:
---------------------------------------------------------------------------
அறத்துப்பால் --> துறவறவியல் --> புலால் மறுத்தல்
-->
---------------------------------------------------------------------------
1. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது
ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
௧. தன் உடம்பைப் பெருகச் செய்வதற்காகத், தான்,
மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன், எவ்வாறு அருளுடையவனாக இருக்க
முடியும்?
2. பொருளாட்சி போற்றார்க்கு இல்லை
அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
௨. பொருளுடையவராக இருக்கும் சிறப்பு,
அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அருளுடையவராக இருக்கும்
சிறப்பு, புலால் தின்பவர்க்கு இல்லை.
3. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது
ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
௩. ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின்
மனம், கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின்
நெஞ்சம் போல், நன்மையாகிய
அருளைப் போற்றாது.
4. அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன்
தினல்.
௪. அருள் எது என்றால், ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல்;
அருளல்லாதது எது என்றால், உயிரைக் கொல்லுதல்; அதன் உடம்பைத் தின்னுதல், அறம்
அல்லாதது.
5. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
௫. உயிர்கள், உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன்
உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது; ஊன் உண்டால், நரகம்
அவனை வெளிவிடாது.
6. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின்
யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார்
இல்.
௬. புலால் தின்னும்பொருட்டு, உலகத்தார்,
உயிர்களைக் கொல்லாதிருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர்
எவரும் இல்லாமற் போவர்.
7. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது
உணர்வார்ப் பெறின்.
௭. புலால் உண்ணாமலிருக்க வேண்டும்; ஆராய்ந்து
அறிவாரைப் பெற்றால், அப் புலால், வேறோர் உயிரின் புண் என்பதை
உணரலாம்.
8. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
௮. குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஓர்
உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த உடம்பாகிய ஊனை உண்ணமாட்டார்.
9. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செருந் துண்ணாமை நன்று.
௯. நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து,
ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று, உடம்பைத்
தின்னாதிருத்தல் நல்லது.
10. கொல்லான் புலாலை
மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
௧௦. ஓருயிரையும் கொல்லாமல், புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை,
உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
**************************************************************
**************************************************************
: