புல்லறி வேதுரை நல்லறி வேதுரை
புல்லிட வேயரு ளருணாசலா
‘ அருணாசலா, எது பொய்யான அறிவு,எது நிஜமான அறிவு என்று எனக்கு புரிய வை; புரிந்து உன்னில் அடைக்கலமாவதற்கு அருள் அருணாசலா “ என்று வேண்டுகிறார் பகவான் ரமணர் இந்த சுலோகத்தில்.
இன்னொருவிதமான விளக்கமும் இந்த சுலோகத்திற்கு கொடுக்கலாம்: “ நீ என்னை ஆட்கொண்டுவிட்டால் பிறகு நிஜ அறிவு பொய்மையான அறிவு என்ற பாகுபாடெல்லாம் ஏது? எனது அவித்யை, மித்யா போதம் எல்லாம் சூரியனைக்கண்ட பனித்துளி போல் மறைந்து விடாதா? ஆத்மஞானம் பெற்று விட்டால் இந்த உலக அறிவு எல்லாம் எதற்கு?’
இந்த சந்தர்ப்பத்தில் புல்லறிவு என்றால் என்ன? நல்லறிவு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்வது பயனுள்ளதாகும்.
ஏற்கனவே ஒரு அத்தியாயத்தில் பர வித்யா,அபர வித்யா குறித்து அறிந்தோம்.
இந்த பௌதிக உலகத்தைக் குறித்துள்ள அறிவு அபர விதயா என்று பரமனைக் குறித்துள்ள அறிவு பர வித்யா என்றும் கண்டோம்.
இன்னொரு வேற்றுமை என்னவென்றால் அறிவு ஞானத்திலிருந்து வேறுபடுகிறது. அறிவு நம் காதுகளில் விழுகின்ற,கண்களால் காணுகின்ற, மற்றவர்களைக் கண்டு நம் மனது உள்வாங்கிக் கொள்கின்ற தகவல்கள். அந்த தகவல்களை நாம் அனுபவங்கள் மூலம் உணரும்பொழுது ஞானம் ஆகிறது.நெருப்பு சுடும் என்று பெரியவர்கள் குழந்தைகளிடம் சொல்லுகிறார்கள். பெரியவர்கள் மீதுள்ள மரியாதை நிமித்தம் அதை நம்புகிறார்கள்.நெருப்பில் கையை வைத்து சூட்டை உணரும் பொழுது குழந்தை அந்த விஷயத்தில் ஞானம் பெறுகிறது
ரமணர் ஒரு முறை ஞானத்திற்கும் அஞானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தன் பக்தர்களுக்கு விளக்கி கூறினார்.
ஒரு நாள் ஆசிரம வாசியான சுந்தரேச ஐயர் என்பவர் “ மனோ விருத்தி” என்றல் என்ன என்று கேட்டார். அதற்கு பகவான் கீழ்க்கண்டவாறு பதில் கூறினார்:
“அதுவா? மனோவிருத்தியில்லாமல் ஆத்மாவை அறிய முடியாது. ஆத்மாவை அறிய வேண்டும்;,அறிந்துகொண்டோம்; அறிந்துகொண்டார்கள் என்று சொல்கிறார்களே,எப்படி தெரிந்துகொண்டார்கள்? தெரிந்து கொள்வதற்கு தானொருவன் இருக்க வேண்டுமல்லவா? தான் இருப்பதாக வைத்துக் கொண்டாலும்,இருக்கிறேனென்று தெரிந்து கொள்வதற்கு ஒரு விருத்தி வேண்டுமல்லவா? அதனால் உன்முகமான மனோவிருத்தியை ஞானமென்றும், அந்த விருத்தியே புறமுகமாகும்பொழுது அஞ்ஞானம் என்றும் சொல்கிறார்கள்.. அந்த அஞ்ஞானத்திற்கே மனமென்றும் சித்தமென்றும் பெயர்கள்.அந்த மனோவிருத்தி உன்முகமாகும்பொழுது புத்தியென்றும் அஹமென்றும் சொல்வார்கள்.. மனம் புத்தி, அஹங்காரம்,சித்தம் ஆகியவற்றின் சேர்க்கையே அந்தக்கரணம் அஹம் அசலமானது.(வெளியில் கிள்ம்பாதது.).இந்த அந்தக்கரணம் என்னும் உபாதியினால் புறக்கரணங்களான பஞ்சபூத சிருஷ்டி ஏற்பட்டது. அந்த பூதங்கள் தனித்னியாகவும் சேர்ந்தும் பல விதமாய் பெருகியதால் பலவகை அங்கங்களுடன் கூடிய பூதவுடலேற்பட்டது.அந்தக்கரணம் எனும் உபாதியினாலுண்டான இந்த பூத சிருஷ்டி அனைத்தையும் விலக்கி மனம் அந்தர்முகமாகும் பொழுது அதிலிருந்து ஞானம் உண்டாகிறது,.இதுவே விருத்திஜன்ய ஞானம் என்பது,”
இப்படிபட்ட ஞானத்தை பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயம் ஸாங்கிய யோகத்தில் விளக்கமாக அர்ஜுனனக்கு எடுத்துரைத்துள்ளார்.
