--------------
கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !
by சித்தர் பாடல்கள் on Tuesday, June 29, 2010 at 10:41am
இப்படி ஒரு கருத்து.. read on...
இது மாணிக்கவாசகரின் சிவ புராணத்தில் வரும் இன்னொரு புகழ் பெற்ற
வரியாகும் .
இதற்க்கு திருப்பெருந்துறையிலே மாணிக்க வாசகரை ஆட்கொண்டு அருளிய
குருமணியான தெய்வத்திற்கு இந்த வரிகள் அஞ்சலி செய்வதாக பொருள் கூறப்
பட்டருக்கிறது .கோ கழி என்பது திருப்பெருந்துறைக்கு வேறு ஒரு பெயராகும்
நம் நாடு சித்தர்களுக்கு பெயர் போனது .
சித்து என்பதுதான் சிந்து என ஆகி பின் இந்து ஆகி இந்தியா அந்து என்று கூட
ஒரு
சொல் உண்டு .
இந்த சித்தர்கள் மனிதனின் முதுகு தண்டின் ஆற்றலை நன்கு உணர்த்திருந்தனர்
எனவே சிவபுராணம் வரிகளை சித்தர் நோக்கில் பொருள் கூறும் சித்தர் வழி
அறிஞர்கள் அதற்க்கு வேறு ஒரு ஆழ்ந்த போருளைத்தருகிறார்கள் ..
சித்தர் முறையில் திருப்பெருந்துறை என்பது ஆயிரம் இதழ்கள் கொண்ட
தாமரையான சகஸ்ராரம் என உட்ப்பொருள் கூறப் படுகிறது .
அதற்கொப்ப கோ கழி என்பதற்கு முதுகுத்தண்டு என பொருள் கூறுகிறார்கள் .
குண்டலினி எனும் ஞான ஆற்றலை ,கிழ் இருந்து மேலே கொண்டு செல்லும்
முறையான ஞானப் பயிற்சிக்கு உறுதுணையாக இருப்பது vertibral column எனும்
முதுகு எலும்பே ஆகும் .
தேகத்தின் அரசன் ஆன்மா . எல்லா ஆன்மா வுக்கும் தலைவன் இறைவன்
கோ --அரசன் , கழி ---கோல் குருமணி ---ஒளிபடைத்தவன்
எனவே கோல் எனப் படுவது மூலாதாரத்தையும் ,சகஸ்ராரத்தையும் ,
இணைத்து நிற்கும் முதுகு தண்டாக கொள்ளப் படுகிறது .
இந்தத்தண்டை ஞான வழியில் ஆள்வதே குண்டலினிய ஞானப் பயிற்சியாகும்
இதனை நூல்களின் வாயிலாக பெற முடியாது .
தகுந்த ஞான குரு தந்து தான் பெறவேண்டும் .குரு தரும் அனுபவ முறை இந்த
ஞானம் குரு தனது கரங்களால் சீடனின் மேனியில் கிழ் இருந்து தடவி இந்த
ஆற்றலை மேலே கொண்டு வரவேண்டும் இதுவே இந்த கோகழியை ஆளும் முறையாகும் .
இதனை கற்ப்பிக்கும் ஆசானே ஞான குரு அவரே குரு மணி !
இந்த தண்டில் இடகலை பிங்கலை சுழு முனை என மூன்று நாடிகள் இருக்கின்றன .
மனிதன் அஞனியாக இருக்கும் போது,அறியாமையில் இருக்கும் போது இடகலை பிங்கலை
எனும் இரு நாடியில் உயிரின் சக்தி நடை பெறுகிறது .
அவனுக்கு ஞானம் வாய்க்கும் போது இந்த இரு நாடிகளின் தன்மை மாறி ,
சுழு முனை நாடி பிரகாசம் அடைகிறது .
அப்போது தான் அந்த நாடி திறக்கிறது , பாதையும் திறக்கப் படுகிறது
அந்த சுழு முனை நாடியின் கிழே மூலாதாரத்தில் இருக்கும் ஈசரை மாணிக்க
வாசகர் ஆருரன் என்கிறார் .
திருமூலர் அதோ முக தரிசனம் என்கிறார் .
மூலாதாரத்தில் இருக்கும் ஆரூரில் இருந்து திருப்பெருந்துறைக்கு அதாவது
ஸகஸராரம் செல்லும் பாதைதான் கோகழி .
இந்த அக உடலின் ஞானப் பயணத்தை தரும் குருவே குருமணியாகிய இறைவன் ..
