திங்கள் பெயரால் மாத அளவையும் ஞாயிற்றின் பெயரால் ஆண்டளவையும் வகுத்திட்ட தமிழ் வள்ளுவர்கள் (கணியர்கள்) இட்ட கிழமைப் பெயர்களே உலக மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளன.
ஒளிரும் உடுவைக் குறிக்கும் சோதி என்னும் வேர்ச்சொல் சோதிடம் என்னும் சங்கதச் சொல்லை ஈன்றது. ஞாயிறு மண்டலத்தின் மீதுள்ள இருபத்தேழு நாள்மீன்களைக் கொண்ட வட்டத்தைச் சோதி மண்டலம் என்றோ சோதி வட்டம் என்றோ சொல்வர். இது சோதிடம் (சோதி + இடம்) என்னும் சொல்லாக ஆனது. கிரேக்கத்தில் Zodiokos என்றும், இலத்தீனில் Zodiacus என்றும், திரிந்து ஆங்கிலத்தில் Zodiac என்றானது.
விண்மீனைக் குறிக்கும் உடு என்னும் தமிழ்ச்சொல்லை வேராகக் கொண்ட உடுதசை ( Ududasa ) என்னும் சொல் அர்த்த சாத்திரத்தில் ஆளப்படுகிறது. உடுக்கணியம் ( Siderial Astroligy ) என்பது தான் 'உடுதசை' என்பதன் பொருளெனக் கவுடில்யரின் அர்த்த சாத்திரத்தின் ஆங்கில மொழியாக்கம் மொழிகிறது.
"செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித்
திசைநான்கு மாய்த் திங்கள் ஞாயி றாகி"
என்று, திருமங்கை ஆழ்வார் கூறுகிறார்.
வடமொழிகளில் வானியலிலும் கணிதத்திலும் வரும் அடிப்படைத் துறைச் சொற்கள் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களாகவும், தமிழ் வேர்ச் சொற்களாகவும், தமிழோடு கலந்த வடசொல்லாகவும் இருப்பதே கண்கூடான உண்மை.
ஆண்டுக் கணக்கு
ஞாயிறோ திங்களோ ஓர் உடுவோ மேழ ஓரையிலிலிருந்து தொடங்கி ஞாலத்தை ஒரு சுற்று வலம் வருவதற்கு எடுத்துக் கொண்ட காலவெளியையே ஓர் ஆண்டு எனத் தமிழர்களின் முன்னோர்கள் வகுத்தனர்.
ஆடு, மாடு போன்ற விலங்குகளின் பெயர்களை வானத்து உடுக்களுக்கு இட்டனர். ஓர் உடுக்கூட்டத்தை ஆடு வடிவினதாகக் கற்பித்து, அதற்கு மேழம் என்று பெயரிட்டனர்.
ஆட்டை யாடு எனக்குறிப்பிடுவது மிகத் தொன்மையான தமிழ் வழக்கு. அதனால், 'யாடு' என்பது 'ஆண்டு' என்றும் பொருள் பட்டது. ஆண்டைக்குறிக்கும் யாடு என்னுஞ்சொல் பின்னர் யாண்டு என நீண்டு, ஆண்டாகத் திரிந்தது.
ஆண்டு என்னுஞ் சொல் கடைக்குறைந்து ஆண் என்றாகி, ஆங்கிலத்தில் Annum எனத்திரிந்து Annum என்ற வேர்ச்சொல்லை வைத்தே Annual, Anniversary போன்ற சொற்கள் பிறந்தன.
யாடு என்னுஞ் சொல் யார் என்று திரிந்து பின்னர் ஆங்கிலத்தில் இயர் (Year) என்றாகியது.
மே எனக்கத்தும் ஆட்டின் ஒலியை வைத்தே மேசம் – மேழம் – மேடம் ஆகிய தமிழ்ச்சொற்களின் வேரிலிலிருந்து 'மேஃழம்' என்ற சங்கதச் சொல்லும் வந்தது. ஆட்டைக்குறிக்கும் வருடை என்ற தூய தமிழ்ச்சொல் உண்டு. வருடை என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து 'வருஃழ', வருஃழ்' போன்ற சங்கதச் சொற்கள் தோன்றின.
ஆண்டுக் கணக்கை உலகுக்கு ஆக்கித் தந்தவர்கள் தமிழ் வள்ளுவக் கணியர்களே என்னும் உண்மை இவற்றால் விளங்கும்.