என் அண்ணி எனக்குத்தாய்
தாயில்லாத எனக்கு அவளே தாயானாள்.
நிலாக்காட்டிச்சோறு ஊட்டினாள்.
அவள் மடியில் நான் படுக்க
வந்தன பல நீதிக் கதைகள் .
அவள் ஜீஜாபாயாக ஆனாள் .
என்னைச்சிவாஜியாக ஆக்க ,,
கணக்கில் தவறு செய்ய
கன்னத்தில் விழும் செல்ல அடி
நான் அவள் கழுத்தை அணைப்பேன்
என் உச்சியில் ஒரு "இச்" கொடுப்பாள்,
அண்னனுக்கு ஆபிஸே உலகம்
எனக்கோ அண்ணியே உலகம்
கிரிக்கெட்டுக்கும் வருவாள்
என் சிக்சரில் மனமகிழ்வாள்.
இன்று நான் ஒரு ஆணழகன் .
மீசை முளைத்தத் துடி இளைஞன் ,
முதல் மாத சம்பளம் என் கையில்,
முகமலர அண்ணி வந்தாள் ,
"வாழ்த்துகள்"என்று கைக்குலுக்கினாள்.
முதுகில் மட்டும் ஒரு செல்லத்தட்டு
மடியில் இடம் கொடுத்த அண்ணி
இன்று மாறுபட்டு இருப்பதேன் ?
அணைக்கத்துடித்த என் கைகளை
எதோஒன்று தடுப்பதேன் ?
அண்ணியின் வளர்ப்பு முறையா?
மனதிற்கு ஒரு தடுப்பு முறையா ?