இந்த முதுகு தண்டிக்கு வீணாதண்டம் எனவும் பெயர் உண்டு
இதன் பெருமையை திரு மூலர் "கோணா மனத்தை குறிக்கொண்டு கிழ்க்கட்டி
வீணாத தண்டுலே வென்யுரத்தான் நோக்கி ..".
என்கிறார் இந்த முதுகுத்தண்டில் 33
எலும்புகள் சங்கிலே போல் வளையங்களாக இருக்கிறது .இதுவே நம்மை நிமிர்ந்து
நிற்க செய்கிறது .
இந்த தண்டை மனதில் கொண்டே பண்டைத் தமிழர்கள் யாழ் எனும் இசைக் கருவியை
அமைத்தனர் . அந்த அளவிற்கு முதுகு எலும்பின் வடிவம் அவர்களுக்கு
பரிச்சயம் ஆகி இருந்தது . ததிசி என்ற முனிவர் இந்திரனுக்கு வஜ்ராயுதமாக
தனது முதுகு எலும்பை
தந்ததாக புராண கதை இருந்தது .
அது 2000 ஆண்டுகளுக்கு முன்னே தமிழர் மத்தியில் பிரபலமான கதையாக
இருந்திருக்கிறது .
எனவே தான் திருவள்ளுவர் தனது குறளில் "என்பும் உறியர் பிறர்க்கு " எனக்
குறிப்பிட்கிறார் .
மேலும் இந்த 33 என்ற எண்களும் பண்டைய நாளில் குறிப்பிடத்தக்க வழியில்
புகழ் பெற்றிருந்தது . மனித உடல்லே அதன் அமைப்பே ஆலயமாக ,பண்டைய நாளில்
இருந்தது என்பதற்கு ஆதாரமாக ஆலயங்களின் கொடி மரத்தின் 33 வலயங்கள்
அமைக்கப் பட்டன .கழுத்தில் அணியும் அக்க மாலை 33 எண்.
தேவர்கள் எண்ணிக்கை 33 கோடி. எனவே கோகழி பயன்படுத்தும் யோக முறை
பண்டைய நாளில் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்திருக்கலாம் .
ஆலயங்கள் யோக முறை பயிலும் இடங்களாகவே ஆதியில் இருந்துள்ளன .
கோயிலில் வழிபாட்டிற்கு பிறகு உடனே போய் விடக் கூடாது ,சிறிது
உட்கார்ந்து தான்
போகவேண்டும் என நாம் இப்போது உடகார்ந்து கதை பேசுகிறோமே
அந்த உடகார்ந்து போகும் வழக்கே யோகம் செய்ய உர்க்கர்ந்து போவதையே
குறிப்பதாக எண்ணுகிறேன் .
எனவே கோகழியாண்ட குருமணிதன் என்பதில் கோகழி என்பது திருப்பெருந்துறை
என்ற உரைக் குறிப்பிடாது .அது ஆழ்ந்த சித்தர் இயலை குறிப்பதாக
கொள்ளலாம் .
கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !
--
A.Sugumaran , Pondy
இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும்
First Published : 21 Jan 2011 12:00:00 AM IST
பரமேஸ்வரனை பிரிந்திருந்த காலத்தில், அதுவும் "பசு' வடிவில் பூவுலகில்
இருந்த காலத்தில், எத்துணை துயருற்றிருப்பாள் அன்னை பராசக்தி? பின்னர்
பசு வடிவம் நீங்கப் பெற்ற உமாதேவியார், எம்பெருமானோடு சேர்ந்தபோது,
அவளைத் தாவியணைத்தெழுந்த கோலத்தை அடியார்களுக்கும் சிவபெருமான்
காட்டியுள்ள சிறப்பு, திருவாவடுதுறை திருத்தலத்திற்கே உரியது.
"அணைத்தெழுந்த பிரான்' என்ற அந்த அற்புதத் திருக்கோலம், வேறு எந்தத்
திருத்தலத்திலும் நாம் காணக் கூடியது அல்ல. இந்த "சந்தோஷ ஆலிங்கன
மூர்த்தி'யை வழிபட்டால் தடைபட்டு நிற்கும் திருமணம் விரைந்து கைகூடும்.
குறிப்பாக, பிணக்குகளால் பிரிந்து வாழும் தம்பதியர் மீண்டும் விரைவில்
இணைந்து வாழ்ந்திட இறையருள் கிட்டிடும்.
