அம்மா சொல்படி ராஜூ: பகுதி 40:(அடுத்த கல்யாணம்)
30.11 2009
(நோய்,நொடி)
(...அப்போது மயக்கமாக இருக்கிறது என்பார்...)... மெட்றாஸில் ரத்னவேல் சுப்ரமணியம் 113 டாக்டர் என்று ஒருத்தர். அவர் தான் என் புருஷனுக்கு டீஸ்மென்ட் செய்தார் என்ன செய்வது. மருந்து வாங்குவது எல்லாம் சிலவுதான். ஆனால் புதுக்கோட்டை வாடகைக்கு விட்டிருந்தோம். நாங்களும் போய் வீட்டைக் கவனிக்க முடியவில்லை, குடியிருப்பவர்கள வாடகை தர நாளாகும். அப்படி இருக்கும்போது என் இரண்டாவது பிள்ளைக்கு பெண்கள் ஜாதகம் வர வந்தது.
அதே சமயம் பூனாவிலிருந்து என் மைத்துனர் தன் பெண்ணுக்கு கல்யாணம். திருப்பதியில் செய்யப் போகிறேன். நீயும் மன்னி எல்லாரும் வரவேண்டும் என்றும் எழுதியிருந்தார், அவர் எழுதினது என்ன என்றால் என்னுடைய ஆம்படையாள் வருவாள். அவன் உங்கள் வீட்டில் தங்கிக்கொண்டு நகைகள்,புடவைகள் எல்லாம் மெட்றாஸில் வாங்கப் போகிறான்.அதனால் அப்போது எல்லோரும் திருப்பதி போவோம் என்று லெட்டர் போட்டார், அதே போல் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து எல்லாம் சாமான்கள் வாங்கி வந்தார்கள். அதற்கு ஒரு வாரம் முன்பு ஆக என் கல்கத்தா நாத்தனாரும் கடைசி நாத்தனாரும் வந்தார்கள். அவர்களை இட்லிக்கு மற்ற எல்லா மாவுகளை அரைத்து வரும்படி என் மைத்துனர் அவர்களுக்கு லட்டர் போட்டிருந்தார். வந்தார்கள். எல்லாருமாக திருப்பதி போய்க் கல்யாணம் நடந்தது.
கல்யாணம் ஆன பிறகு அவர்கள் நேராக எங்கள் வீட்டிற்கு (வந்து) விட்டு ஊருக்குப் போனார்கள். அப்போது என் மைத்துனர் என் புருஷனை பூனா அழைத்துப் போனார். அங்கு ஒரு மாஸம் இருந்துவிட்டு வந்தார். அந்த சமயத்தில்தான் என் இரண்டாவது பிள்ளைக்கு பெண் பார்த்தோம். அந்தப் பெண்ணும் மெட்றாஸ்தான். எங்களுக்குப் பிடித்து இருந்ததால், நெய்வேலியில் பையன் இருந்தான் அவனுக்கு லட்டர் போட்டு வரவழைத்தோம், அவனும் பெண்னைப் பார்த்துவிட்டு சரியென்று சொன்னான். அதனால் உடனே நிச்சியம் செய்தோம். அவர்களும் கையில் வரதஷ்ஷிணை என்று மூவாயிரம் கொடுத்தார்கள்.
நாங்கள் தாலியும் சங்கிலியும் நீங்களே போடுங்கள் என்று அதற்கு உள்(ள) ரூபாயை பெண்ணுடைய அப்பாவிடமே கொடுத்தோம். ஏன் என்றால் என் புருஷன் உடம்பு சரியில்லாதவர் வேறு யாரும் நகை வாங்குவதற்கு இல்லை. அதனால் தான் கொடுத்தோம். பிறகு அவர்கள் மெட்றாஸிலே கல்யாணம் நடத்தினார்கள். நாங்கள் இருக்கும் வீட்டில் கல்யாணம் ஆவதற்கு முன்பு என் மாமியாரை நினைத்து கல்யாணம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்று ப்ரார்த்தித்துக் கொண்டு சுமங்கலிப் ப்ரார்த்தனை செய்தோம். அதற்கும் பட்டுப்புடவை வாங்கி கல்கத்தா நாத்தனாருக்குக் கொடுத்தோம். அந்த சமயம் நாத்தனார்கள் எல்லாரும் வந்தார்கள். ஆனால் கல்யாணத்தை என் புருஷன் பார்க்க முடியவில்லை. ஏன் என்றால் அவருக்கு ஷுகர், பெஷர் (ப்ரெஷர்) எல்லாம் இருந்ததால் அவருக்கு சத்தம் ஆகாது. அதனால் மாடியில் இருந்தபடி பார்த்தார்.
113. அவர் எனது ஆசான். கோட்டும், ஸூட்டுமாக, திருநீறும் குங்குமமும் அணிந்த இன்முகம். தந்தைக்கு மருத்துவம்; எனக்கு மனித நேயப்பாடம். அவர் இட்ட பணியை உடனே செய்து முடித்தேன். வாசகர்கள் விரும்பினால், அதை உரைப்பேன்.
(அடுத்த கல்யாணம்)
--