கீதையின் முதல் அத்தியாயத்தில் அர்ஜுனன் விஷாதமக்னனாகி உள்ளம் தளர்ந்து ஆயுதத்தை கிழே போட்டுவிடுவதாக கூறப்பட்டுள்ளது. அர்ஜுனன் ஏன் மனம் தளருகிறான் என்பதை நாம் சிறிது ஆழமாக சிந்தித்து பார்க்க வேண்டும். அர்ஜுனன் தன் சொந்த பந்தங்களுடன் யுத்தம் செய்வதற்கு தயங்கி மனம் தளருகிறான்; அவனுக்கு தைரியம் பகருவதற்காகவும் அவனை யுத்தம் செய்வதற்கு தூண்டுவதற்காகவும் கிருஷ்ணர் கீதோபதேசம் செய்ததாக சில பல நூற்றாண்டுகளாக நம் நாட்டவர் சொல்லி வருகிறார்கள்.அது எவ்வளவு தூரம் உண்மை என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.
அர்ஜுனன தன் குருவோடும்,பாட்டனாரோடும் சகோதரர்களோடும் யுத்தம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன் அக்ஞாத வாச முடிவில் விராட ராஜ குமாரனுக்கு உதவுவதற்காக இதே பீஷ்மாச்சாரியரோடும், துரோணாச்சாரியரோடும் துரியோதனாதிகளொடும் யுத்தம் செய்திருக்கிறான். அப்பொழுதெல்லாம் ஏற்படாத மனச்சோர்வும் விரக்தியும் இப்பொழுது குருக்ஷேத்திர பூமியில் அதுவும் யுத்தத்திற்கு எல்லாவிதமான யத்தனங்களும் செய்து போர்க்களத்திற்கு வந்த பின் ஏன் ஏற்பட வேண்டும்.
இந்த மாற்றத்திற்கான காரணம் முன் சந்தர்ப்பங்களில் அர்ஜுனன் வ்யக்தி ( தனி மனித ) தலத்தில் நின்று தான் நிலைமையை ஆராய்ந்துள்ளான். இந்த முறை பாரத வர்ஷத்திலுள்ள எல்லா நாட்டு அரசர்களும் குருக்ஷேத்திர பூமியில் குழுமியுள்ளதை கண்ட பொழுது—ஒன்று பாண்டவர்கள் பக்கம் அல்லது கௌரவர்கள் பக்கம் பாரத தேசமே திரண்டு நின்றதைக் கண்ட பொழுது அர்ஜுனன் தனிமனித தலத்திலிருந்து சமஷ்டி-சமுதாய தலத்திற்கு உயருகிறான்; ஆகவே அவனுடைய திருஷ்டிகோணமும் மாறுகிறது. அவன் தன் சொந்த பந்தங்கள் இறக்கப்போவதைப் பற்றி நினைத்து மனம் மறுகவில்லை.ஒரு சமுதாயமே அழிவின் விளிம்பில் நிற்கின்ற காட்சியைக் கண்டு மலைக்கின்றான் இதற்கான சான்று கீதையிலேயே உள்ளது.
தத்ரபஸ்ச்யத் ஸ்திதிதாம் பாற்த்த: பித்ரூன்,அத பிதாமஹான் !
ஆசார்யாத்மஆதுலான் ப்ராத்ரூன் புத்ரான் பௌத்ரான் சகீன் ததா!!
ஸ்வசுரான்சுஹ்ருதஸ்சைவ ஸேன்யோருப்யோபி!!!