38 ஆண்டுகளுக்குப் பிறகு, திருவாவடுதுறை அருள்மிகு சோமுக்தீசுவரர்
ஆலயத்தில் திருப்பணிகள் செய்விக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற
இருக்கின்றது. இத்தருணத்தில் கோகழிநாதரின் சிறப்புக்களைச் சிறிது அறிந்து
கொள்வோமே!
கோகழி, கோமுக்தி நகர், நந்தி நகர், நவகோடி சித்திபுரம், அரசவனம், முத்தி
úக்ஷத்திரம், அகத்திய புரம், சிவபுரம், பிரமபுரம், துறைசை, கஜாரண்யம்,
தரும நகர் என்று வேறு பல காரணப் பெயர்களையும் கொண்டுள்ள தலம்தான்
திருஆவடுதுறை. இதன் தல புராணம், "துறைசைப் புராணம்' என்றழைக்கப்படுகிறது.
மயிலாடுதுறை} கும்பகோணம் சாலையில், நரசிங்கம் பேட்டைக்கு முன்,
இடதுபுறம் சாலையில் உள்ள ஆதீன வளைவின் வழியேயும், (கும்பகோணம் தடத்தில்
உள்ள) திருவாலங்காடு எனும் தலத்தில் இறங்கி, (1 கி.மீ.) குறுக்குச் சாலை
வழியேயும் கோமுக்தீசுவரர் ஆலயத்தைச் சென்றடையலாம். காவிரியாற்றின்
தென்பகுதியில் அமைந்த தேவாரத் திருத்தலம் இது. மயிலாடுதுறையிலிருந்து 16
கி.மீ. தொலைவில் உள்ளது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பதிகம்
பெற்றது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பெற்றது. திருமந்திரம்,
திருவிசைப்பா, திருவாசகம், பெரியபுராணம் ஆகிய நூல்கள் இத்தலத்தின்
சிறப்பைப் போற்றுகின்றன. திருமூலர், "திருமந்திரம்' என்னும் திருமுறையை
இத்தலத்தில்தான் படைத்தருளினார்.
ஆதீன திருமடம்
திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இத்திருக்கோயிலையொட்டியே,
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனமும், திருமடமும் அமைந்துள்ளது.
திருமடத்தின் நூலகம் பல அரிய நூல்களையும், ஏட்டுச் சுவடிகளையும்
கொண்டுள்ள கருவூலம் ஆகும். ஆதீனத்து "சரசுவதி மகால்' நூலகத்தின் மூலம்,
பல எண்ணற்ற அரிய நூல்களை வெளியிட்டுள்ள பெருமை திருமடத்தையே சாரும்.
அதுமட்டுமல்ல.... திருவாவடுதுறை ஆதீனம், இருபத்தி மூன்றாவது குரு
மகாசன்னிதானம், சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளின்
அருளாட்சிக் காலத்தில், ஆதீனத்திற்கு சொந்தமான அத்தனைத்
திருக்கோயில்களிலும் திருப்பணிகள் செவ்வனே நிறைவேற்றப்பட்டு, குடமுழுக்கு
விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இது ஆன்மிக அன்பர்களை மகிழ வைக்கும்
செய்தியாகும்.
பசுவாய் வந்தனள்!
தேவர் உலகில் பரமனுக்கும் பரந்தாமனுக்குமிடையே "சொக்கட்டான்' ஆட்டம்
நடைபெறுகிறது. நடுவராக அமர்ந்தது, அன்னை பராசக்தியே! விறுவிறுப்பான
ஆட்டம்! ஒரு புறம் மணாளன் மகேசன்! மறுபுறம் சோதரன் மாலவன்! பகடைகள்
உருளுகின்றன. எண்ணிக்கையில் பிரச்சனை உருவாக, அன்னை பகடையைச் சிறிதே
நகர்த்தினாள். அண்ணனுக்காக நெறி தவறியதால் பசுவாக மாறி பூவுலகில்
திரியும்படி அன்னையிடம் ஆணையிடுகிறார் ஈசன். உடனே தெய்வப்பசுவாக பூமிக்கு
வந்தாள் அன்னை. பல தலங்களை வலம் வந்தாள். மாதவனும் இடையனாக மாறி,
சோதரிக்கு துணையாகத் திரிந்தான். இந்த நெடிய பயணம் தேரழுந்தூரில்
துவங்கியது. தொழுதாயங்குடி எனும் தலத்தில் பசு மந்தையோடு சில காலம்.
