தாத்தாவும் பேரனும்
தாத்தா நேற்று உன்னைச் சுற்றி நிறைய தாத்தாக்கள் பார்க்கில்
உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்களே என்ன விஷயம்.
ஒன்றுமில்லை அவர்கள் சங்கத்தில் ஏதோ தகராறு. ஒன்றுமில்லாத விஷயத்தை
பெரிதாக பண்ணி அவர்களுக்குள்ளே ஒரு சச்சரவு. பூசல். கூச்சல்.
என்னிடம் கேட்டபோது நான் சங்கத்திற்கு வரமாட்டேன். எனக்கு அமைதி தேவை
என்றேன். பொதுவாக வயதானவர்கள் மதிக்கப்படவேண்டுமானால்
1. தேவையற்ற பேச்சைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
2. குற்றம் குறை இருந்தாலும் பொறுமையாக இனிமையான வார்த்தைகளால்
எடுத்து சொல்லவேண்டும். நாம் சொல்வதோ செய்வதோ தான் முறை என்ற
தவறான எண்ணம் கூடாது. நமக்குத் தெரியாதது மற்றவருக்கு
தெரிந்திருக்கலாமே என்ற ஞானம் உள்ளே இருக்கவேண்டும்.
3. மூத்தவர்களின் ஒவ்வொரு செயலும், சொல்லும் பிற ருக்கு
எடுத்துக்காட்டாக முன்னுதாரணமாக, பின்பற்ற ஏற்றுக்கொள்ளத் தக்கதாக அமைய
வேண்டும்.
4. பெரியவர்கள் வாழ்ந்து அனுபவம் பெற்றவர்கள் என்ற
எதிர்பார்ப்புக்குத் தக்க நடந்துகொள்ள மேற்சொன்னவையே சான்றாக
இருத்தல் அவசியம்.
5. விரோத மனப்பான்மை மனதில் இருந்து அகன்று அந்த இடத்தில் மற்றவர்
மீது அன்பும் மரியாதையும் கலந்து நிரம்பி இருக்கவேண்டும்.''
''தாத்தா பணம் சேர்த்து வைத்தால் தவறு என்கிறார்களே?''
பணம் செல்வம் என்ற பெயர் கொண்டது. ''செல்வோம்'' என்று அது கை
மாறிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் தான் அதற்கு முன்னோர்
இந்த பெயரிட்டு இருக்கிறார்கள். ஒரே இடத்தில் தங்கி யாருக்கும்
பிரயோசனமாக இல்லாவிட்டால் அதால் வரும் துன்பங்கள் தான் அதிகம்.
நிறைய சொத்துக்கள் இவ்வாறு நீதி மன்றங்களில் முடங்கி கிடக்கிறது.
ஆகவே தான் இருக்கும்போதே நிறைய தர்மம் தானம் செய்ய வேண்டும் என்று
அனைத்து சாஸ்திரங்களும் சொல்கின்றன. வள்ளுவர் குறள் ஒன்றில் ''
ஊருணி நீர் நிறைந்தற்றே பேரறிவாளன் திரு '' என்கிறதன் அர்த்தம், எப்படி
ஒரு ஊரில் இருக்கும் பொதுக்கிணறு அந்த ஊர் மக்கள் இறைக்க இறைக்க
மேலே மேலே நீர் ஊறிடுமோ அது போல் செல்வந்தன் ஒருவன் அறிவுள்ளவனாக
இருப்பின் அவன் அளிக்கும் தானமும் தர்மமும் மேலே மேலே அவனை அதில்
ஈடுபட செய்யும். மிடாஸ் என்ற ஒருவன் எதைத் தொட்டாலும் தங்கமாக மாற
வரம் பெற்று பசியில் உணவைத் தொட்டபோது அதுவும் தங்கமாக மாறி உண்ண
முடியாமல் தவித்த கதை தெரியுமல்லவா.
நாம் எப்படி உதவ வேண்டும் என்று ஒரு கதை சொல்கிறேன்.
பரசுராம நகர் 3 வது தெருவில் உள்ள ஒரு சின்ன பார்த்தசாரதி சுவாமி
கோவிலில் ஏறக்குறைய இருபது முப்பது பேர் தன்னுடைய கதையை கேட்க
வந்திருப்பதில் ஸ்வரபூஷண சங்கீத ஸ்லோக கதா காலக்ஷேப சிம்மம் சுப்பு
சாஸ்திரிக்கு பரம சந்தோஷம். கர்ணனின் தான தர்மங்களை விஸ்தாரமாக
சொல்லி முடித்தார்.
வெகு நன்றாக பிரசங்கம் செய்து முடித்து சபையை பெருமிதத்துடன்
நோக்கியபோது பித்தளை செம்பு கும்பகோண பாத்திரக்கடை சோமசுந்தரம்
பிள்ளையின் தலை குனிந்து விசனத்துடன் இருப்பதைக் கண்டார்.
" என்ன சோமு, எதையோ பறி கொடுத்தமாதிரி..!! எல்லோருக்கும் நல்லதையே
செய்யும் நாராயணன் உன்னை சந்தோஷமாக வாழ வைத்திருக்கும்போது
ஏன் கவலை?? என்றார்.
"சாமி, என்னை எல்லோரும் கஞ்ச பிரபு கருமி என்கிறார்களே, என் சொத்து பூரா
இந்த கோயிலுக்கு தானே எழுதி வச்சிருக்கேன். ??
இதுக்கா கவலை? உனக்கு பசுவும் பன்றியும் என்கிற கதை சொல்றேன் கேள்.
பசுவை பார்த்து பன்றி கேட்டது.
"உன்னை மட்டும் எல்லோரும் கொண்டாடறாங்களே, என்னை திட்றாங்களே.??!! நீ
பால் மட்டும் தான் கொடுக்கிறே.நான் என்னுடைய உடல் இறைச்சியையே
கொடுக்கிறேனே. விதவிதமாக தின்னுட்டும் இளக்காரமா பேசுறது ஏன்??
பசு சொன்னது: "தம்பி நான் உயிரோடிருக்கும்போதே எல்லோருக்கும் பால்
தினமும் தரேன். நீ செத்தப்புறம் தான் உன் சதையை திங்கிறாங்க.
புரிஞ்சுதா? .
இந்த கதை அர்த்தம் சோமசுந்தரத்துக்கு புரியாவிட்டாலும் நாம் புரிந்து
கொள்ளவேண்டியது
நீதி:
"வாழும் போதே உன்னாலான உதவியை எப்போதும் இடைவிடாமல் செய். பசுவாக உன்னை
போற்றுவார்கள். "