
நட்சத்திரங்களுக்கு
முக்கியத்துவம் அளிக்கும் விழாக்களை, நம் முன்னோர் உருவாக்கியுள்ளனர்.
சித்திரை மாதம் சித்திரை (சித்ரா பவுர்ணமி), வைகாசி விசாகம், ஆனி உத்திரம்
(நடராஜர் அபிஷேக நாள்), கார்த்திகையில் கார்த்திகை (திருக்கார்த்திகை),
மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்), தைப்பூசம், மாசி மகம், பங்குனி
உ<த்திரம் (சாஸ்தா அவதார நாள்) ஆகியவை நட்சத்திர அடிப்படையில்
கொண்டாடப்படுகிறது.
ஒரு சமயம், பெரு வெள்ளத்தால் உலகம் அழிந்தது.
மீண்டும் உலகை படைக்க வேண்டும் என்பதற்காக, பிரம்மா தன் படைப்புக்கலன்களை,
ஒரு அமுத கலசத்தில் வைத்து, வெள்ளத்தில் மிதக்க விட்டார். அந்தக் கலசம்
கும்பகோணத்தை அடைந்தது. சிவன், அதை அம்பு எய்து உடைத்து, உலகை மீண்டும்
உற்பத்தி செய்தார். அந்த நன்னாளே மாசிமகம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும்
மகத்தை, “மகாமகம்’ என்கின்றனர்.
மாசிமகத்தன்று, கும்பகோணத்திலுள்ள
மகாமக குளத்தில் நீராடுவது சிறப்பு. இந்த குளத்தில், 20 தீர்த்தங்கள்
ஐக்கியமாவதாக ஐதீகம். உலகம் அழிவதற்கும், குளத்தில் நீராடுவதற்கும் என்ன
சம்பந்தம் இருக்கிறது என்றும் ஆராய வேண்டும். பாவங்கள், எப்போது
அளவுக்கதிகமாகிறதோ, அப்போது இறைவன் கோபமடைந்து உலகை அழிக்கிறான். அதன்படி,
பாவங்களைத் தொலைக்கும் வழியாக, சாஸ்திரம் வகுத்திருப்பதே தீர்த்தக்
குளியல்.
தீர்த்தத்தில் குளித்து விட்டால், பாவம் நீங்கி விடுமா
என்றால், இவ்வகை தீர்த்தங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். நல்லது –
கெட்டதை பகுத்தாயும் திறனைக் கொடுக்கும். எனவே, மனிதன் திருந்துகிறான்.
பாவம் செய்யும் எண்ணம் குறைகிறது. இதனால், உலகம் நற்கதியை நோக்கி பயணம்
செய்கிறது.
அது மட்டுமல்ல… பாவங்கள் நிகழ்வது பெரும்பாலும் பொருள்,
புகழ் உள்ளிட்ட உலகவியல் இன்பங்களுக்காகத் தான்! புகழ் பெற வேண்டும், நிறைய
சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன், தீர்த்த நீராடலால், நிறைந்த
மனோதிடத்தைப் பெறுகிறான். இதனால்தான், இந்த நட்சத்திர விழாக்கள் எல்லாமே
பவுர்ணமியில் நடக்கிறது. சந்திரன், மனோகாரகன் எனப்படுவான். அவன், நம்
மனநிலையில் எழுச்சியை ஏற்படுத்துவான். அன்றைய தினம் இறைவழிபாடு செய்யும்
போது, உள்ளத்தில் நம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை உள்ளவன் நினைத்ததை
சாதிக்கிறான்.
“அவர் போன வருஷம் தைப்பூசத்துக்கு பழநிக்கு போய்
வந்தார். இந்த வருஷம் பணக்காரனாகி விட்டார். எல்லாம் முருகன் கொடுத்தது…’
என்று சொல்வதன் பொருள் என்ன? முருகன் நேரில் வந்தா பொருளைக் கொடுத்தார்!
முருகன் அவர் மனதில் நம்பிக்கையைக் கொடுத்தார், அந்த நம்பிக்கை அவரை
ஜெயிக்க வைத்தது!
பவுர்ணமியை ஒட்டிய விழா நாட்களில், மலைக்கோவில்
அல்லது தீர்த்த வழிபாடு மிகவும் சிறப்பானது. பழநி, திருவண்ணா மலை,
கும்பகோணம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களுக்குச் சென்று வந்தால், மன உறுதியின்
அளவு இன்னும் கூடுதலாக இருக்கும். அதிலும் கும்பகோணம் மகாமக குளத்தில், 20
தீர்த்தங்கள், மகம் நட்சத்திர நாட்களில் கலப்பதாக ஐதீகம். இந்நாளில் அங்கு
சென்று நீராடினால், மனக்கவலை தீரும்; பொன், பொருள் விருத்தி, ஆயுள்
அபிவிருத்தி உண்டாகும். பயம் இருக்காது.
மகம் நட்சத்திரத்துக்குரிய
கிரகம் கேது. இவர் மோட்சகாரகர். ஆன்மிக யோகம் வேண்டுவோர், இந்நாளில் இறைவனை
வழிபட்டால், வானுலக வாழ்வு சித்திக்கும். இம்மைக்கும், மறுமைக்குமான
பலன்களை அடைய, கும்பகோணம் செல்வோம். மகாமக குளத்தில் நீராடி, கும்பேஸ்வரர்,
சாரங்கபாணியை வணங்கி, எல்லா நலனும் பெறுவோம்.