அடுத்து, அசிக்காடு எனும் தலம்! அங்கே பொன்னே வடிவாக அமைந்திருந்த ஈசனின்
திருமேனியில் தனது ஆபரணங்களை சார்த்தினாள் அன்னை. கோமல் எனும் தலத்தைக்
கடந்து நச்சினார் குடியை அடைந்தாள். மாதவன் மாட்டுமந்தையை மேய்த்தது
மாந்தை எனும் தலத்தில்! அடுத்து திருக்கோழம்பம் எனும் தலத்தைக் கடந்து,
நந்தி புரத்தை அடைந்தாள்.
திருக்குளத்தில் நீராடியபின் கரையேறி, அங்கிருந்த அரச மரத்தடிக்குச்
செல்கையில், ஈசனை துதிக்கிறாள் பசுவடிவிலான, அன்னை! அங்கே, தானே
முளைத்தெழுந்த ஈசனின் திருமேனி மீது பாலைப் பொழிந்தாள். இதனால் மகிழ்ந்த
சிவபெருமான், உடனே காட்சி தந்தருளினார்.
"அணைத்தெழுந்தபிரான்'
பசு வடிவில் பல தலங்களை வலம் வந்து, பெருமானுடன் இணையாது பிரிந்திருந்த
அன்னைக்கு, ஈசனோடு இணைகின்ற "முத்தி' இங்கே கிட்டுகிறது. பசுவிற்கு
முத்தி தந்த ஈசனாக "கோமுக்தீசுவரராக' எம்பெருமான் திருவாவடுதுறையில்
காட்சி தந்து, அன்னையை ஆரத் தழுவிக் கொண்டார். அப்போது அன்னையை தழுவிக்
கொண்ட மகாதேவரே, "அணைத் தெழுந்த பிரான்' என்று அழைக்கப்படுகிறார்.
அம்பிகை ஒயிலாக நிற்க, அவளது தோளில் கரத்தை வைத்து அணைத்துக்
கொள்வதற்கேற்ப இடுப்பை வளைத்துள்ள கோலம், அற்புதமானது! ரத சப்தமியன்று,
குளத்தருகே எழுந்தருளி தீர்த்தம் வழங்குகிறார், அணைத்தெழுந்த பிரான்.
தான், ஜீவகோடிகளாகிய "பசு'க்களுக்குப் பதி என்பது அப்புறம்!
அம்பிகைக்குதான் முதல் "பதி' அதாவது, உயிர்த் துணைவன் என்று உலகிற்குக்
காட்ட நினைத்த பசுபதியாகிய பரமேஸ்வரன், ஆடிய திருவிளையாடல் இது.
திருக்கோயில் அழகு
திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் திருக்கோயில், ஏறக்குறைய பத்து ஏக்கர்
நிலப் பரப்பில் அமைந்துள்ள பெரிய கோயில் ஆகும். ஐந்து நிலை ராஜ
கோபுரமும், மூன்று பிராகாரங்களும் கொண்டது. வடக்குப் புற நுழைவாயிலில்,
புதிதாக 3 நிலை ராஜகோபுரமும் எழுப்பப்பட்டுள்ளது.
கோமுக்தி தீர்த்தம், திருக்கோயிலுக்கு முன்பு உள்ளது. அருகிலேயே தல
விருட்சமான அரச மரம் உள்ளது. நடராஜர் சபை, போதியம்பலம் எனும் அரசம்பலம்
ஆகியனவும் உள்ளன. தேவர்கள் வேண்டியதற்கேற்ப இறைவன் அரசமரத்தின் நிழலில்
அமர்ந்து, அம்பலத்தில் தாண்டவம் ஆடியதால் "அரசம்பலம்' என்று இவ்விடம்
பெயர் பெற்றது.
புத்திர தியாகேசர்
முசுகுந்த சக்ரவர்த்திக்கு புத்திரபாக்கியம் அருளி, "சுந்தர நடனம்'
ஆடியருள் செய்த கோலமே, "புத்திர தியாகேசர்' கோலம் ஆகும். போகர் முதலான
நவகோடி சித்தர்களுக்கு அட்டமா சித்திகளை அருளிய பெருமையுடைய தலம் இதுவே!
நந்தித்தலம்
திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமான் திருக்கோயில்களின் பரிவாரத்
தலங்களில், நந்தித் திருத்தலமாக விளங்குகிறது திருவாவடுதுறை. அதற்கேற்ப
இங்கே எழுந்தருளியுள்ள நந்தி, மிகப் பெரியது. இது நந்தியெம்பெருமானின்
உடலமைப்புக்கேற்ப வடிவமைக்கப்பட்ட கற்களை அடுக்கி உருவாக்கப்பட்ட மிக
வித்தியாசமான நந்தியாகும். இதனை "விஸ்வரூப நந்தி' என்பர்.
