திருப்பூர் கிருஷ்ணன்
First Published : 15 Aug 2009 12:09:09 AM
ஸ்ரீஅரவிந்தர் திருச்சரிதம், பாரதியாருக்கு ரிக்வேதம் போதித்த பெருமகனின்
தேதிவாரியான அண்மைக்கால வரலாறு. வ.வே.சு. ஐயருடன் தியானம் பழகிய
தவமுனிவரின் வாழ்க்கை. சுதந்திரப்போரில் சிறையில் நேரில் கண்ணனைத்
தரிசித்த மகானின் அனுபவத் தொகுப்பு. வாழ்நாள் முழுவதும் இறை சக்தி
என்னும் அதிமனத்தைத் தன்னில் கீழிறக்கிக் கொள்ள முனைந்த ஆன்மிகச்
சாதனையாளரின் வியத்தகு விடாமுயற்சியின் விளக்கம். சித்தியடைந்த பிறகும்
நூற்றுப் பதினோரு மணிநேரம் உடலில் காலமானதற்கான புற அறிகுறிகளே
தென்படாதது கண்டு பிரெஞ்ச் அரசின் தலைமை மருத்துவர் இது ஓர் அறிவியல்
விந்தை எனச் சான்றுரைத்த ஆன்மிக உலகின் அதிசயம்.
பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக மனிதனிலிருந்து அதிமனிதன்
தோன்றுவான் என்றார் ஸ்ரீஅரவிந்தர். மரணம் என்னும் விதி மாறிவிடும்
என்றும், பசி, தாகம், பாலுணர்ச்சி முதலியவைகளும் மாறும் என்றும், உடல்
ஒளிமயமாகும் என்றும் அரவிந்தர் யோக திருஷ்டியில் கண்டு அறிவித்தார்.
பாரதியாருக்கு ஸ்ரீஅரவிந்தர்மேல் இருந்த மதிப்பு அபரிமிதமானது.
ஸ்ரீஅரவிந்தரது ஆங்கிலக் கவிதையை மொழிபெயர்த்த பாரதியார், இந்தியா இதழில்
எழுதிய குறிப்பு இதோ:
"தாய் நல்லுணவு சமைப்பதைப் பின்பற்றிக் குழந்தை மணற்சோறாக்கி
விளையாட்டுச் சமையல் செய்வதைப்போல் அந்த மகானுடைய செய்யுளை நான்
அன்பினால் மொழிபெயர்க்க நேர்ந்தது' (ஆதாரம் - பெ.சு.மணி எழுதிய "பாரதி
இலக்கியத்தில் வேத இலக்கியத்தின் தாக்கம்').
சுதந்திரப் போர் விறுவிறுவென வேகம் கண்ட காலம் அது. பிரிட்டிஷ்
அரசாங்கம் வங்கப் பிரிவினைக்கு வழிவகுத்தது. அந்தச் சட்டம் நடைமுறைக்கு
வந்த நாளை மக்கள் துக்க நாளாய் அனுசரித்தார்கள். பெண்கள் சமைக்கவில்லை.
கடைகள் திறக்கவில்லை. தாகூர் முஸ்லிம்களின் மசூதிகளுக்குச் சென்று,
"இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களே' என்று ராக்கி கட்டினார்.
அக்காலகட்டத்தில் தான், அரவிந்தர் சுதந்திரப் போராளியாக எழுச்சியுடன்
இயங்கலானார். விதேசித் துணிகள் கொளுத்தப்பட்டன. மணமகனோ மணமகளோ விதேசித்
துணி அணிந்திருந்தால் புரோகிதர்கள் திருமணச் சடங்கை நடத்த மறுத்தார்கள்.
இதற்கெல்லாம் தூண்டுகோலாக இருந்தது அரவிந்தரின் மேடைப் பேச்சு.
சுதந்திரப்போரில் ஓர் அங்கமாக அரவிந்தர் மாறிவிட்டார். அவரது பெருமைகள்
எங்கும் பேசப்படலாயின.
அரவிந்தரை அவர் வாழ்ந்த காலத்திலேயே கொண்டாடிய மகாகவிகள் இருவர். ஒருவர்
தமிழை உயர்த்திய தங்கக் கவி பாரதி. இன்னொருவர் நோபல் பரிசு பெற்ற வங்கக்
கவி தாகூர். புதுவை வந்த அரவிந்தரை வரவேற்றுப் போற்றியது தமிழ்
மகாகவியின் குணம். புதுவைக்கே அவரைத் தேடி வந்தது வங்க மகாகவியின் மனம்.