ப்.கீ அத்.1 சுலோ 26
அர்ஜுனனின் வேண்டுகோளுக்கு இணங்கி பார்த்தனுக்கு ஸாரதியாக எழுந்தருளியிருக்கும் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனின் ரதத்தை கௌரவ-பாண்டவ சைன்னியங்களுக்கு மத்தியில் கொண்டு நிறுத்துகிறார்; அர்ஜுனன் சைன்னியங்களையும் பார்த்து அங்காலாய்க்கிறான்:
அங்கே இரு சேனைகளிலும் இருக்கும் தந்தையரையும், பாட்டன்மாரையும், ஆசாரியர்களையும்,மாதுலரையும்,அண்ணன் தம்பிகளையும் மக்களையும் பேரர்களையும் தோழர்களையும் மாமனார்களையும் அன்பர்களையும் அர்ஜுனன் பார்த்தான்
இந்த சுலோகத்திலுள்ள பன்மை சொற்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அர்ஜுனனின் எத்தனை பாட்டன்மார்கள் யுத்த பூமிக்கு வந்திருக்கிறார்கள்; பீஷ்மரைத் தவிர ?
ஆசாரியர்கள் ஒத்துக்கொள்ளலாம்;அர்ஜுனன் துரோணரைத் தவிர மற்று சிலரை ஆசாரிய ஸ்தானத்தில் வைத்து பார்த்திருக்கலாம்
அண்ணன் தம்பி மார்கள் ;ஒத்துக்கொள்ளலாம்.
ஆனால் பேரர்கள், மாமனார்கள் என்கின்ற வார்த்தைகள் சந்தேகத்திற்கு இடமின்றி அர்ஜுனனின் சமுதாய கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துகின்றன.
அபிமன்யுவின் குழந்தைகூட இன்னும் அதன் தாயின் வயிற்றில்த் தான் உள்ளது. பேரர்கள் எங்கிருந்து வந்தார்கள்? ஒன்றுக்கு மேற்பட்ட மாமனார்கள் யுத்த பூமியில் இல்லை.
ஆகவே அர்ஜுனன் சமூகத்திலுள்ள புத்திரர்கள் மாமன்மார் ,பாட்டானார்கள், பேரர்கள் என்று எல்லோரையும் குறித்து கவலை கொள்கிறான் என்பது தெளிவாகிறது.
வியாச முனிவருக்கு வார்த்தை பிரயோகத்தில் தவறு நேர்ந்திருக்ககூடும் என்றும் நினைப்பதற்கில்லை.
இந்த மனம் குழம்பிய நிலையிலுள்ள அர்ஜுனனுக்கு ஒரு தோழனாக ,மனசாட்சியின் காவலனாக கிருஷ்ணன் நல்லறிவை ஊட்டுவதற்கு முயலுகிறான். இது தான் சரியான வழி என்று அறுதியிட்டு கூறாமல் அர்ஜுனனை சிந்தித்து முடிவெடுக்கும்படி கூறுகிறான். யுத்தம் தான் சரியான மார்க்கம் என்று கிருஷ்ணன் உபதேசிக்கவில்லை. கீதையை ஒரு யுத்தோபதேசகீதையாக பாரத சமுதாயம் பார்க்கத் துவங்கியது பல நூற்றாண்டுகள் நம்மை அடிமைபடுத்திய மொகாலய ஆட்சி காலத்திலும் அதற்கு பின் உண்டான மேற்கத்திய –குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலும் தான். திவீர நாட்டுப் பற்று காரணமாக நமது அன்றைய தேசத் தலைவர்களும் மதத் தலைவர்களும் அந்த சிந்தனையை ஊக்குவித்தார்கள்.,ஒரு போராட்ட குணமுள்ள சமூஹத்தை உருவாக்குவதற்காக.