இத்தலத்தில் வாழ்ந்திருந்த திருமாளிகைத் தேவர் மீது படையெடுத்து வந்த
நரசிங்க மன்னனின் படைகளை அழித்திட, அதுல்ய குஜாம்பிகை, மதில்களிலிருந்த
நந்திகளையெல்லாம் சேர்த்து ஏகநந்தியாக்கி அனுப்பினாள் என்கிறது
தலபுராணம். அதனால் திருமதிலில் நந்திகள் இல்லை.
கோகழி நாதர்
கருவறையில், அணைத்தெழுந்தபிரான், "கோகழிநாதர்' சுயம்புமூர்த்தியாக
எழுந்தருளியுள்ளார். ஆவின் வடு திருமேனி மீது காணப்படுவதால், திரு ஆவடு
துறை எனப் பெயர் கொண்டது இத்தலம். போதியம்பலவாணர், மகாதாண்டவேசுவரர்,
கோமுக்தீசுவரர், பூஜைவாசேசுவரர், ஸ்வயம்வியக்தேசுவரர் (தானே
முளைத்தெழுந்தவர்) என்று வேறு திருநாமங்களும் கொண்டவர். கம்பீரமான
திருமேனியை பட்டாடை கொண்டு அலங்கரித்து, ஐந்து வகை மலர்மாலை கொண்டு
அழகூட்டி, நாகாபரணமும் அணிவித்து, அலங்கார தீப ஒளியில் தரிசித்திட கோடி
புண்ணியம் செய்திட வேண்டும்.
ஒப்பிலா முலையம்மை
தெற்கு நோக்கி தனி சந்நிதி கொண்டுள்ளாள் "அதுல்ய குஜாம்பிகை'. "ஒப்பிலா
முலையம்மை' என்று இத்தேவியை அழைக்கின்றனர். நான்கு கரங்களோடு அபய வரதம்
தாங்கி, நின்ற கோலத்தில் காட்சி தரும் கருணையே வடிவானவள். திருமாளிகைத்
தேவர் வாழ்ந்த இடமே ஆதீனம் ஆகும். அங்கு நமசிவாயமூர்த்திகள்
திருக்கோயிலும், திருமாளிகைத் தேவர் ஆலயமும் உள்ளன.
திருமூலர்
திருக்கோயிலின் மேற்குத் திருச்சுற்றில் "திருமூலர்' சந்நிதி உள்ளது.
ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைத் திருமந்திரமாகத் தொகுத்து
இப்பூவுலகிற்கு வழங்கிய திருமூலர் சந்நிதி, நன்கு பராமரிக்கப்பட்டு
வருகிறது. ஐப்பசி மாதம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
துணை வந்த விநாயகர்
பசு வடிவில் இருந்த உமையம்மைக்கு துணையாக வந்ததால் இத்தலத்தில் துணை
வந்த விநாயகராகக் காட்சி தருகிறார் கணபதி.
படிக்காசு
நந்தியெம்பெருமானுக்கு பின்னால் உள்ள பலிபீடமே திருஞானசம்பந்தர்
"பொற்கிழி' பெற்ற பலிபீடம். தனது தந்தையார் நடத்திய வேள்விக்காக, பூதம்
வாயிலாக 1000 பொற்காசுகளைப் பெற்ற அதிசயம் இத்தலத்தில் நிகழ்ந்தது.
நால்வர் சந்நிதி
புத்திரத் தியாகேசர் முன்னே, இரு கரங்கூப்பியபடி சுந்தரர்
எழுந்தருளியுள்ளதும், நால்வர் பெருமக்களுக்கும், சந்தானக்
குரவர்களுக்கும் தனி சந்நிதிகள் உள்ளதும் இக்கோயிலின் தனிச் சிறப்பு
ஆகும். பெரிய புராணத்தை நமக்கருளிய சேக்கிழார் பெருமானுக்கும் தனி
சந்நிதி உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
குடமுழுக்கு விழாக்கோலம்
நாளது 26-ம் தேதி, புதன் கிழமை, காலை 9.00 மணிக்கு மேல் -10.30
மணிக்குள் இவ்வாலயத்தில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மிகச்
சிறப்பாக நடைபெற உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் பங்கேற்று, அணைத்தெழுந்த
பிரானின் அருளைப் பெறுக!