அரவிந்தர் குறித்து தாகூர் எழுதியுள்ள வரிகள் இதோ:
"ஸ்ரீஅரவிந்தர், மோனம் நிறைந்த அருளாவேச சக்தியைத் தம்மில் திரட்டி
வைத்திருக்கிறார். உள்ளொளி அவர் திருமுகத்தில் பிரகாசிக்கிறது. பழைய
ரிஷிகளின் வாக்கு அவர் மூலமாக ஒலிக்கிறது'.
அரவிந்தர் சுதந்திரப் போரில் பொய்க்குற்றச்சாட்டின் மூலம் கைதானார்.
சிறையில் தவம்செய்து கண்ணனை நேரில் கண்டார். விடுதலையான பின்
உத்தர்பாராவிலிருந்த தர்மரட்சணி சபையில் பேச அவருக்கு அழைப்பு வந்தது.
சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்தனர். அரவிந்தர் நிதானமாக, தெளிவாக,
கணீரென்று பேசினார். அவரது சிறை அனுபவங்களை தெய்வம் பேசுவதாகவே கருதி
மக்கள் ஆடாமல் அசையாமல் சித்திரப் பாவை போல் கேட்டனர். கண்ணனைக் கண்டதை
உள்மனக் காட்சி என அரவிந்தர் கூறவில்லை. நிதரிசனமாக நேருக்கு நேர் சக
மனிதரைக் காண்பதுபோல் கண்டேன் என்று உறுதிபடக் கூறினார்.
செய்தித்தாள்களில் இச்செய்தி வெளியானபோது பாரதியார் புதுச்சேரியில்
தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார். அவர் செய்தியின் உண்மையை அறிய
இந்தியா பத்திரிகை நிருபரைக் கோல்கத்தாவுக்கு அனுப்பினார். அதன்பின்
பாரதியார் எழுதியது:
"இந்தக் கலியில் பரமாத்ம தரிசனம் கிடைப்பது துர்லபமாதலால் சிறிது
ஐயம்கொண்டு பரமாத்ம தரிசனம் ஒருவேளை கனவிலேற்பட்டிருக்குமோ என்று
சங்கிப்பாராயினர். அரவிந்தரின் மறுமொழியைக் கேட்டவுடனே ஐயங்களெல்லாம்
தீர்ந்து போயின. அவர் மறுமொழி கூறும்போது அவர் முகத்திலே தோன்றிய
அடக்கத்தையும் அமைதியையும் சிரத்தையையும் நிஷ்கபடத் தன்மையையும்
ஒளியையும் கண்டவுடனே அரவிந்தர் மகாசித்தரென்பது தெளிவாய்விட்டது'.
அரவிந்தர்கூறியது: ஆம். நான் நாராயணனைக் காணப்பெற்றேன். எனக்கு நிகழ்ந்த
தரிசனங்களெல்லாம் விழிப்பு நிலையில் தோன்றின. கனவுகளல்ல'. (சீனி.
விசுவநாதன் தொகுத்த "அரவிந்தர் மகிமை').
சிறையிலிருந்து விடுதலையான சிறிது காலத்தில் ஸ்ரீஅரவிந்தர் வாழ்வை
முழுமையாக ஆன்மிகப் பணிகளில் அர்ப்பணிக்கும் வகையில் புதுச்சேரியில்
குடியேறினார். அரவிந்தர் முன்போல் அரசியலில் ஈடுபட வேண்டும் என மகாத்மா
தன் புதல்வர் தேவதாஸ் மூலம் அழைத்தார். லாலா லஜபதிராய் அரவிந்தரை நேரில்
சென்று அழைத்தார்.
இனி கண்ணன் காட்டிய ஆன்மிக வழியில் தான் முழுமையாக ஈடுபடப்போவதாக
அரவிந்தர் அறிவித்துவிட்டார். அதுமட்டுமல்ல. தியான ரீதியாக
சுதந்திரத்திற்காகத் தாம் உழைத்து வருவதாகவும் அந்த உண்மை புலப்படும்
வகையில் கண்ணன் சுதந்திர வரலாற்றில் தன்பெயர் நிலைக்கும்படி ஏதேனும்
முத்திரை பதிப்பான் என்று தாம் நம்புவதாகவும் அரவிந்தர் சுதந்திரம்
கிட்டுவதற்குப் பல ஆண்டுகள் முன்னதாகவே எழுதினார். என்ன ஆச்சரியம்!