பகவத் கீதையை முழுமையாக பார்க்குமிடத்து அது ஒரு உலக சமாதான கீதை என்பது விளங்கும்.அது ஊக்குவிப்பதெல்லாம் அஞ்ஞானத்திற்கும் ஞானத்திற்கும் இடையேயுள்ள நம் மனதினுள்ளே நடக்கும் போரைத் தான்
குருக்ஷேத்திரத்தில் பீஷ்மர் துரியோதனனுக்கு உற்சாகத்தை ஊட்ட சிம்மனாதம் செய்து சங்கை ஊதி போரை துவக்க முயன்ற பொழுது,கௌரவ படை சங்குகளையும் பேரிகைகளையும் தம்பட்டங்களையும் முழக்கியபொழுது பாண்டவர் தலைவனான யுதிஷ்டரர் எதிர் சங்கொலி கொடுப்பதற்கு முன் பகவான் போரை நிறுத்துவதற்கான கடைசி முயற்சியாக தன் பாஞ்சன்யம் என்ற சமாதான சங்கை ஊதுகிறார். ஆனால் அதுவும் பலிக்கவில்லை.யுத்தம் நிகழ்கிறது.
அனுகீதையில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கூறுகின்ற இடம் ஒன்று வருகிறது:” கிருஷ்ணா,நீ அன்று யுத்தபூமியில் சொன்ன உபதேசங்களை இன்னொரு முறை கூறுவாய்,என் மனதில் ஒன்றும் நிற்கவில்லை”
கிருஷ்ணர் அதற்கு. கூறிய பதில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று
.” பார்த்தா,அன்றிருந்த நிலைமை வேறு; இன்றுள்ள நிலைமை வேறு. எனக்குத் தெரியும் நான் சொன்னது எதுவும் உனக்கு பயனளிக்கவில்லை என்று. நீ யுத்தம் செய்தாய்; அதன் பலனை இன்று காண்கிறாய்.இருந்தாலும் நான் அன்று கூறிய கருத்துக்களை மிகவும் சுருக்க மாக சொல்கிறேன் கேள்”.
இதிலிருந்து நண்றாக விளங்குகிறது பகவான் யுத்தத்தை ஆதரிக்கவில்லை.அவர் சொல்லையும் மீறி நடந்த போர் குருக்ஷேத்திர போர்.அது சர்வ நாசத்திற்கு தான் வழி வகுத்தது.
கிருஷ்ணர் கீதையில் குறிப்பிட்டதெல்லாம் நமது அந்தராத்மாவில் ஏற்படுகின்ற போரைக் குறித்துதானே தவிர,மனிதனுக்கும் மனிதனுக்கும் ஏற்படுகின்ற போரை அல்ல. நம்முள்ளே ஏர்படுகின்ற போரில் நல்லறிவை உட்கொண்டு புல்லறிவை ஒதுக்கிவிட்டு ய்க்ஞ சங்கல்பத்துடன் கர்மங்களை இயற்றினால் உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவும் என்று தான் பகவான் கிருஷ்ணன் கீதையில் அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.அதை நாம் புரிந்துகொண்ட விதத்தில் தான் தவறு நேர்ந்துள்ளது.
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறிய நல்லுரைகள் என்ன என்ற பார்ப்பதற்கு முன் அர்ஜுனன் பகவானிடம் வேண்டிக்கொண்டதை சுருக்கமாக பார்ப்போம்:
கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா: !
யச்சரேய: ஸ்யான்னிஸ்சிதம் ப்ருஹி தன்மே
சிஷ்யஸ்தே அஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம்!!
“மனம் குழம்பி போயிருக்கின்ற எனக்கு நல்ல அறனெறியை போதிப்பாய் கிருஷ்ணா “ என்று அர்ஜுனன் கேட்கிறான்.
இந்த வேண்டுதல் பகவத் கீதை இரண்டாம் அத்தியாயம் ‘ஸாங்கிய யோகம்” ஏழாம் சுலோகத்தில் வருகிறது.
உபனிஷதுகள் ;மனிதரால் தேடப்படுகின்ற இரண்டு உன்னத நிலைகளை, ஸ்ரேயஸ், ப்ரேயஸ் என்று இரண்டு விதமாக பிரித்து கூறுகின்றன.
இதில் ப்ரேயஸ் பௌதிக பொருள்களினால் உண்டாகின்ற சிறப்புக்களை குறிக்கின்றது. அதே நேரத்தில் ஸ்ரேயஸ் ஆன்மாவின் முன்னேற்றத்தை குறிக்கின்றது. ஸ்ரேயஸ் பெறுகின்றவன் சான்றோனாகின்றான்.
மனதின் –ஆன்மாவின் ஏழ்மையை கார்பண்யம் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்..
