வர் இல்லையெனில் வள்ளலாரை யார்
கண்டு கொள்வார்!?
அலோ!