அரவிந்தரது பிறந்த தினத்தில் தான் பாரதம் சுதந்திரம் பெற்றது.
"அரவிந்தர் அனுஷ்டித்து வரும் யோகம் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத புத்தம்
புதுமுறையில் அமைந்தது. அச்சிறந்த முறையை அனுஷ்டித்தே தமது தேகத்தைப்
பொன்மயமாக்கி அமிர்தகலசம் போல் விளங்குவார். அவரது பாதத்தில்தான் இன்னும்
சிறிது கருமை நிறம் இருக்கிறதாம். அதுவும் பொன்மயமாகிவிட்டால் அருள்ஞானம்
பெற்றவராய் விடுவாராம். அரவிந்தரைத் தரிசித்தவர்கள் ஒவ்வொருவரும் அவரது
சாந்தமயமான முகாரவிந்தத்திலும் கருணை பொழியும் கண்களிலும் லயித்துப்
போகின்றனர்' என்று எழுதினார், அரவிந்தரது சமகாலத்தில் வாழ்ந்தவரும்
பிரசண்ட விகடன் இதழின் ஆசிரியரும் நா.பா. லட்சுமி போன்றோரின் முதல்
சிறுகதைகளைத் தம் இதழில் வெளியிட்டவருமான நாரண துரைக்கண்ணன்.
ஸ்ரீஅரவிந்தரால் ஈர்க்கப்பட்ட இன்னொருவர் அறிஞர் வ.ரா. பின்னாளில் தன்னை
நாத்திகர் என்று இனங்காட்டிக் கொண்டவர். ஆனால் தன் வாழ்வின் கடைசிச் சில
மாதங்களில் இறைநம்பிக்கையோடு வாழ்ந்தவர். "அக்கிரகாரத்தில் பிறந்த
அதிசயப் பிறவி' என்று வேறு குழாமைச் சேர்ந்தவர்களால் புகழப்பட்டவர்.
பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வ.ரா., அரவிந்தரையும் பாரதியாரையும்
ஒப்பிட்டு எழுதியுள்ள வரிகள் இலக்கியநயம் நிறைந்தவை.
"பாரதியார் உயரத்தில் பெரியவர். அரவிந்தர் உருவத்தில் சிறியவர்.
பாரதியாரின் சொற்கள் முல்லை மலரின் தாக்கும் மணம் கொண்டவை. அரவிந்தரின்
சொற்கள் செந்தாமரை மலரின் பரந்துவிரிந்த அழகைத் தாங்கியவை. இருவர்
சொற்களிலும் கவிச்சுவை நிறைந்திருக்கும். பாரதியாரைப் போலவே அரவிந்தரும்
கலகலவென்று விடாமல் சிரிப்பார்'.
மகான்களில் எழுத்தாளர்களாகவும் அமைந்த ஆதிசங்கரர், சதாசிவப்
பிரம்மேந்திரர், வள்ளலார் போன்றோர் வரிசையில், அண்மைக் காலத்தில்
தோன்றியவர் அரவிந்தர். அவர் உலகப் பொதுமொழியான ஆங்கிலத்தில் எழுதியதால்
எல்லா நாடுகளிலும் அவரது இலக்கியம் வியப்போடு பயிலப்படுகிறது. மொழியில்
அடங்கமறுக்கும் நுண்ணுணர்வுகளைக்கூட மொழிக்கட்டுக்குள் கொண்டுவரும்
சொல்லாற்றல் அவரது தனித் தேர்ச்சி.
மகாபாரதத்தில் எழுநூறு வரிகளில் இடம்பெறும் சாவித்ரி சரிதத்தை புதிய
பரிமாணத்தில் இருபத்து நாலாயிரம் வரிகளில் பிரகாசப்படுத்திக்
காட்டுகிறார் அரவிந்தர்.
பாரதி, திலகர், காந்தி, வினோபா போல அரவிந்தரும் கீதைக்கு உரை
எழுதியிருக்கிறார். அர்ச்சுனன் போல், அரவிந்தரும் நேரடியாகவே
கிருஷ்ணரிடம் கீதோபதேசம் பெற்றவர்தானே! அர்ச்சுனனுக்குக் கீதை சொன்ன தலம்
போர்க்களம். அரவிந்தருக்கு கீதை சொன்ன தலம் சிறைக்களம். அர்ச்சுனன்
பங்குபெற்றது பாரதப் போர். அரவிந்தர் பங்குபெற்றது சுதந்திரப்போர்.