கார்பண்ய நிலைகளிலிருப்பவர்கள் பிறர் பார்த்து இரங்குகின்ற நிலையில் உள்ளவர்கள். அர்ஜுனன் தன்னை அந்த நிலையிலுள்ளவனாக நினைக்கின்றான்; ஏனென்றால் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போயிருந்தான். ஆகவே சிஷ்ய பாவம் பூண்டு .பகவானிடம் அடைக்கலாம் ஆகி அறிவுரை வேண்டுகிறான். நாமும் ஏதாவது நெருக்கடியில் மாட்டிக்கொண்டால் பகவானை சரணடைந்து அவரின் அருளையும் அறிவுரையும் பெறுவதற்கு பிரார்த்திக்கலாம்.
பகவத்கீதை இரண்டாம் அத்தியாம் முழுவதும் பகவான் அர்ஜுனனுக்கு அருளுகின்ற அறிவுரைகள் தான்,
பகவான் கிருஷ்ணர் 11 ஆவது சுலோகத்தில் யோகத்திற்கு அஸ்திவாரம் யாது என்று விளக்குகிறாற்.12 வ்து சுலோகத்தில் ஆத்மாவின் அழிவின்மையை விள்க்குகிறார். 13 வது சுலோகத்தில் மரணம் என்றால் என்ன என்றும் 16 முதல் 20 ஆவ்து சுலோகம் வரை சத் என்றால் என்ன,அசத் என்றல் என்ன என்றும் விளக்குகிரார் கீதாச்சாரியன். முடிவாக 21 வது சுலோகத்தில் நிஷ்காமிய கர்மம் என்ன என்றும் அப்படி பற்றற்று இருப்பது சாலச் சிறந்தது என்றும் கூறுகிறார் கிருஷ்ண பரமாத்மா.
அசோஸ்யானன்வசோசஸ்த்வம் ப்ரக்னாவாதான்ஸ்ச பாஷவே
சுதாசூனகதாஸூன்ஸ்ச நானுசோசந்தி பண்டிதா: !!
ப்.கீ அத் 2 சுலோ 11
இங்கு பகவான் அர்ஜுனனின் இரட்டை மன நிலை சரியல்ல என்று எடுத்துரைக்கிறார். ஞா.னத்தின் முதல் படியே நாம் செய்யப்போகின்ற கர்மங்களை நினைத்து விசனப்படாமல் இருப்பது தான். செய்யப்போகின்ற கர்மங்கள் சரியில்லை என்று தோன்றினால் செய்யாமலிருக்க வேண்டுமே தவிர நான் இதை செய்யவேண்டியுள்ளதே,;அதனால் விபரீத பலன்கள் உண்டாகுமே என்று எண்ணி துக்கிப்பது அறிவாளிகளுக்கு அழகல்ல.என்கிறார் பகவான்.
எண்ணம், வாக்கு, செயல் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று பொருந்தி கர்மம் செய்யப்படவேண்டும் .இது தான் ஆத்ம சாக்ஷாத்கரத்திர்கான்( யோக நிலையை) அடைவதற்கான முதல் படி என்கிறார் கிருஷ்ணர்.
வள்ளலார் இராமலிங்க அடிகளார் இன்னும் ஒரு படி மேலே போய்
“ உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்’ என்று சொல்லியுள்ளார்.,
அடுத்த சுலோகத்தில் கிருஷ்ணர் ஆத்மாவிற்கு அழிவில்லை;யாரும் பிறப்பதும் இல்லை,இறப்பதுமில்லை; என்கிறார். ஆகவே நாம் எதற்கும் துன்பம் அடைய வேண்டியதில்லை என்கிறார்.
ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜனாதிபா:!
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம் !!
சுலோ 12
நாம் யாரும் இதற்கு முன் இல்லாமலிருந்ததுமில்லை; இந்த உடல்கள் அழிந்து போன பின்பு இல்லாமலிருக்கப் போவதும் இல்லை. சுருங்க கூறினால் நான் என்பது ஆத்மா;அதற்கு அழிவில்லை;அது பிறப்பதும் இல்லை;இறப்பதும் இல்லை. பகவான் ரமணரும் நான் யார் என்ற விசார மார்க்கத்தின் மூல இந்த உண்மையை கண்டறிய சொல்கிறார்.இதுதான் நல்லறிவின் முதல் பாடம். இந்த நல்லறிவே நமக்கு நித்ய சாந்தியை தரும்.
மீதியை அடுத்த மடலில் பார்ப்போம்.