அரவிந்தர் சித்தி அடைந்துவிட்டாலும், அதிமனத்தை மண்ணில் இறக்கும் பணி
முடிந்துவிடுமா என்ன? அவரது பொன்னுடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மண்ணில்
புதையுண்ட தருணத்தில் ஒரு சாதகருக்கு மனதில் திடீரென ஒரு பிரார்த்தனை
உதித்ததாம். "தாங்கள் விட்டுச்சென்ற வேலை தொடர்ந்து நடக்கும் என்பதற்கு
உறுதிமொழி கொடுங்கள்' என்று பிரார்த்தித்தாராம். வங்காளியில் மிக
உறுதியான குரலில் "ஹபே, ஹபே, ஹபே!' (நடக்கும், நடக்கும், நடக்கும்) என்று
அரவிந்தர் கூறியதை அவர் கேட்டாராம். இப்படி ஒரு தகவல் "அது ஒரு
பொற்காலம்' என்று நீரத்பரன் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கத்தில் விஜயா
சங்கரநாராயணனால் பதிவாகியுள்ளது. நாமும் சொல்வோம். ஹபே, ஹபே, ஹபே!
ஸ்ரீஅரவிந்தரின் கனவுகள் அனைத்தும் கட்டாயம் நடக்கும், நடக்கும்,
நடக்கும்!
> மகான்களில் எழுத்தாளர்களாகவும் அமைந்த ஆதிசங்கரர், சதாசிவப்
> பிரம்மேந்திரர், வள்ளலார் போன்றோர் வரிசையில்,
நாம் பரனூர் கிருஷ்ணப்பிரேமி ஸ்வாமிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இலட்சம் கிரந்தங்களுக்கும் மேல் எழுதியாகிவிட்டது. `சுத்த பகவத்` விஷயம்
மட்டுமே கொண்ட சாரம் அது.
தேவ் போன்றோர் மேல்விளக்கம் தரலாம்.
க.>
நாம் பரனூர் கிருஷ்ணப்பிரேமி ஸ்வாமிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இங்கே படிக்கலாம் -
http://www.tamilhindu.com/2009/08/sri-aurobindo-uttarpara-speech-tamil/
இந்துத்துவம் தான் இந்திய தேசியம் என்பதை முதன்முதலாக தீர்க்கமான
சொற்களில் உலகுக்கு உரைத்த உரை, அதனால் வரலாற்றுச் சிறப்புப் பெற்றது.
மிக அருமையான கட்டுரை.
62 வருடங்கள் ஆகிவிட்டன, எப்போது சுதந்திரம் வரும் இன்னபிற கவிதை,
மடல்களைக் கண்டபோது அரவிந்தர் உரைதான் பதிலென்று தெரிந்தது.
சுதந்திரம் யாருக்கு வந்திருக்கிறது?
அச்சுதந்திரத்தை யார் காப்பாறுவர்?
ஜாதீயத்திலிருந்து இன்னும் ஆயிரம் பிரச்சனைகள் பட்டியிலிடப்பட்டன?
இப்பிரச்சனைகள் நம்மை விட்டு புறமானதா?
பிரச்சனையை புறத்தே வைத்துப் பார்ப்பதால் பிரச்சனை போய்விடுமா?
ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி?
என்கிறான் பாரதி? இந்த அந்நியர் உண்மையில் ஆங்கிலேயர்களா?
நாமே நமக்கு அந்நியமாகிப் போயிருக்கும் அவலத்தினால்தான் பிரச்சனைகளை
புறவயப்படுத்துகிறோம்.
ஜாதி இருக்கிறது. சரி. யாரிடம் இருக்கிறது?
ஊழல் இருக்கிறது. சரி. யாரிடம் இருக்கிறது?
நம்மை தவிர்த்து இவை அந்நியமாகி நின்று கொண்டு கூத்தாடுகின்றனவா?
தமிழர்களே! பிரச்சனை புறத்தினில் இல்லை.
நாம்தான் பிரச்சனை!!
நாம்தான் பிரச்சனை எனில், எப்படித்தீர்ப்பது?
இங்குதான் அரவிந்தர் பேசும் ஸ்நாதன தர்மம் வருகிறது.
சுதந்திரப்பிரச்சனை அரசியல் அல்ல, ஆன்மீகம் என்கிறார்.
அதுதான் எவ்வளவு உண்மை!
நம்மைவிட நமக்கு அணுக்கமாக யாரேனும் இருக்க முடியாது? இல்லையா?
பின் நம் பிரச்சனை என்னவென்று பார்க்கப்பழக வேண்டும்.
நம்மைவிட நமக்குத்தோழன், உற்ற துணை யாருண்டு?
எனவே நாம்தான் நம் பிரச்சனைகளை ஜெயிக்கவேண்டும்.
ஜெயமுண்டு பயமில்லை மனமே!
ஜெயமுண்டு பயமில்லை மனமே!
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்
ஆழி வண்ணன் என்னம்மான்
அந்தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே.
[திருவாய்மொழி 10.7.9]
வாழி மனமே! கைவிடேல்!!
உடலும் உயிரும் மங்கவொட்டேல்!!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
நா.கண்ணன்
--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !
*சுதர்சன் சிங் எழுதி நந்தலா என்ற அம்மையாரால் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டது. அப்பா, என்ன பக்தி, பாவம், இதய அனுராகம்
உருக உருக ஹிந்தியில் ஆசிரியர் எழுதியதை அப்படியே தமிழில்
வார்த்திருக்கிறார் நந்தலா*
இவர்கள் க்ருஷ்ண ப்ரேமையில் ஆழங்காற்பட்ட செங்கல்பட்டு
அம்மாவின் திருக்கூட்டத்தினர்; எளியேனுக்கும் இவர்கள் ஸம்பந்தம் உண்டு.
செங்கல்பட்டு அம்மா முனைவர் கண்ணன்
அவர்களுக்குக் கன்னிகா தானம் செய்தவர்.
பர தத்வமான பரனூர்ப் பெரியவரை உள்ளபடி உரைக்க இன்னுமொரு அவதார
புருஷனால்தான் முடியும்.
அன்பர்கள் மிகைக்கூற்று என்று நினைக்கவே வாய்ப்பதிகம்.
ஸுதர்சன் ஸிங்க் அனுராகத்தை ‘ப்ரதீக்ஷா’ எனும் கட்டுரையில்
சாறு பிழிந்து கொடுத்திருப்பார். சாதகம்போல் அவனருளே பார்த்திருக்கும்
மெய்யியலின் உச்சத்தை அதில் காணலாம்.
செங்கல்பட்டு ஸத்ஸங்கம் இல்லையெனில் தமிழகத்தில் இதற்கு இடமேது ?
தேவ்
On Aug 15, 5:30 am, Jataayu <jataay...@gmail.com> wrote:
> இந்தக் கட்டுரை குறிப்பிடும் ஸ்ரீஅரவிந்தரின் உத்தர்பாரா உரையின் முழு
> தமிழ் வடிவம் இன்று தமிழ்ஹிந்து.காம் தளத்தில் வந்துள்ளது -
>
> இங்கே படிக்கலாம் -
http://www.tamilhindu.com/2009/08/sri-aurobindo-uttarpara-speech-tamil/
>
உத்தரப்பாரை உரையைப் படிக்கிறேன்.
காஷ்மீர் மகாராஜா கரண்சிங் கொடையான அரவிந்தர் சிலை
2008-ல் புதுவையில் நிறுவப்பட்டது:
http://www.auroville.org/journals&media/avtoday/March_2008/statue.htm
பலகோணங்களில் டிஜிட்டல் ஒளிப்படம் எடுத்து
யாராவது கட்டுரை சிலை அமைந்த வரலாற்றை எழுதலாம்.
------
இன்னொன்று:
இந்திய அரசு வெளியிட்ட அரவிந்தர் தலை இரண்டு ரூபாய் நாணயம்:
http://www.siruvarulagam.com/numismatics/tworupeecoins.html
திருவள்ளுவர் நாணயமும் பார்க்கலாம்.
நா. கணேசன்
நேற்று அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஸுதர்சன் ஸிங்க் பற்றியும்
நந்தலாலா பற்றியும் சொன்னார்கள். நீங்கள் எல்லோரும் அரிய பல காரியங்களை
சத்தமே போடாமல் செய்கிறீர்கள். சத்சங்கி பத்மா குப்புசாமி மொழி
பெயர்த்துவிட்டு பேர் போடக்கூடாது என்று சொல்லிவிடுவாராம். அம்மா
சொன்னார்கள். காந்தியும், புத்தனும் பொத்தென்று குதித்துவிடவில்லை. அந்த
மண்ணில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது புரிகிறது.
அரவிந்தர் சொல்லும் உயர் மனிதன் நிச்சயம் தோற்றமுறுவான். மானுடம்
மேன்மையுரும். ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரும்.
வாழ்க!